Showing posts with label மரணமொக்கை. Show all posts
Showing posts with label மரணமொக்கை. Show all posts

Friday, March 20, 2015

ஆப்பரேசன் சாணி....






நாங்க காலேஜ் படிக்கிறப்போ பக்கதுலயே ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தோம். அடுத்த தெருவுல ஒரு பிகர் இருந்துச்சு. அது ரொம்ப சுமார்தான்றதால ஆரம்பத்துல அத யாரும் கண்டுக்கல.  பிகர்களுக்கு கடும் வறட்சி(?) நிலவுன ஒரு காலகட்டத்துல இந்த பிகர் மேலயும் எங்க பார்வை விழுந்துச்சு, அந்த புள்ள சிட்டில பிரபலமா இருக்கும் ஒரு லேடீஸ் காலேஜ்ல படிச்சிட்டு இருந்துச்சு, சரி பஸ் ஸ்டாப்ல போய் பாத்துக்கலாம்னு காலைல போய் வெயிட் பண்ணா ஆள் வரவே இல்லை. சரி இன்னிக்கு பார்ட்டி லீவு போலன்னு பாத்தா காலேஜ் போயிட்டு ஈவ்னிங் பஸ் ஸ்டாப்ல இருந்து வந்துட்டு இருக்கு.

அடுத்த நாள்  பாத்தா மறுபடியும் அதே கதைதான் காலைல பஸ் ஸ்டாப்புக்கு ஆள் வரல, ஆனா ஈவ்னிங் காலேஜ்ல இருந்து ரிட்டன் வருது. என்னடா நடக்குதுன்னு நம்ம உளவுத்துறைய ரெடி பண்ணி அவங்க வீட்டுப்பக்கம் ஆள் போட்டோம். அடுத்த நாள் பாத்தா அவங்கப்பா டிவிஎஸ்ல கூட்டிட்டு போறாருன்னு தகவல் வந்துச்சு. அலார்ட்டா இருக்காங்களாம். ஆனா அந்த புள்ளயோட காலேஜ் ஏரியா மக்கள், அது காலைலயும் பஸ்லதான் வருதுன்னு தலைல அடிச்சு சத்தியம் பண்ணானுங்க. எல்லாருக்கும் ஒரே குழப்பம்.....


விவகாரம் ரொம்ப சிக்கலாகிட்டே போகுதுன்னு உடனடியா கண்டுபிடிக்க வேண்டிய  உளவுத்துறை பொறுப்ப என்கிட்ட ஒப்படைச்சானுங்க(!). முதல் வேலையா காலைல அவங்க வீட்டுல இருந்து அந்த டிவிஎஸ் எந்தப்பக்கமா போகுதுன்னு பார்த்தோம், பஸ்ஸ்டாப் பக்கமாத்தான் போச்சு, ஒண்ணும் பிடிபடலை,  அதுக்கிடைல அந்த புள்ள வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாடில ரெண்டு சீனியர் பசங்க புதுசா வாடகைக்கு வந்தாங்க. அவனுங்களுக்கு தண்ணியெல்லாம் வாங்கி கொடுத்து ஃப்ரெண்டு புடிச்சு, அவங்க வீட்டுக்கு ஒரு சண்டே போனோம்,  

அவனுங்களுக்கும் மேட்டர் வெளங்கிடுச்சி, இவனுங்க ஏதோ பிகர் மேட்டரா வந்திருக்கானுங்கன்னு, ஆனா பாவம் பசங்க ரொம்ப அம்மாஞ்சி போல, பக்கத்து வீட்டுல ஒரு பிகர் இருக்கறதே அவனுங்களுக்கு தெரியல. யாருடா அது எந்த பிகர் எங்களுக்கு தெரியாமன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டானுங்க. கரெக்டா அந்த டைம்பாத்து மொட்டமாடில வடகம் காயப்போட நம்ம பிகர் மேல வந்து நிக்குது. நாங்க உடனே பாஸ் பாஸ் இந்த பிகருதான், மாடில வந்து நிக்குது பாருங்கன்னு கூப்பிட்டோம். அவனுங்க ஆடி அசைஞ்சு வந்து பார்க்கிறதுக்குள்ள, இந்தப் புள்ள வடகத்த வெச்சிட்டு கீழ போயிடுச்சு போல, அவங்கம்மா வந்து வடகத்த எடுத்து வெச்சிட்டு இருந்துச்சு. இவனுங்க அத பாத்துட்டு, டேய் டேய் உங்க டேஸ்ட்டு ரொம்ப கேவலமா இருக்குடான்னு தலைல அடிச்சிக்கிட்டானுங்க. அதுவுமில்லாம காலேஜ் பூரா வேற மேட்டரை சொல்லிட்டானுங்க. அது காது மூக்கு வெச்சி பக்காவா டெவலப் ஆகி வேற ஆங்கிள்ல போக ஆரம்பிச்சிடுச்சு. டோட்டல் டேமேஜ். ஒரு அட்டுபிகருக்காக இவ்ளோ அடியான்னு இந்த ஐடியாவையும் கைவிட்டாச்சு.

அப்புறம் என்ன, வேற வழி இல்லாம மறுபடியும் பஸ்ஸ்டாப்புக்கே வந்தோம். அங்க இன்னும் அதே கதைதான் ஓடிட்டு இருந்துச்சு. கடைசியா ஒரு நல்ல நாள்ல எல்லாரும் நிதானமா (?) உக்காந்து பேசி எங்க ஏரியாவுல இருந்த எல்லா பஸ் ஸ்டாப்லயும் ஒவ்வொண்ணா செக் பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணி ஒவ்வொரு நாள் ஒரு ஸ்டாப்னு போனோம். கடைசில ஒருநாள் வசமா மாட்டிக்கிடுச்சி பிகரு.... என்னன்னு பாத்தா...  பொண்ண கூட்டிட்டு போயி ரெண்டு பஸ்ஸ்டாப் தள்ளி இருக்கும் பஸ்ஸ்டாப்ல போய் பஸ் ஏத்திவிடுறாரு அவங்கப்பா. ஏரியா பசங்க கண்ணுல காட்டாம பஸ் ஏத்துறாங்களாம்... பட் அடுத்த நாள் அதே ஸ்டாப்ல ஆஜராகுனா, மறுபடியும் பிகரைக் காணல.... நாங்க விடுவமா... ங்கொய்யால யாருகிட்ட.....  எங்க ஏரியாவுல இருந்த எல்லா பஸ்ஸ்டாப்லயும் ஆள் போட்டோம். பட் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பா போயி தேடும்போது அதவிட நல்ல நல்ல பிகருகளா கண்ணுல பட்டதுனால, இந்த பிகரை கைவிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையா போச்சு... நம்ம உளவுத்துறை அவ்ளோ கஷ்டப்பட்டும் கடைசில எந்த பிரயோஜனமும் இல்லாம போயிடுச்சு.....

இதுல சாணி எங்க வந்துச்சின்றீங்களா.... அந்த பிகரு வீட்டுல ரெண்டு மாடு வெச்சிருந்தாங்க, அதுனால அதுக்கு நாங்க வெச்சிருந்த கோட் நேம் சாணி...!

ஆப்பரேசன் சாணி சக்சஸ்.... பட்.....

Sunday, September 21, 2014

Thursday, September 18, 2014

ஐ (ai): திரை விமர்சனம்...!


தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவில் கூட இப்படி ஒரு கதையுடன் இதுவரை எந்தப்படமும் வந்திருக்காது. அப்படிப்பட்ட கதை, திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது ஐ படம். கதைக்காகவே பல்வேறு தேசிய சர்வதேச விருதுகளை அள்ளிக் குவிக்க இருக்கிறது இப்படம்.

விக்ரம் கிராமத்தில் மாட்டுவண்டி வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஹீரோயின் எமி ஜாக்சன் சுற்றுலாவிற்காக வந்தவர் மாட்டுவண்டியில் சவாரி செய்கிறார். அவரைப்பார்த்த விக்ரம் காதல்வயப்பட்டு அங்கேயே காதலைச் சொல்கிறார். கோபமடைந்த எமி அர்னால்டின் போட்டோவை காட்டி இந்த மாதிரி ஒருத்தனைத்தான் லவ் பண்ணுவேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். இதைக்கேட்டு ஆவேசமடைகிறார் விக்ரம். அர்னால்டின் போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு பயங்கரமாக எக்சர்சைஸ் செய்கிறார், ஒன்றும் முன்னேற்றமில்லை. ஏதாவது லேகியம் சாப்பிட்டு பார் என்று நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். அவர்களை நம்பி சேலத்துக்கு செல்கிறார் விக்ரம். அங்கே வைத்தியரிடம் கிலோக் கணக்கில் லேகியம் வாங்கி வந்து உடல் முழுதும் பூசிக் கொண்டு படுக்கிறார். காலையில் பார்த்தால் அவரையே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பனிக்கரடி போன்ற தோற்றத்தில் பயங்கரமாக உருவம் மாறி இருக்கிறது.  காட்சியைப் பார்க்கும் நமக்கு இது என்ன சினிமாதானா என்ற பிரமிப்பு எழுகிறது. அவரைப் பார்த்த எல்லாரும் பயந்து ஓடுகிறார்கள். அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார். லேகீயத்தில் தான் ஏதோ கோளாறு என்று வைத்தியரை பார்க்கச் செல்கிறார். வைத்தியரை கட்டி வைத்து அடித்து மிரட்டியதில் அவர் வில்லன்கள் வந்து மிரட்டி லேகீயத்தை மாற்றி கொடுக்க சொன்னதை சொல்லி விடுகிறார்.

விக்ரம் ஆவேசத்துடன் வில்லன்களை தேட தொடங்குகிறார். ஆனால் பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறை வில்லனை நெருங்கும் போதும் அரசியல்வாதிகள் வந்து லஞ்சம் கேட்டுக்  குறுக்கிடுகிறார்கள். லஞ்சம் கேட்பவர்களை எல்லாம் கடித்து வைக்கிறார் விக்ரம். லஞ்சம் ஒழிந்து ஊரே செழிக்கிறது, அனைவரும் பாராட்டுகிறார்கள். இப்படியே போய் கொண்டிருக்கையில் ஒருநாள் டீவில் எமியின் பேட்டியை பார்த்துவிட்டு கண்கலங்குகிறார். பனிக்கரடி உருவத்துடன் விக்ரம் காதல் சோகத்தில் கண்கலங்குவது அருமை. அப்படியே கனவில் பாடல் காட்சி வருவது மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 2000 பனிக்கரடிகள் சூழ விக்ரம் எமியுடன் ஆடிப்பாடுகிறார். அண்டார்டிக்காவில் போய் ஐஸ் மலை செட் போட்டு எடுத்தார்களாம். ஒவ்வொரு ஐஸ்கட்டியும் ஒரு கலரில் மின்னுகிறது, எப்படி பெயிண்ட் அடித்தார்களோ தெரியவில்லை. டிக்கட்டிற்கு கொடுத்த காசு இதற்கே போதும். பாடல் முடிந்ததும் வில்லன்களை தேடிக் கண்டுபிடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகள் வழக்கம் போல பதற வைத்தாலும் ஹீரோவே ஜெயிப்பது வெகு யதார்த்தம்!

சண்டையில் மற்றவர்கள் தப்ப, ஒரே ஒரு வில்லன் மாட்டிக் கொள்கிறான். அவனும் வைத்தியர் கொடுத்தது லேகியம் இல்லை, பனிக்கரடி ஆயி என்று சொல்லிவிட்டு செத்துப்போகிறான். அதிர்ச்சியடைந்த விக்ரம், அதை சரி செய்வது எப்படி என்று குழம்புகிறார். துரத்திச் சென்று அடுத்த வில்லனை பிடிக்கிறார். அவன் இன்னொரு முறை பனிக்கரடி ஆயியை தடவினால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு செத்து விடுகிறான்.  பனிக்கரடி ஆயி வாங்க ஸ்காட்லாந்திற்கு கடலில் நீந்தியபடியே செல்கிறார் விக்ரம். பிரம்மாண்ட கப்பல்களை அவர் நீந்தியபடி கடந்துசெல்வது இதுவரை சினிமாவில் பார்த்தே இராத சீன். எப்படி செட் போட்டார்கள் என்றே தெரியவில்லை. அங்கு சென்று ஆய் வாங்கி தடவி, காலையில் பார்த்தால் முகமெல்லாம் கட்டிவந்த மனிதனாகி இருக்கிறார்.

இதனால் குழம்பிப் போன விக்ரம், வில்லன் தன்னை ஏமாற்றி இருக்கிறான் என்று புரிந்து கொள்கிறார். எமி அந்த ஊரில் இருப்பதை தெரிந்து கொண்டு அதே தோற்றத்தோடு பார்க்கச் செல்கிறார். அங்கே எமியை வில்லன்கள் கட்டிவைத்து இருக்கிறார்கள். சண்டையிட்டு மீட்கிறார் விக்ரம். அவரைப் பார்த்து எமி யார் நீ என்று கேட்கிறார், அதைக் கண்டு மனசுடைந்த விக்ரம், தப்பி ஓடிய வில்லன்களை துரத்தி பிடித்து அடித்து உதைத்து தனக்கு மாற்றுமருந்து என்ன என்று கேட்கிறார். அப்போது அந்த வில்லன் நான் சொன்னால் நீ கேட்கமாட்டியே என்று திரும்ப திரும்ப மறுப்பது பரபரப்பைக் கூட்டுகிறது. கடைசியில் நல்ல அழகான வாலிபனின் ஆயியை எடுத்து பூசிக் கொண்டால் பழைய உருவத்தை பெறலாம் என்று சொல்லிவிட்டு அவனும் செத்துப் போகிறான். அடுத்து விக்ரம் என்ன செய்ய போகிறார் என்று ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறார்கள்.

ஊருக்கு வந்த விக்ரம் வில்லன் சொன்னபடி செய்கிறார். எதுவும் ஆகவில்லை. அதிர்ந்து போய் மறுபடியும் மறுபடியும் செய்து பார்க்கிறார் ஒன்றும் ஆகவில்லை. நமக்கோ பரபரப்பு உச்ச கட்டத்தை அடைகிறது. வில்லன் கும்பலின் தலைவன் அந்த ஊர் சந்தைக்கு வந்திருப்பதை பார்த்து அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டு வந்து அடிக்கிறார் விக்ரம். இவ்வளவு நாளும் விக்ரமுக்கு  ஏற்பட்டது நிஜமான மாற்றம் அல்ல. அது வெறும் மேக்கப்தான் என்றும், இரவு நேரத்தில் தூங்கியவுடன் வந்து வில்லன் ஆட்கள் ரகசியமாக விக்ரமுக்கு அவருக்கே தெரியாமல் மேக்கப் போட்டு விட்டு போய்விடுவார்கள் என்றும் உண்மையை சொல்லி விட்டு செத்துப் போகிறான் அந்த வில்லன் கும்பல் தலைவன். சஸ்பென்ஸ் உடைந்ததும் தியேட்டரே ஆடிப்போகிறது. அடுத்த காட்சியில் விக்ரம் குளியறைக்குள் சென்று மேக்கப்பை களைத்து விட்டு ஸ்மார்ட்டாக கம்பீரமாக வெளியே வருவதை பார்த்து தியேட்டர் முழுதும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்..... எமி வெளியே விக்ரமுக்காக காத்திருக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு வெளியே வந்தும் படபடப்பு குறையவே இல்லை, பலநூறு படங்களை ஒரே நேரத்தில் பார்த்த எஃபக்ட்.......

ஸ்பெசல் எஃபக்ட்ஸ், சஸ்பென்ஸ் கதை, விக்ரம் நடிப்பு, ரஹ்மான் இசை, எமியின் அழகு..... இப்படி எல்லாத்துக்கும் ஒவ்வொரு வாட்டி படம் பார்க்கலாம்......!

ஆய்னு டைட்டில் வெச்சா கண்டுபுடிச்சிடுவாங்கன்னு ஐன்னு டைட்டில் வெச்சிருக்காங்க.... நாங்க சும்மா விடுவமா..... இங்கிலீஸ் டைட்டில் என்னான்னு செக் பண்ணி உண்மைய கண்டுபிடிச்சிட்டோம்ல....... ங்கொய்யால நாங்கள்லாம் யாரு.............!

Saturday, September 13, 2014

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா...!

ஐ படத்தோட பட்ஜெட் பத்தி தாறுமாறா செய்திகள் வந்து எல்லாரையும் கதிகலங்க வெச்சிட்டு இருக்கு! தமிழனுக்கு ஒலகம் பூரா பெருமைதேடித்தரப்போற படத்துக்கு நாமலும் ஏதாவது செஞ்சு சரித்துரல நம்ம பேர பச்சக்னு பதிய வெச்சுடனும்னு இப்பிடி இசை வெளியீட்டு விழாவ அட்வான்சா நடத்தியிருக்கோம். எல்லாரும் வந்து கலந்துக்குங்க!


வழக்கம்போல விவேக்குதான் மைக்கப் புடிச்சி எல்லாத்தையும் டேமேஜ் பண்ணுறாரு... சே.. மேனேஜ் பண்ணுறாரு...!

ஐ படம் ஒரு மொக்கைன்னு நான் சொல்லமாட்டேன், ஏன்னா அந்த உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. நீங்க மொக்கைன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன், ஏன்னா ஷங்கர் சாருக்கு அது பிடிக்காது. மொத்தத்துல ஐ.... ஒரு தலைசிறந்த உலகப்படமா அமையும்னு சொல்லி, மொதல்ல வைரமுத்து சார மேடைக்கு அழைக்கிறேன்.

தமிழனுக்கோர் பெருமை என்றால் அது இந்தியாவுக்கே பெருமை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கோரு பெருமை என்றால் அது தமிழனுக்கே பெருமை, டைரக்டர் ஷங்கருக்குப் பெருமை என்றால் எங்கள் சினிமாக் குடும்பத்திற்கே பெருமை, ஆனால் ஒரு தமிழ்ப்படத்திற்கு பெருமை என்றால் அது அகில உலகத்திற்கே பெருமை....!(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)

கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு, ரஜினிக்கு நடையழகு, எங்கள் சினிமாவிற்கு ஷங்கர் அழகு (மறுபடியும் கைதட்டல்), நன்றி!

நன்றி வைரமுத்து சார், நம்ம சினிமாவிற்கு எது அழகுன்னு விளக்கமா சொல்லிட்டீங்க. அழகு அழகுங்கும் போதுதான் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது. ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கிட்டு வடை சுட்டுக்கிட்டு இருந்துச்சாம். மொத்தம் 5000 வடை. எல்லாத்தையும் ஒரே நேரத்துல ஒரு பெரிய சட்டில போட்டு சுட்டுக்கிட்டு இருந்துச்சி. அவ்வளவு வடையவும் சட்டில இருந்து ஒண்ணா ஒரு பெரிய முள்ளுக்கரண்டிய கிரேன்ல மாட்டி வெளிய எடுத்து வெச்சா அப்போ பாத்து ஆயிரம் காக்கா வரிசையா பறந்து வந்து ஆளுக்கொரு வடைய எடுத்துக்கிட்டு போயிடிச்சி. எல்லா காக்காயும் ஒரு போயி பெரிய மரத்துல உக்காந்துச்சி. மரத்துக்கு 2000 கிளைகள். பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!..... கைதட்டுங்க எல்லாரும்...ம்ம்ம்..(*&^%$*&@#$...)

ரஜினி, ஷங்கர், வைரமுத்து எல்லாரும் தலையில் கைவைத்தபடி உக்கார்ந்திருக்கின்றனர். அர்னால்டு மலங்க மலங்க முழித்தபடி இருக்கிறார்.

ஓக்கே..ஓக்கே.. இப்பிடி ஐ படத்தோட வெற்றிக்கு(!) முழுமுதல் காரணமாக இருக்கும் ஷங்கர் சாருக்கு எங்கள் சல்யூட்! (மற்படியும் கைதட்டல்!)

அடுத்ததாக டைரக்டர் ஷங்கர் அவர்களை மேடைக்கு அழக்கிறேன்!

எல்லோருக்கும் வணக்கம். இசை வெளியீட்டு விழா நடத்தனும்னு முடிவு பண்ண உடனே நாங்க செஞ்ச முதல் காரியம் விவேக்கக் கூப்பிட்டதுதான் (!). அழைப்பிதழ் டிசைன் பண்றதுக்காக ஜப்பானுக்கு அருகிலுள்ள கும்மாங்கோன்னு ஒரு தீவுக்குப் போயிருந்தோம். அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய டிசைன் பண்ணோம். அப்புறம் அதை பிரிண்ட் பண்றதுக்காக உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்த அனைவரும் எனது நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம். இந்த விழாவுக்கு போஸ்டர் ஒட்டுரதுக்காக மொராக்கோவுல இருந்து ஒரு மெசின வரவழைச்சிருக்கோம். அத வெச்சு முதல் போஸ்டர் ஒட்டும் விழா அடுத்து பனாமா நாட்டில் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி உங்க எல்லாரையும் அதற்கு அழைக்கிறேன். இதேற்கெல்லாம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி!
நன்றி ஷங்கர் சார். உங்க முதல் போஸ்டர் ஒட்டும் விழாவுக்கு என்னையும் அழைச்சிருக்கீங்க. அதையும் ஒரு வெற்றி விழாவா ஆக்குவது என் கடமை. உங்க பிரம்மாண்டதிற்கு நான் அடிமை. தமிழனுக்கு அது என்றும் பெருமை! அடுத்ததா நாம் எல்லோரும் ஆவலுடம் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் (கைதட்டல்...விசில்!)

எல்லாருக்கும் வணக்கம்...(கைதட்டல்..!)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...!) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த ஷங்கர் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். ஐ படத்தில் முதலில் என்னைத்தான் நடிக்க சொன்னார்கள், ஆனால் கோச்சடையான் படத்திற்கு பிறகு தொழில்நுட்ப படம் வேணாம் என்று நினைத்ததால் நான் நடிக்கவில்லை.அர்னால்டு நல்ல மனிதர், அழைத்ததும் வந்துவிட்டார். விக்ரம் நல்ல நடிகர், ஷங்கர் நல்ல இயக்குனர், அம்மா நல்ல முதலமைச்சர். நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வருவேன், இல்லையென்றால் வரமட்டேன். லிங்கா இன்னும் சிறிது நாளில் தயாராகிவிடும். எனவே அனைவருக்கும்  நன்றி!

டிஸ்கி: எந்திரன் படத்தை பற்றி முன்பு எழுதிய பதிவை டிங்கரிங் செய்து போடப்பட்ட பதிவு இது....!