காதலர் தினத்தன்று என்ன நடந்ததுன்னு என் அனுபவத்தை பதிவு செய்யனும்னு மக்கள்லாம் கொஞ்ச நாளா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுறாங்க, குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர், இதைப் பத்தி நான் எழுதியே ஆகனும்னு மிரட்டலே விடுத்திருக்கார். நான் வேற ரொம்ப பயந்த சுபாவம்கறதாலே வேற வழியே இல்லாம அதை எழுத வேண்டியதாப் போச்சு. எந்த வருட காதலர் தினத்தைப் பத்தி எழுதனும்னு யாருமே சொல்லாததால, சில வருடங்களுக்கு முன்னாடி நடந்ததைப் பத்தி எழுதுறேன்.
மக்களே, இது உண்மையா நடந்த சம்பவம். சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன், பெயர்களைத் தவிர அனைத்துமே உண்மைங்க...!
அப்போ காதல் பண்ண ஆரம்பிச்சு கொஞ்சநாள் தான் ஆகியிருந்தது. நீண்ட முன்னோட்டத்திற்குப் பின் சந்தியாவும் நானும் காதலிக்க ஆரம்பித்து இருந்தோம். காதலர் தினத்திற்கு எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரி அரைநாள்தான். காலேஜ் முடிந்ததும் இருவரும் வெளிய செல்வதாகப் ப்ளான். காலேஜ் முடிந்ததும் எல்லோரும் ஒன்றாக வந்து பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தோம். செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லாத காலம், அதனால் எல்லாம் டைரக்ட் மெசேஜிங்தான்.
வீக்கென்டிற்கு மாணவர்கள் பலரும் சொந்த ஊருக்குச் செல்வார்கள், அதனால் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடையில் நாங்கள் மீட் பண்ணிக்கவே முடியவில்லை. சந்தியா, அவள் வகுப்புத் தோழிகளை ஊருக்கு அனுப்பி விட்டு, மத்தியப் பேருந்து நிலையத்தில் அவள் வழக்கமாக எனக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருப்பதாகக் கூறி இருந்தாள். அதனால் நான் தனியாகத்தான் மத்தியப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். என் நெருங்கிய நண்பர்கள் என்னை வழியனுப்ப (?) பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தார்கள். ஒரே கேலியும் கிண்டலுமாய் பஸ் வரும் வரை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.
ஒருவழியாக பஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அங்குதான் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும். தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் தான் எப்போதும் சந்தியா காத்திருப்பாள். இன்று ஒரு நாளாவது நான் காத்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டு அங்கே சென்றேன், சிறிது தூரம் போவதற்குள் திடீரென மாலதி என் முன்னால் வந்து நின்றாள். இவள் எங்கிருந்து வந்தாள்....? அவளும் ஊருக்குச் செல்லத் தயாராக பேகுடன் வந்திருந்தாள். என் முன்னாள் வந்து நின்று வள வளவென உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள். எனக்கு எங்கே சந்தியா வந்துவிடப் போகிறாள் என பயம் தொற்றிக் கொண்டது. கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது.
மாலதி பேசி முடிப்பதாக இல்லை, நேரமாகிக் கொண்டிருந்தது. நான் திரும்பித் திரும்பி சந்தியா வந்துவிட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை சந்தியா இன்று வேறு பக்கத்தில் எங்கும் நின்று கொண்டிருக்கிறாளோ? இன்னும் காணோமே? 10 நிமிடத்திற்கு மேல் ஆகி விட்டிருந்தது. மாலதி இன்னும் பேசிக்கொண்டு இருந்தாள். நானும் கிளம்பனும், போகனும், அவசரம் என பல்வேறுவிதமாக சொல்லியும், அஞ்சு நிமிசம் அஞ்சே நிமிசம் என்று நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். மறுபடியும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால், சந்தியா அங்கே நின்று கொண்டு இருந்தாள். எனக்கு மூச்சே நின்றுவிட்டது. எங்களைப் பார்க்கிறாளா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை. ஏதேதோ சொல்லி பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாளோ என்ற தோன்றியது. அப்போழுது அடுத்த சோதனையாக, என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது. சந்தியா சற்றுத் தொலைவில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும், அருகில் நானும் மாலதியும் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்த ப்ரியா வேக வேகமாக எங்கள் அருகே வந்து கடும் கோபத்துடன் சே... இப்படியா பண்ணுவீங்க... என்று சொல்லிவிட்டு விடு விடுவென போய்விட்டாள். இதைப் பார்த்து மாலதியும் நானும் கெளம்பறேன் என்று மெல்ல நழுவினாள். நான் அவசரம் அவசரமாக சந்தியா நின்றிருந்த இடத்தை நோக்கினால், அங்கே அவளைக் காணவில்லை. திடுக்கென்று இருந்தது. என்னாச்சு, என்னைக் கடுப்பேற்ற எங்காவது மறைந்து நிற்கிறாளா என்று எல்லாப் பகுதியிலும் தேடினேன். எங்கும் காணவில்லை. ஒருவேளை ப்ரியாவும் அவளும் பேசிக்கொண்டிருக்கிறார்களோ என்று ப்ரியா சென்ற திசையில் சென்றேன்.
ப்ரியா அவள் ஊருக்கு செல்லும் பஸ்சில் அமர்ந்திருந்தாள். நான் உள்ளே ஏறிச் சென்று, சந்தியா வந்தாளா என்று கேட்டதுதான் தாமதம். பொறிந்து தள்ளிவிட்டாள். எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் சந்தியா எங்கே சென்றாள் என்று தெரியாது என்று கூறிவிட்டாள். வேறுவழியில்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி, ஒருவேளை சந்தியா வந்திருக்கக் கூடும் என்று பழைய இடத்திற்கே வந்தேன். எப்படியும் வருவாள் என்று அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் கிட்டத்தட்ட 1 மணிநேரம் காத்திருந்தேன். மதியம் சாப்பிடவும் இல்லை. மிகுந்த சோர்வாக இருந்தது. உலகமே கைநழுவிப் போய்க் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். பின், ஒருவழியாக அங்கிருந்து கிளம்பிப் போனேன். பிரண்ட்ஸ் எல்லோரும், பன்னாடை ஒருத்தன் ரூமில் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அங்கே போய்ச் சேர்ந்தேன்.....
இப்படியாக என் முதல் காதலர் தினம் முடிவுக்கு வந்தது.
உண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!
படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்
!