Monday, March 12, 2012

டெரர் கும்மி விருதுகள் 2011: முடிவுகள் இன்னும் சில மணிநேரங்களில்...




டெரர்கும்மி விருதுகள் 2011-ற்கான முடிவுகள் அனைத்தும் தயாராகிவிட்டன. இன்னும் சிலமணி நேரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. ஒன்பது பிரிவுகளுக்கான சிறந்த முதல் இரண்டு பதிவுகளுக்கும், ஒரு ஹால் ஆஃப் ஃபேம் பதிவருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 




கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும், ஆதரித்தவர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். வெற்றி பெற இருப்பவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 




சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துப் பதிவுகளும் படித்து அவை அந்தப் பிரிவுக்கு பொருத்தமானவையாக இருக்கின்றனவா, விதிமுறைகளின் படி இருக்கின்றனவா என்று முழுதும் ஆராயப்பட்ட பின்னரே நடுவர்களுக்குத் தரப்பட்டன. அந்த வகையில் எங்கள் டெரர்கும்மி உறுப்பினர்களுக்கு நல்லதொரு வாசிப்பனுபவம். டெரர்கும்மியின் தொழிநுட்ப குழுவினரால்தான் இது சாத்தியமானது என்பதை பெருமையுடன் இங்கே நினைவு கூர்கிறேன்.





டெரர்கும்மி 2011 விருது முடிவுகள் இன்னும் சிலமணி நேரங்களில் டெரர்கும்மியில்


தற்போதைய செய்தி:
முடிவு வந்து விட்டது... டெரர்கும்மி 2011 விருது முடிவுகள்



நன்றி: கூகிள் இமேஜஸ்

Saturday, March 10, 2012

கோடீஸ்வரன் நிகழ்ச்சி, கேள்விகள் வெளியானது...!

பதிவர்களுக்கான சிறப்பு கோடீஸ்வரன் நிகழ்ச்சி விரைவில் நடக்க இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதற்கான கேள்விகளை உங்களுக்காக நமது பறக்கும் படை அவுட் செய்துள்ளது, பயன்படுத்தி ஒரு கோடியைத் தட்டிச் செல்ல முயலவும்.


எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்...?


இதற்கு பதில் தெரிந்தவர்கள் மேற்கொண்டு கேள்விகளை பார்க்கலாம்.




1. கில்மா படம் என்றால் என்ன?
அ. பிட்டுப்படம்
ஆ. மலையாளப்படம்
இ. சீன் படம்
ஈ. திரைப்படம்

2. மொக்கைப்பதிவு என்று சொல்லப்படுவது எது?
அ. மொக்கைப் பதிவர்கள் எழுதுவது
ஆ. பிரபல பதிவர்கள் எழுதுவது
இ. சில பதிவர்கள் எழுதும் அனைத்துமே
ஈ. எதுவுமே இல்லாமல் வெட்டியாக எழுதுவது

3. வடை என்றால் என்ன?
அ. டீக்கடையில் கிடைப்பது
ஆ. வடிவேலுவுக்கு கிடைக்காதது
இ. திருடித் தின்பது
ஈ. படத்தில் பார்ப்பது

4. மொய் என்றால் என்ன?
அ. கமெண்ட்டிற்கு கமெண்ட் போடுதல்
ஆ. ஓட்டிற்கு ஓட்டு போடுதல்
இ.  பதிவர்கள் நண்பர்கள் ப்ளாக்கில் இருந்து F5 அமுக்குதல்
ஈ. திருமணத்திற்கு சென்று வயிறு முட்ட சாப்பிடுவது

5. உள்குத்து பதிவு என்றால் என்ன?
அ.  சண்டையை தொடங்குவதற்கு முன் முன்னோட்டம் பார்க்கும் பதிவு
ஆ. குத்துமதிப்பாக எழுதிவிட்டு உள்குத்து என்று டிஸ்கி போட்டு அனைவரையும் குழப்புதல்
இ. சகஜமாக இருப்பதாக காட்டிக் கொண்டே அடுத்தவரை தாக்குதல்
ஈ. பரபரப்புக்காக எழுதப்படுவது

6. பதிவுலக அரசியல் பற்றி கீழ்கண்டவற்றில் எது சரி?
அ. கும்பலாக ஓட்டுப்போடுதல்
ஆ. கும்பலாக மைனஸ் ஓட்டுப்போடுதல்
இ. கும்பலாக சேர்ந்து சில பதிவர்களை தாக்கி கும்முதல்
ஈ. கும்பலாக சேர்ந்து சிலரை கண்டு கொள்ளாமல் விடுதல்

7. பதிவுலக நாட்டாமைகள் என்பவர்கள் யார்?
அ. எதையுமே கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்
ஆ. யாரும் கூப்பிடாமலே வாலண்டியராக வந்து பஞ்சாயத்து பண்ணுபவர்கள்
இ. ஆபாசமாக பதிவு எழுதுபவர்கள்
ஈ. அதிக ஹிட்ஸ் வாங்குபவர்கள்

8. ஆபாசப் பதிவர்கள் என்பவர்கள் யார்?
அ. அருவருப்பான மிருகங்களின் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் பதிவர்கள்
ஆ. உள்குத்து பதிவர்கள்
இ. ஆபாசமாக பின்னூட்டம் போடுபவர்கள்
ஈ. கில்மா படம் பார்ப்பவர்கள்

9.  கும்மியடித்தல் என்றால் என்ன?
அ. சுற்றி நின்று கொண்டு கையைத் தட்டிக் கொண்டே பாடுதல்
ஆ. கும்மி என்ற பதிவரை அடித்தல்
இ. சாட்டில் பேசுவதைப் போல் கமெண்ட் போடுதல்
ஈ. சம்பந்தமே இல்லாத கமெண்ட்களைப் போடுதல்




10. மகளிர் தினம் பற்றி உங்கள் கருத்து?
அ. சுலபமாக ஒரு பதிவை தேத்த உதவும் நாள்
ஆ. பிகர்களுக்கு வாழ்த்துச் சொல்லி கவர் பண்ண உதவுவது
இ. மகளைப் பெற்றோர் தினம்
ஈ. விழிப்புணர்வு பேச்சு பேச உதவும் நாள்

11. நல்ல படம் என்பது
அ. நல்ல படம்
ஆ. பிரபல பதிவர்கள் அவர்கள் விமர்சனத்தில் நல்ல படம் என்று சொல்லும் படம்
இ. பவர்ஸ்டார் படம்
ஈ. கில்மா படம்

12. சிறந்த பதிவர் என்பவர்
அ. எல்லாவற்றையும் குற்றம் கண்டுபிடிப்பவர்
ஆ. எல்லாருடைய ப்ளாக்கிலும் சென்று ஓட்டு, கமெண்ட் போடுபவர்
இ. பிரபல பதிவர்
ஈ. ப்ளாக் வைத்திருந்தும் பதிவே எழுதாதவர்

13. உங்கள் பார்வையில் சிறந்த பதிவு என்பது,
அ. யாருக்குமே புரியாதவை
ஆ. பிரபல பதிவர்கள் எழுதுவது
இ. நீளமான பதிவு
ஈ. அதிக ஓட்டுக்கள் வாங்கும் பதிவு

14. பிரபல பதிவர்கள் என்பவர்கள் யார்?
அ. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்
ஆ. ப்ளாக்கை ஆரம்பித்து வைத்துவிட்டு, ஃபேஸ்புக், ட்விட்டரில் கிடப்பவர்கள்
இ. உள்குத்து பதிவு போடுபவர்கள்
ஈ. கமெண்ட்டிற்கு பதில் சொல்லாதவர்கள்

15. இலக்கியவாதிகள் என்பவர்கள்,
அ. கெட்ட வார்த்தையில் சண்டை போடுபவர்கள்
ஆ. ஆபாசமாக டபுள் மீனிங்கில் பின்னூட்டம் போடுபவர்கள்
இ. ஆபாச சாட்டிங் செய்பவர்கள்
ஈ. யாருக்கும் புரியாமல் எழுதுபவர்கள்

16. சிறந்த பின்னூட்டமாக நீங்கள் கருதுவது,
அ. எனது வலையில் இன்று
ஆ. நீங்களும் சம்பாரிக்கலாம்
இ. Pakirvukku nandri
ஈ.பதிவு அருமை





படங்களுக்கு நன்றி: கூகிள் இமேஜஸ், ஃபேஸ்புக் நண்பர்கள்

Monday, February 27, 2012

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்...


கிளிங் பீமு கோழிகள்



உங்க வீட்டுல ஆறுக்கு நாலு அடி இடம் இருக்கா சார்? அது போதும். நாங்களே வந்து நடுவீட்ல எங்க செலவுல குழிவெட்டி, வெயிட் வெயிட்... குழிவெட்டி பீமு பண்ணை வெச்சுத்தருவோம். கையோட 3 ஜோடி குஞ்சுகளையும் கொடுத்துடுவோம். ஒரு குஞ்சு 5 லட்சம் ரூபாய். குஞ்சுகளுக்கு சாப்பாடுன்னு தனியா எதுவும் கொடுக்க வேணாம். வீட்ல மீந்து போறத போட்டா அதுவே தின்னுக்கும். என்ன ஒரு சின்ன பிரச்சனை, சாப்பாடு சரியில்லேன்னா கடிச்சி வெச்சிடும். அதனால நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க, எங்களுக்கு போன் பண்ணிட்டீங்கன்னா நாங்களே ஒருத்தரை அனுப்பி ஊசி போட்டுவிடுவோம், அட பயப்படாதீங்க சார் உங்களுக்கு இல்ல கோழிக்கு....!  

கோழி நல்லா வளரனும்னா அதுக்கு தொடர்ச்சியா ஃபேன் போட்டுவிடனும். இப்போ இருக்கற பவர்கட் பிரச்சனைல அது கஷ்டம்கறதால, அதுக்கு நீங்க கண்டிப்பா ஜெனரேட்டர் வாங்கி வைக்க வேண்டி இருக்கும். கோழிக்கு போனது போக, மிச்சம் கரண்டை நீங்க வீட்டுக்கும் பயன்படுத்திக்கலாம். பவர்கட் நேரத்துல ஹாயா இருக்கலாம். பீமு கோழிகளால் இப்படியும் ஒரு நன்மை. 

அப்படியே 5 மாசம் வரைக்கும் கோழி வேகமா வளரும். உங்க வீட்டு கூரை சின்னதா இருந்தா உடைச்சிக்கிட்டு வளர்ந்துடும். (அதுனாலதான் ஆரம்பத்துலேயே குழிவெட்டி வெச்சிடுறோம், புரியுதா?). அப்புறம் கோழி 64 மாசம் வரை வளர்ந்துட்டே இருக்கும். சோறு கறி கொழம்புன்னு எல்லாத்தையும் போடனும். திடீர்னு பக்கத்துல போறவங்களை தலைல கொட்ட ஆரம்பிக்கும். அதோட முட்டை போடுற பக்குவம் வந்துடுச்சுன்னு புரிஞ்சிக்கனும். உடனே அதை தனியா புடிச்சு கட்டி வைக்கனும்.

முட்டை போட்டதும் பத்தரமா எடுத்து வெச்சிடுங்க, அதை விக்கிறதுக்கு நீங்க எங்கேயும் போய் அலைய வேணாம். நாங்களே வந்து வாங்கிக்குவோம். (அதுவரை நாங்க இந்த ஊர்லயே இருந்தா...!). ஒரு முட்டைய 5000 ரூபாய் கொடுத்து வாங்குவோம். (வாங்கி இன்னொருத்தர் பண்ணை வைக்க 50000 ரூபாய்க்கு வித்துடுவோம்). ஒரு கோழி ஆறு மாசத்துக்கு ஒரு முட்டை போடும். ஒரு கோழியின் வாழ்நாள் 240 மாசம். சோ 240 முட்டை, 240 x 5000 = 12 லட்ச ரூபாய், சுளையா சுலபமா சம்பாதிக்கலாம்.

கோழிய கறியா விக்க விரும்புனா நீங்களே ஏதாவது வீட்டு விஷேசம், ஹோட்டல் ஆர்டர்னு பார்த்து ரொம்ப சுலபமா (?) வித்துக்கலாம். கிலோ 4500 ரூபாய் வரை போகும். அதோட கக்காவுல இருந்து மெடிசின் தயாரிக்கிறாங்க. அதுனால நீங்க குஞ்சு வளர்க்கறீங்கன்னு கேள்விப்பட்ட உடனே பலநாட்டு மருந்து கம்பெனிகளும் உங்க வீட்டுக்கே வந்துடுவாங்க. இதுக்கு மேலேயும் ஏன் தயக்கம்? உடனே ஆரம்பிங்க. 



டுபாக்கூர் ரியல் எஸ்டேட்ஸ் வழங்கும் கேனை கார்டன்ஸ் 



எங்கள் டுபாக்கூர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக பல இடங்களில் வெற்றிகரமாக (?) வீட்டுமனை விற்பனை செய்து வருகிறது. 

இப்போது உங்களுக்காக சென்னைக்கு மிக அருகில் சுமார் 388 கிமீ தூரத்தில்  வீட்டு மனைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மிக அருகில் 250 கிமீ சுற்று வட்டாரத்திலேயெ அமைந்திருக்கின்றன. 

வீட்டு மனை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து வெறும் 15 கிமீ தூரத்தில்தான் சாலைகள் உள்ளன. எனவே இப்போதே வாங்கிப்போட்டால் எதிர்காலத்தில் மதிப்பு பலமடங்கு உயரும் என்பது உறுதி.  இது ஒரு விஐபி ஏரியா. மிக அருகிலேயே 350 கிமீ தூரத்தில் ஏர்போர்ட் இருப்பதால் பல நாட்டவரும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. நீங்களும் சொந்தமாக (?) ஒரு விமானம் வைத்திருந்தால் வசதியாக அதிலேயே வந்து செல்லலாம். 

ஞாயிறுதோறும் எங்கள் செலவிலேயே இலவசமாக வீட்டுமனையை பார்வையிட அனைவரையும் அழைத்து செல்கிறோம். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டால் அங்கே எங்கள் ஆட்கள் வந்து அழைத்துச் செல்வர், டிக்கட் செலவு தனி. 

சதுர அடிக்கு ரூ 2999 மட்டுமே, முதலில் புக் செய்யும் 10 பேருக்கு ஒரு துண்டு இலவசம். மற்றவர்களுக்கு ஒரு டிஸ்யூ மட்டுமே இலவசமாக கிடைக்கும் எனவே முன்பதிவுகளுக்கு முந்துங்கள்!

எங்களிடம் பெரிய நகரங்களில் ஆளில்லாமல் கிடக்கும் வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனைக்கு உள்ளன. விரும்புபவர்கள் பணத்துடன் நேரடியாக வரவும்.

நன்றி: கூகிள் இமேஜஸ், பிரபல தொலைக்காட்சிகள்

Thursday, February 23, 2012

துப்பாக்கி (எ) டுப்பாக்கி: ஒரு உன்னத அனுபவம்




பதிவர்களுக்காக பழைய டாகுடர் படங்களைத் தீவிர ஆய்வு செய்து டாகுடரின் புதுப்பட விமர்சனங்களை நாம் முன்கூட்டியே தருவது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இப்போது உங்களுக்காக டுப்பாக்கி. 

இப்படம் நிறுத்தப்பட்டதாக திடீரென்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடந்ததென்று டைரக்டருக்கும் டாகுடருக்கும் மட்டுமே தெரியும்.  இருந்தாலும் ரசிகப் பெருமக்களுக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சியை போக்கவும், ஒருவேளை படம் தடைபட்டாலும் ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தினாலும் இந்த விமர்சனத்தை உடனடியாக வெளியிடுகிறோம். பரபரப்பான இக்கதையை சஸ்பென்சாக திரையரங்கில் சென்று கண்டுகளிக்க விரும்புபவர்கள் உடனே ப்ளாக்கை விட்டு அப்பீட் ஆகிக் கொள்ளவும்.

ஓப்பனிங் சீன். அது ஒரு அழகான கிராமம். திருவிழா நேரம். முக்கியமான நிகழ்வாக பன் சாப்பிடும் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது. டாகுடரின் தங்கை, நண்பர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நேரம் கடந்து கொண்டிருக்கிறது. பஞ்சாயத்து பெருசுகள் பொறுமையிழக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெருசு என்னய்யா டைம் ஆகிட்டே இருக்கு, இன்னுமா பூமி வர்ராரு? சீக்கிரம் ஆரம்பிங்கய்யா என்று அங்கலாய்க்கிறது. எல்லோரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் நமக்கும் படபடப்பாக இருக்கிறது. வழக்கமான டாகுடர் படங்கள் போல் இல்லாமல் மிகவும் பரபரப்பாகவும் வித்தியாசமாகவும் இந்த ஓப்பனிங் காட்சியை எடுத்ததற்கு இயக்குனருக்குப் பாராட்டுக்கள். ஹேட்ஸ் ஆஃப்...!

அப்போது திடீரென புலி உறுமும் சத்தம் கேட்கிறது. எல்லாரும் பதறிப்போய் திரும்பி பார்க்கிறார்கள். நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. பயங்கரமான உறுமலுடன் ஒண்டிப் புலி கெட்டப்பில் டாகுடர் எங்கிருந்தோ பறந்து வந்து நடுவில் குதித்து, அப்படியே சைடில் திரும்பி கேமராவை பார்த்து புன்னகைக்கிறார். உடனே தடதடவென ஓப்பனிங் சாங் ஆரம்பிக்கிறது. பாடல் முடியும் வரை நம்மால் சீட்டில் உக்காரவே முடியவில்லை. அட, நாமும் நம்மையறியாமல் டான்ஸ் ஆடி விடுகிறோம் என்று சொல்கிறேன். 

பாடல் முடிந்ததும் வழக்கம் போல் இல்லாமல் மிக வித்தியாசமாக டாகுடர்  வெட்டி நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்து குறும்புச் சேட்டைகளில் ஈடுபடுவது, தங்கையுடன் செல்லமாக சண்டை போடுவது என்று காட்சிகள் வைத்தது நல்ல ஐடியா. குறிப்பாக தங்கையுடன் வரும் பாச காட்சிகளில் டாகுடரின் நடிப்பில் புதிய பரிமாணம் மின்னுகிறது. தங்கை சாப்பிடாமல் இருக்கும் போது தானும் சாப்பிடாமல் இருப்பது ஹைலைட்.

தங்கை பாசமுடன் வாங்கிக் கேட்ட ரிப்பனை காசு கொடுத்து வாங்க முடியாமல் திருடிக் கொண்டு வருவதும், மாட்டிக் கொண்டு அடிவாங்குவதும் அற்புதம். அந்தக் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் அடிவாங்கியதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த ரிப்பனை தங்கச்சிக்கு கொடுக்க முடியவில்லையே என்று அவர் அழுவது பிரமாதமான நடிப்பு. ஒரு ஆக்சன் ஹீரோ செண்டிமெண்ட் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று பாடமே நடத்தி இருக்கிறார் டாகுடர். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த வருடம் சிறந்த நடிகருக்கான அனைத்து விருதுகளையும் அள்ளப் போவது டாகுடர் தான். பாராட்டுக்கள்.  

இப்படி பாசமாக இருந்த தங்கை டவுனில் இருந்து வந்த ஒருவனை விரும்புகிறாள். டாகுடருக்கு இது தெரிய வந்ததும், தங்கச்சிக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்து அவன் ஒரு தீவிரவாதி என்று கண்டுபிடிக்கிறார். குளத்தங்கரை, சந்தை, தென்னந்தோப்பு, பஸ் ஸ்டாப்பு என்று மிக ஆபத்தான இடங்களில் ஒளிந்திருந்து வில்லனைப் பற்றி கண்டுபிடிக்கும் காட்சிகளை மிக மிகத் திரில்லிங்காக படமாக்கி இருக்கிறார்கள். டாகுடரும் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அந்தக் காட்சியை படமாக்கிய விதமும், கேமரா கோணங்களும் தமிழ் சினிமாவுக்கே புதுசு. வழக்கமாக டாகுடர் படங்களில் வருவது போல இல்லாமல் தனியாகவே சென்று வில்லனுக்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதையும், அவர்கள் சென்னையில் ஒரு பெரிய பேங்கை கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டுவதையும் கண்டுபிடிப்பது, அதை போலீசிடம் சொல்வது என்று டாகுடர் கலக்கியெடுத்திருக்கிறார். இப்படம் டாகுடர் ரசிகர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே கொண்டாட்டம் தான். 




போலீஸ் வழக்கம் போல் மெத்தனமாக இருந்து விடுகிறது. அந்த ஸ்டேசனில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இருக்கிறார். அவர் டாகுடரை தனியாக தாய்லாந்தில் இருக்கும் ஒரு பாரில் சந்திக்கிறார். வில்லனிடம் இருக்கும் அரசியல் பேக்ரவுண்ட் பற்றி சொல்லி போலீசால் வில்லனையும் அவன் கும்பலையும் எதுவும் முடியாது என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். வில்லனை ஒழித்துக் கட்டும் வேலையை டாகுடர் தான் செய்ய முடியும் என்று அந்த போலீஸ் ஆபீசர் கெஞ்சுகிறார். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு டாகுடரும் சம்மதிக்கிறார். போலீஸ் ஆபீசர் தன்னிடம் உள்ள ஸ்பெசல் ராசி டுப்பாக்கியை எடுத்து டாகுடரிடம் கொடுத்து சென்னை சென்று எல்லாவற்றையும் முடித்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கிறார். போலீஸ் வரும் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக தத்ரூபமாக அமைந்திருப்பது படத்திற்கு கை கொடுக்கிறது. 

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். இவர் இனி தமிழ் சினிமாவில் போலீசாக ஒரு ரவுண்டு வருவார் எனலாம். அந்த பார் சீன் முழுவதும் கழுதை கத்துவது போன்று வரும் பின்னணி இசையில் இசையமைப்பாளரின் உழைப்பு தெரிகிறது. நல்ல ஒலிசேர்ப்பு. 

இடைவேளைக்குப் பின்னர் டாகுடர் சென்னைக்குச் சென்று தீவிரவாத கும்பலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்கான காட்சிகளின் நீளத்தை இயக்குனர் சற்றுக் குறைத்திருக்கலாம். சென்னைக்கு வந்து முதல் நாளே டாகுடர் வில்லனை பின்பற்றிச் சென்று உடனே அவர்களின் இடத்தை தெரிந்து கொள்கிறார். ஆனால் பின் ஏன் எதுவும் செய்யாமல் சவால் விட்டுவிட்டு திரும்பி விடுகிறார் என்றுதான் புரியவில்லை. பின்னர் வரும் காட்சிகளில் டாகுடரும் வில்லன் ஆட்களும் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் எல்லாம் தீப்பொறி பறக்கிறது. ஆனால் சண்டையைத் தொடங்காமல் ஏய்ய் ஏய்ய் என்று சிறிது நேரம் மாறி மாறி கத்திவிட்டு சென்றுவிடுவது பரபரப்பின் உச்சகட்டம். அனைத்துமே பார்ப்பதற்கு திகிலாக மிகவும் அருமையாக வந்திருக்கிறது. 

டாகுடர் போலீஸ் ஆபீசர் கொடுத்த அந்த ஸ்பெசல் டுப்பாக்கியை அடிக்கடி எடுத்துப் பார்த்துவிட்டு வைத்துக் கொள்ளும் காட்சி ஏ ஒன் ரகம். நடுவே  டெல்லியில் இருந்து வரும் ஒரு உளவுத்துறை அதிகாரி டாகுடரை வந்து பார்த்து சென்னையை தீவிரவாதிகளிடம் இருந்து டாகுடர்தான் காப்பாற்ற வேண்டும் உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார். இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார். பரபரப்பான காட்சியாக வந்திருக்க வேண்டியது, செண்டிமெண்ட் காட்சியாகிவிட்டது, ஆனால் டாகுடரின் நடிப்பில் அதுவும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. 

ஹீரோயின் சைடு வில்லனின் தங்கையாக வருகிறார். சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். டிக்கட்டே எடுக்காமல் பஸ்சில் சென்று வரும் அவரை டாகுடர் எதேச்சையாக டிக்கட் செக்கிங்கில் இருந்து காப்பாற்றுகிறார். டிக்கட் செக்கர்களுக்கும் அவருக்கும் நடக்கும் சேசிங் விறு விறு ரகம். பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். அங்கிருந்து உடனடியாக ஹீரோவும் ஹீரோயினும் டூயட்டுக்கு சென்றுவிடுவது நம்மை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறது.

அதன்பிறகு டாகுடர் எவ்வாறு வில்லன்களை ஒழித்துக்கட்டி சென்னையை காப்பாற்றுகிறார் என்பதையெல்லாம் வெண் திரையில் காண்க. படம் எப்படியும் 2012-ல் வந்துவிடும். உங்கள் ஊரில் உள்ள ஏதாவது நல்ல தியேட்டரில் சொந்தக்காசில் டிக்கட் எடுத்துப் பார்க்கவும். 

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று சொல்ல வேண்டும் என்றால் டாகுடரின் தங்கைக்கும் வில்லனுக்குமான காதல் என்னாகிறது என்று கடைசிவரை காட்டாததுதான். கிளைமாக்சிலாவது டாகுடர் வில்லனை பேசி திருத்தி தங்கச்சியுடன் சேர்த்து வைப்பது போல் காட்சி வைத்திருக்கலாம். வில்லன் கும்பல் நவீனரக மெசின் கன்கள் வைத்திருந்தும், அதை கடைசிவரை அவர்கள் பயன்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் டாகுடரிடம் இருக்கும் அந்த டுப்பாக்கியைப் பார்த்து அனைவருமே பயப்படுவது போன்று வைத்திருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு. அதே போல் இடைவேளைக்குப் பிறகு ஹீரோ கழுத்தில் ஒரு கேமராவை தொங்க விட்டபடியே வருவது இயக்குனரின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.




டுப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ படம் நெடுக ஒரு டுப்பாக்கியை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடைசிவரை அது பயன்படுத்தப்படவே இல்லை. இயக்குனர் டுப்பாக்கியை பின்நவீனத்துவ குறியீடாக பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களுக்கு எதையோ உணர்த்த முயன்றிருக்கிறார். நல்ல முயற்சி. இப்படியான முயற்சிகள் தமிழ்சினிமாவில் வருவதை அனைவரும் வரவேற்க வேண்டும்.

பாடல்கள் அனைத்துமே நன்றாக வந்திருக்கின்றன. டாகுடர் ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும். அந்த ஓப்பனிங் சாங்தான் இன்னும் ஒரு வருடத்திற்கு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப் போகிறது. படம் நெடுக வரும் டாகுடரின் பஞ்ச் வசனங்கள் நெஞ்சில் இடியாய் இறங்குகிறது.  வசனகர்த்தா தன் பொறுப்பை உணர்ந்து எழுதி இருக்கிறார். டாகுடர் இந்தப் படத்திலும் வாயில் கோலிக்குண்டை உருட்டியபடியே வருவது உலகத்தரம்.

சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும், டாகுடரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு கலக்குகிறார்கள். படம் பார்க்கும் நாமும் நிஜமாவே கலங்கித்தான் போகிறோம். படம் முடிவதற்குள் மூன்று, நான்கு முறை வயிற்றையும் கலக்கி விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இப்படம் வரப்பிரசாதம். சுலபமாக தினமும் ரெண்டு ஷோ பார்த்து விடலாம். ஏற்கனவே நிற்காமல் போய்க் கொண்டிருப்பவர்கள் செலவு பார்க்காமல் நல்ல டயாப்பர் ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு தியேட்டருக்குச் செல்வது உத்தமம்.

மொத்தத்தில் டுப்பாக்கி தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம். அனைவரும்  தவறாமல் பார்த்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

நன்றி: கூகிள் இமேஜஸ், சினி சவுத்

Monday, February 20, 2012

தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா....?


தமிழ்நாட்டு மானத்த நானேதான் காப்பத்தனுமா.... ஓகே ஐ வில் ட்ரை..

*******


ரமேஷ்: ஏன்டா அது எப்பவும் போஸ்ட்மேன் தான் வர்றாங்க, போஸ்ட் வுமென்லாம் வேலைக்கு வைக்க மாட்டாங்களா?

டெரர்பாண்டியன்: போஸ்ட்வுமென் வெச்சா அப்புறம் லெட்டர் டெலிவரி ஆக பத்து மாசம் ஆகிடும்ல..... அதான்....


********

டாக்டர்: பாபு உங்க உடம்பை குறைக்கனும்னா தினமும் நாலு மைல் நடக்கனும்....

பாபு: சரி டாக்டர், நாளைக்கே நாலு மயிலு வாங்கி நடக்க வெச்சிடுறேன்...

டாக்டர்: ???!!


********


நம்ம நாய் நக்சும், ரமேசும் ஹோட்டலுக்கு போயிருந்தாங்க. அங்க டேபிள்ல இருந்த கிளாசை பார்த்துட்டு,

ரமேஷ்: என்ன கிளாஸ் இது, மேல க்ளோஸ் பண்ணி இருக்கு, இதுக்குள்ள தண்ணிய எப்படி ஊத்துவாங்க?

நாய் நக்ஸ்: தண்ணியாவது மேல ஒரு ஓட்டைய போட்டு ஊத்திடலாம். ஆனா கீழே ஓப்பனா இருக்கே, தண்ணி எப்படி உள்ள நிக்கும்?


********

இந்த தாடிக்காரன் கூட போறதுக்கு பதிலா இத அடகு வெச்சி செட்டில் ஆகிடலாமா?

*******


விக்கி தக்காளி பர்மா பஜாருக்கு போனாரு, பர்மா பஜார்ல ரேட் தாறுமாறா சொல்லுவாங்க அதுனால எதை எடுத்தாலும் பாதி விலைக்குத்தான் கேட்கனும்னு மனோ வெவரமா முன்னாடியே சொல்லி அனுப்பிட்டார்.

விக்கி: இந்த வாட்ச் எவ்ளோ...?

கடைகாரன்: 2000 ரூவா..

விக்கி: 1000

கடைகாரன்: சரி 1800 கொடுங்க

விக்கி: அப்போ 900...

கடைகாரன்: 1500...

விக்கி: இல்ல 750...

இப்படியே போய் கடைசில கடைகாரன் ரொம்ப கடுப்பாகி, யோவ் இத சும்மாவே வெச்சுக்கிட்டு இடத்த காலி பண்ணுய்யா என்றான்.

விக்கி: அப்போ ரெண்டா கொடு......


********


சிரிப்பு போலீஸ்: ஏன் கல்யாண மாப்பிள்ளைய குதிரைல உக்கார வைக்கிறாங்க?

பாபு: அவன் தப்பிச்சு போறதுக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுக்கிறாங்க....


********


நாய்நக்ஸ் ஒரு பெரிய கம்பெனில ட்ரைவர் வேலைக்கு இண்டர்வியூ போய் செலக்ட் ஆனார்.

மேனேஜர்: நாளைல இருந்து உங்களை டிரைவரா அப்பாயிண்ட் பண்றோம். ஸ்டார்ட்டிங் சேலரி 5000 ரூபாய்.

நாய் நக்ஸ்: என்னது ஸ்டார்ட்டிங்குக்கே 5000 ரூபாயா?அப்போ காரை டிரைவ் பண்றதுக்கு எவ்ளோ சார் கொடுப்பீங்க?


********
வித்துவான்னா இப்படி என்னைய மாதிரி அழகா இருக்கோனும் தம்பி...

*******

மாலுமி ஆபீஸ் கம்ப்யூட்டர்ல ரொம்ப பிசியா வேல செஞ்சிட்டு இருந்தார். திடீர்னு அந்த ப்ரோகிராம்ல To proceed further press any key அப்படின்னு வந்துச்சு....

மாலுமி கொஞ்சநேரம் பார்த்துட்டு ஐடி டிப்பார்ட்மெண்ட் ஹெட்டை கால் பண்ணார்.

மாலுமி: சார், இங்க கம்ப்யூட்டர்ல ஒரு ப்ராப்ளம்,  ஸ்க்ரீன்ல To proceed further press any key அப்படின்னு காட்டுது...

ஐடிஹெட்: அப்போ ஏதாவது கீய அழுத்துங்க...

மாலுமி: அதுக்குத்தான் சார் நானும் தேடிட்டு இருக்கேன், அந்த any கீயே கீபோர்ட்ல இல்ல சார்...

ஐடிஹெட்: ???

********

இந்தப்படத்துல இப்படி ஒரு சீன் இருக்குன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பாலிடாலை குடிச்சிட்டு கூவத்துல குதிச்சிருப்பேன்....

நன்றி: கூகிள் இமேஜஸ், ஜோக்ஸ் அனைத்துமே மெயிலில் வந்தவை

Monday, January 23, 2012

தானே கமிட்டாகிய தானைத்தலைவன்...


டேய்.... ஒரு அரசு அதிகாரிகிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாது....?

காலை 6.15. அது ஜனவரி மாதமாகையால் கொஞ்சம் சிலுசிலுவென்றிருந்தது. தெருவில் ஒன்றிரண்டு பேர் சென்று கொண்டிருந்தார்கள். பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போதும் சீக்கிரமே கிளம்பிவிடுவார், ஏனென்றால் அப்போதுதான் பக்கத்து டீக்கடையில் பழைய ஊசிப்போன வடை போண்டாக்களை தூக்கி வீசுவார்கள், அதை யாருக்கும் தெரியாமல் நைசாக எடுத்துக் கொள்வது ரமேசின் வழக்கம். வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் தான் பஸ் ஸ்டாப். தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடை இன்னும் திறந்திருக்கவில்லை.  அண்ணாச்சி 8 மணிக்குத்தான் கடை திறப்பார். அண்ணாச்சி கடைமுன்பாகவும் ஏதாவது கிடந்தால் யாரும் பார்க்காதவாறு எடுத்துக் கொள்வார்.

ஆனால் இன்று கடைமுன்பாக யாரோ ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். புதிதாக இருந்தார். ஆள் பார்ப்பதற்கு ஷங்கர் படங்களில் வரும் அரசு உயர் அதிகாரி போல் இருந்தார். தலையில் ஒரு உல்லன் தொப்பி. அலுவலகத்திற்குச் செல்ல தயாராக இருப்பது போல் நின்று கொண்டிருந்தார். புதிதாக இந்த ஏரியாவிற்கு குடிவந்திருக்கலாம். கம்பெனி வண்டிக்காகவோ நண்பருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார் போல. இப்படி எண்ணிக் கொண்டவாரே பஸ்ஸ்டாப்பை அடைந்தார். 

மறுநாள் காலையும் அவர் அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது கொஞ்சம் பழகிய(?) முகமாகி விட்டதால் மெலிதாக புன்னகைக்க முயற்சித்தார் சிரிப்பு போலீஸ், ஆனால் அவர் பதில் ரியாக்சன் கொடுக்காமல் ரொம்ப சீரியசான பாவனையுடன் இருந்ததால், முகத்தில் வந்த சினேகமான புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் அசடு வழிந்தவாறு தன்பாட்டுக்குச் செல்லத் தொடங்கினார். என்ன மனிதர் இவர், சும்மா பதிலுக்கு ஒரு சின்ன புன்னகை செய்தால் என்ன? காசா, பணமா? இப்படியும் இருக்கிறார்களே என்று திட்டிக் கொண்டே அலுவலகம் சென்றடைந்தார். ஒரு புன்னகை வீணாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு!

அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அந்த புதுமனிதரைப் பற்றி  சிந்தனை அவ்வப்போது வந்து போனது. யாராக இருக்கும், பார்க்க வேறு பெரிய அதிகாரி போல் இருக்கிறார், உண்மையிலேயே உயர் அதிகாரியாக இருப்பாரோ? என்று பலவாறாக மண்டையைக் குடைந்து கொண்டு யோசித்துக் கொண்டே தாமதமாக சாப்பிட்டதில் கேண்டீனில் வடை காலியானதுதான் மிச்சம். அதையும் நினைத்து இன்னும் அதிகமாக புலம்பியவாறே அன்றைய பொழுதைக் கழித்தார்.

மறுநாள் காலை எழுந்ததில் இருந்தே மறுபடியும் அவர் பற்றிய எண்ணங்கள் சிரிப்பு போலீஸ் மனதில் ஓடத் தொடங்கியது. போன் பேச முடியவில்லை,  எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியவில்லை, ஆசையாக இட்டிலியும் சட்டினியும் சாப்பிட முடியவில்லை... என்று எங்கு சென்றாலும் அதே நெனப்பு... ரொம்பவே வெறுத்துப் போனார் போலீஸ். கொஞ்சம் அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை இன்று எப்படியும் அவரிடம் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தார். 

அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் என்று அவரது உள்மனது பக்காவாக கணக்குப் போட்டது. இன்று நம் பேச்சுத் திறமை முழுதையும் காட்டி அவரை நம்வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டு 10 நிமிடம் முன்னதாகவே கிளம்பினார். 

அதே அண்ணாச்சி கடை முன்பாக அந்த அதிகாரி நின்று கொண்டிருந்தார். ரமேஷ் சட்டென்று ஒரு ரெடிமேட் புன்னகையை வரவழைத்துக் கொண்டு அவர் அருகில் சென்று சார் வணக்கம் என்றார். பதிலுக்கு அவர் கையை நீட்டினார். கைகுலுக்கலாம் என்று ரமேசும் கையை நீட்டினார், பார்த்தால் அவர் கையில் கத்தி இருந்தது..  ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்.


Wednesday, January 18, 2012

ஆனந்த தொல்லை: ஒரு இனிய ஆரம்பம்...!


சில பிரபல பதிவர்கள் (உச்சத்தில் இருப்பவர் உள்பட) ஒருவழியாக பவர்ஸ்டார் வெறியர்களின் அன்பான மிரட்டலுக்கிணங்க ஆனந்த தொல்லை என்ற அற்புத உலகமகா காவியத்திற்கு விமர்சனம் எழுதுவதாக உறுதியளித்துள்ளார்கள். மேலும் சில இளம்பதிவர்கள் ஆனந்த தொல்லை படம் ஓடும் 500+ நாள் வரைக்கும் தினமும் பவர்ஸ்டாரை பற்றி ஏதாவது எழுதுவதாகவும் முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக பவர்ஸ்டாரின் பவர்ஃபுல் படங்கள் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறோம். இளகிய மனம் படைத்தவர்கள் தயவு அப்படியே சென்று விடவும்!



பவர் ஸ்டார் சொல்றான்..... பவர் ஸ்டார் முடிக்கிறான்....


ஐயாம் தி நியூ ஆர்னால்ல்டு சுவார்ர்ர்செனேகார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....



என்னா லுக்கு......?



இது காதுல வேணா நான் தான் பவர்ஸ்டார்னு சொல்லிப் பார்க்கவா...?



எலேய்ய்.... படம் வந்ததும் ஒழுங்கா எல்லாப்பயலும் விமர்சனம் எழுதிடுங்க... இல்லே.....



டீசர்ட்டுகளில் பவனி வரப்போகும் பிரபல பவர்ஸ்டார் கார்ட்டூன்...


இப்படிக்கு,
பவர்ஸ்டார் கொலவெறி குருபீஸ்
சர்வதேச கிளை மற்றும் மரம்


நன்றி: கூகிள் இமேஜஸ், கெட்சினிமாஸ் கார்ட்டூன், பவர்ஸ்டார்