நான் நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு இப்போ சொல்லுங்க என்றேன். அவர் ஆரம்பித்தார். எனக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டிருந்தது வேறு, கண்ணைத் திறக்கவே முடியவில்லை. இந்த ஆளை ஏன் இன்னேரத்தில் அழைத்தோம் என்று என்னையே கடிந்து கொண்டேன். நான் யார் என்று என்னைப் பற்றி நானே கூறிக் கொள்வது சரியாக இருக்காது என்றாலும், இங்கே அதைக் கூறுவது அவசியமாகிறது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகான இளம் வாலிபன். நான் எப்போதும் மிகவும் கலகலப்பாக இருப்பேன், அதனால் என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நானும் அவர்களுக்குத் தாராளமாக டீ, சிகரெட், தண்ணி என்று செலவு செய்வேன். இதனால் என்ன பயன் என்கிறீர்களா, ஓசியில் ஏதாவது கிடைக்குமே என்று தினமும் அவர்கள் செய்யும் காரியங்கள்தான். அதெல்லாம் இங்கு சொல்லி மாளாது, சில சமயங்களில் நானே கண்கலங்கியிருக்கிறேன்.

இப்போது அவளைப்பற்றியும் சொல்லியாக வேண்டும். அவளை நான் பார்க்கும் வரை யாருக்கும், அவள் யாரென்றே தெரியாது. ஏனென்றால் அவள் வெகு சுமாராக பக்கத்து வீட்டுப் பெண் போலத்தான் இருப்பாள். கூட்டத்தில் நிற்பாளேயானால் தேடினாலும் அவளைக் கண்டுகொள்ள முடியாது. ஆனால் நான் அப்படி அல்ல. நேர்மாறானவன். ஆர்ப்பாட்டமானவன். நான் எங்கு சென்றாலும் ஒரு அதிர்வு இருக்கும். நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள். சில நேரம் சுழல் காற்று அடிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். என் கண்ணில் ஒருவித காந்த சக்தி வெளிப்படுவதாகக் கூட சில நண்பர்கள் சொல்வதுண்டு. ஒரு சமயம் நான் கல்லூரிக்குள் வந்தபோது அந்த சுழல் காற்று அதிகமாகி சாலையில் கிடந்த குப்பைகளை கல்லூரி முழுதும் பரப்பிவிட்டது. அதற்காக எங்கள் கல்லூரி முதல்வருக்கும், துப்புரவு தொழிளாருக்கும் ஒருநாள் முழுதும் தண்ணீர் விருந்து வைக்கவேண்டியது ஆகிவிட்டது. என் பார்வையில் இருக்கும் லேசர் கூர்மையைப் பார்த்து பலரும் வியந்துள்ளனர். ஒரு நாள் அப்படித்தான், ஒரு பெண்ணின் மோதிரம் கழன்று திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டது. எனது லேசர் பார்வையை வைத்தே அதைக் கண்டுபிடித்து, பின்பு அத்தொட்டிக்குள் இறங்கி அந்த மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன்.
இப்படி என்னுடைய பல திறமைகளைப் பார்த்தே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எந்தப் பேருந்தையும், டிரைனையும் நான் மிஸ் பண்ணியதே கிடையாது. ஒருமுறை நண்பர்களோடு சினிமாவிற்குச் செல்லும்போது, பேருந்தில் கால்சுண்டுவிரல் கூட வைக்க முடியாத அளவிற்குக் கூட்டம், அப்போது நான் செய்த டெக்னிக்கைப் பார்த்து கல்லூரியில் எனக்கு பெரிய ரசிகர் மன்றமே உருவாகிவிட்டது. என்ன செய்தேன் என்கிறீர்களா? பேருந்தில் ஏற முடியவில்லை என்றதும், பேருந்தின் வேகத்திலேயே அதனோடு ஓடி வந்து மூன்று ரூபாயை மிச்சப்படுத்தியதுடன், சரியான நேரத்தில் தியேட்டருக்கும் சென்றடைந்தேன்.
அதன் பின்பு நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று வாங்கி விட்டேன். அதை வைத்தே நிறைய பெண் நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். எல்லோரும் அது என் அப்பா வாங்கிக் கொடுத்தது என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது என் ஆருயிர் நண்பன் கொண்டித்தோப்பு குமார், மும்பையிலிருந்து எனக்காக லவட்டிக் கொண்டு வந்தது. அந்த பைக்கில் எப்போதும் பெண் நண்பர்களை மட்டுமே ஏற்றுவது என் வழக்கம். அவர்கள் எல்லோரும் என்கூட ஊர் சுற்ற, சினிமா பார்க்க விரும்புவார்கள். நானும் சென்று சினிமா, ஐஸ்க்ரீம் என்று எஞ்சாய் பண்ணுவதுண்டு. சிலநேரம் ஓட்டலுக்குப் போவோம். அப்போதெல்லாம் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டு மட்டையாகிவிடுவேன். இப்படி போய்க் கொண்டு இருந்த சமயத்தில் தான் அவளைப் பார்த்தேன்.
அவளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. எப்படியாவது மடக்கிவிடலாம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்தேன். நண்பர்கள் வேறு நன்றாக ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்து என் நண்பன் ஒருவன் வெகுநாட்களாக ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் திடீர் தைரியம் வந்து காதலைச் சொல்லி செருப்படி வாங்கினான். அது வேறு அடிக்கடி ஞாபகம் வந்து என் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஒருமுறை லேப் கிளீன் பண்ணும் பெண்ணிடம் விளக்குமாற்று அடிவாங்கியிருந்தாலும் அதை யாருக்கும் தெரியாமல், அப்படியே பணம் கொடுத்து மறைத்து விட்டேன். அந்தப் பயம் வேறு. எனவே இப்பெணிற்கு நான் வழக்கமாகக் கையாளும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்தேன்.
திடீரென்று ஒருநாள் என் நண்பனின் போன்கால், ரொம்ப அவசரமாக ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வரச் சொன்னான். சரி யாராவது பிரெண்டுக்குக் கடத்தல் கல்யாணமாக இருக்கும் என்று ஒரு கிளைமாக்ஸ் பைட்டிற்கு ஏற்ற மாதிரி லெதர் ஜாக்கெட், கிளவுஸ், தொப்பி எல்லாம் அணிந்து கொண்டு கிளம்பிப் போனேன். அங்கு பாத்தால் என் நண்பனுக்குத் தான் திருமணம். ஏன் முன்பே சொல்லவில்லை என்று திட்டினேன். அவன் அதற்கு அவங்க வீட்ல ப்ராப்ளம் அதான் என்றான். இவ்வளவு நாள் ஒண்ணா சுத்திட்டு இருந்துட்டு பாவி, எனக்கே தெரியாம லவ் பண்ணியிருக்கான். மச்சி நீயும் இப்படி லவ் பண்றேன்னே எனக்கு இப்பத்தாண்டா தெரியும், ஏண்டா இப்பிடிப் பண்ணே, அப்படின்னு கேட்டேன். அவன், மாப்ள உன்ன மாதிரி ஆளுகள பக்கத்துல வெச்சிக்கிட்டு எப்படிடா லவ் பண்ணமுடியும், நீதான் பொண்ணுக மனச கலைச்சி நாசம் பண்ணீடுவியேடா என்று மூஞ்ச்சியில் அடித்தால் போல் சொல்லிவிட்டான். எனக்கு ஒருமாதிரியாகப் போய் விட்டது. நல்லவேளை வேறு யாரும் பார்க்கவில்லை. சரி சரி டென்சனாகாத விடு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தம்மைப் பற்ற வைத்தேன்.
அப்போது ஆட்டோவில் ஒரு பெண் மணக்கோலத்தில் வந்து இறங்கினாள். யார் என்று பார்த்தால், அடிப்பாவி நீயா? அவள் என் காதலி, இவளையா நம் நண்பன் காதலித்து இருக்கிறான். ...எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அடக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று திரும்பி நின்று கொண்டு குலுங்கி குலுங்கி அழுதேன். கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன். சே... இவர்கள் காதல் நமக்கு முன்பே தெரியாமல் போய் விட்டதே? தெரிந்திருந்தால் பேசியே அவர்களைக் கலைத்து அவளை நாம லவட்டிக் கொண்டு போயிருக்கலாமே.... சரி இனி அழுகக் கூடாது இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை, இவளை இப்போதே கடத்திச் சென்று கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தேன். திரும்பிப் பார்த்தால் யாரையும் காணோம். டேய் மச்சி எங்கேடா போனே? சீக்கிரம் வந்து கையெழுத்துப் போடுடா வெண்ணை....என்று அழைத்தது நண்பனின் குரல்...........!
திடுக்கிட்டு விழித்துப் பார்க்கிறேன்..... ......................!
...
...
இயக்குனர் பேரரசு ஆவேசமாக அடுத்த படத்திற்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்........!
...
...
...
டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!
!