Friday, December 31, 2010

பன்னீஸ் ப்ளாக்கர் அவார்ட்ஸ் 2010



பன்னி வழங்கும் ப்ளாக்கர் அவார்ட்ஸ் 2010

இன்றோடு 2010ம் ஆண்டு முடிவடைவதை ஒட்டி, இந்த ஆண்டில வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பதிவர்களுக்கு எம் சார்பில் விருதுகள் வழங்க தீர்மானித்துள்ளோம். இதற்கென ஒரு நடுவர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கடந்த இருவாரகால தீவிர பரிசீலனைக்குப்பிறகு தங்கள் முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். கீழே விருதுப் பட்டியல் தரப்பட்டிருக்கிறது. சண்டை போடாமல் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நடுவர் குழு:
  1. வடக்குப்பட்டி ராம்சாமி
  2. காளிங்கன்
  3. ஐடியா மணி
  4. கொரங்கு கண்ணாயிரம்
  5. பலூன் கந்தசாமி

விருதுகள்:

சிறந்த பிரபல பதிவர் விருது 2010
யார் யார் தாம் ஒரு சிறந்த பிரபல பதிவர் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு இந்த விருதை பெருமையுடன் அளிக்கிறோம்.






சிறந்த சீரியஸ் பதிவர் விருது 2010
சீரியஸ் பதிவர்கள் பலர் இருப்பதால், இதையும் அவர்கள் முடிவுக்கே விடுகிறோம். சிறந்த சீரியஸ் பதிவர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.






சிறந்த காமெடி பதிவர் விருது 2010
தலைசிறந்த மொக்கை, நகைச்சுவை, காமெடி பீஸ் பதிவர்கள் அனைவருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.






சிறந்த கவிதைப் பதிவர் விருது 2010
கவிதை, கதை, இலக்கியம் என்று எழுதும் பதிவர்களில், சிறந்தவர் என்று யார் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு இவ்விருது செல்கிறது.






சிறந்த சமையல் குறிப்பு விருது 2010
இவ்வாண்டின் சிறந்த சமையல்   குறிப்பு விருது, சமையல் குறிப்பு, வீட்டு உபயோக குறிப்பு, தங்கமணி, ரங்கமணி இத்யாதிகள் எழுதும் பதிவர்களில் சிறந்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது.






சிறந்த புதுமுகப் பதிவர் விருது 2010
வலைப்பூ தொடங்கி 3 மாததிற்கும் குறைவாக இருப்பவர்கள், 50 ஃபாலோயர்களுக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள், 14 பதிவுகளுக்குக் குறைவாக எழுதி இருப்பவர்கள்,  கமென்ட்  மட்டுமே  போட்டுக்  கொண்டிருப்பவர்களில்  சிறந்து விளங்குபவர்கள் அனைவருக்கும் இந்த விருது கொடுக்கப்படுகிறது.





ஸ்பெசல் ஜூரி அவார்ட் 2010
அடுத்தவர் ப்ளாக்குகளில் கமென்ட் என்ற பெயரில் வாந்தி எடுப்பவர்கள், பிரச்சனைகளை ஏற்படுத்தி ஆதாயம் தேடும் டோமர்கள், திருட்டுப் பதிவு போடுபவர்கள், பெண் பதிவர்களைக் குறி வைத்து டார்ச்சர் பண்ணும் பதிவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த ஸ்பெசல் ஜூரி விருதினை வழங்க நடுவர் குழு ஒருமனதாகப் பரிந்துரைத்துள்ளது.







தமிழ்ப் வலைப்பதிவுலகத்தின் எழுதப்படாத சட்டப்படி, விருது பெற்ற அனைவரும், விருதினை தங்கள் வலைப்பூக்களில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனப்தால், இந்த விருதுகளையும் விருது பெற்றவர்கள் அவ்வாறே செய்து கொள்ளலாம். ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட விருதுகள் பெற்றிருந்தாலும் சரி.

 இந்த ஆண்டு விருது பெற்றவர்கள் அனைவரையும் இன்னும் சிறப்பாக எழுதி   அடுத்த ஆண்டும் விருதுகளைப் பெறவும்,  விருது  பெறாதவர்கள்  கடுமையாக உழைத்து அடுத்த ஆண்டு  விருதினைப்  பெற்றிடவும்  வாழ்த்துகிறோம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

பட உதவிக்கு நன்றி கூகிள்!
!

Thursday, December 30, 2010

ஆப்பீசில் ஜாலியாக ப்ளாகிங் பண்ண முடியவில்லையா.......?

வரவர வலைப்பதிவுகள் படிக்கறது, கமென்ட் போடுறது எல்லாம் ரொம்பக் கஷ்டமாகிக்கிட்டே போகுதுங்க. ஆமாங்க, ஆப்பீசுல ஆணியெல்லாம் வேற புடுங்க சொல்றாங்க. ஏதாவது ப்ளாக்கத் தொறந்து வெச்ச உடனே பாஸ் கால் பண்ணிடுறாரு. எத்தன தடவ விண்டோவ குளோஸ் பண்ணி, தொறந்து, குளோஸ் பண்ணி, தொறந்து படிக்கறது? இப்படி படிச்சா கமென்ட் எப்படி வக்கனையா போடுறது? இதுல வேற டெம்ப்லேட் கமென்ட் பொடுறதில்லேன்னு காரமடை ஜோசியர்கிட்ட சத்தியம் பண்ணிக்கொடுத்தாச்சு, இப்போ என்ன பண்றது சார்?


எங்க ஆப்பீசு மக்களை நெனசா, எங்க பாஸே தேவலைன்னு தோனும்,  அந்தளவுக்கு இருப்பானுங்க. அவனுங்களுக்கு இங்கிதமே சுத்தமா கெடையாது சார். நம்ம எப்பனாச்சும் ஒரு 18+ பதிவ ஓப்பன் பண்ணி வெச்சு ஏதாவது கில்மா போட்டோவ பாத்துக்கிட்டு இருப்போம். இந்த நாதாரிங்களுக்கு எப்படித்தான் மூக்கு வேர்க்கும்னே தெரியாது, உடனே ஏதாவது ஒரு பேப்பரத் தூக்கிட்டு ஓடியாந்துடுவானுக.  அதுவும் நம்ம மானிட்டர பார்க்குற ஆங்கிள்ல தான் கரெக்டா வந்து நிப்பானுங்க. நாமலும் அவசரம் அவசரமா எல்லா விண்டோ கருமாந்திரத்தையும் குளோஸ் பண்ணனும். எப்பவாவது சாட் பண்ணோம்னா, கரெக்டா இவனுங்களுக்கு மட்டும் டவுட் வரும். ஆப்பீசுல இன்னிக்கு அந்தளவுக்கு வொர்க் எதுவுமே இல்லியே, அப்படி என்னத்தப் போட்டு மாங்கு மாங்குன்னு டைப் பண்றீங்கன்னு  குடை குடைன்னு குடைஞ்சு எடுத்துடுவானுக. பதில் சொல்லி மாளாது.


நீங்களே சொல்லுங்க சார், எத்தன தடவ இப்பிடி கண்ணா மூச்சி வெளையாடுறது? எத்தன நாளு பம்மி பம்மி, ப்ளாக்கு படிக்கறது, கமென்ட் போடுறது?  இதுக்கு என்ன தான் வழி?


இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதுதான் என் பழைய ஃப்ரண்டு ஒருத்தன் போன் பண்ணான். அப்போ பேச்சுவாக்குல நம்ம பிரச்சனையச் சொன்னேன்.  அவனும் ஒரு சூப்பர் வழி சொன்னான். அவன் சொன்னபடி, அந்த பொருள்களை வாங்கி கம்ப்யூட்டர்ல ஃபிக்ஸ் பண்ணிட்டேங்க. இப்போ ஆப்பீஸ்ல நிம்மதியா ப்ளாக் படிக்கிறேன். கமென்ட் போடுறேன். ஏன் 18+ பதிவுகள் கூட தைரியமா ஆப்பீஸ்லேயே படிக்கிறேன். உங்களுக்கும் அந்த கம்ப்யூட்டர் அக்சஸ்சரீஸ்கள் எல்லாம் தர்ரேங்க. உங்க ஆப்பீசு கம்ப்யூட்டல ஃபிக்ஸ் பண்ணிட்டீங்கன்னா, இனி நீங்களும் நிம்மதியா ப்ளாக்ல உலா வரலாம்.


சரி, எல்லாத்தையும் கீழே கொடுத்திருக்கேன் நீங்களே பார்த்து உங்களுக்குத் தேவையான அக்சஸ்சரிச செலக்ட் பண்ணிக்குங்க சார்.... பணம்..........??? அட என்ன சார்,  நாம என்ன அப்பிடியா பழகியிருக்கோம்? சும்மா வெச்சுக்குங்க சார்.... !






இனி யாரும் உங்க மானிட்டர எட்டிப் பார்க்க முடியாது, நீங்க என்ன டைப் பண்றீங்கன்னும் தெரியாது. டைப் பண்ற சவுண்டு கூட வெளியே கேட்காது (ஜாலியா சாட் பண்ணலாம்!)

எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்து:
மங்குனி அமைச்சர்: ஒருவாரமாத்தான் இந்த டெக்னிக்க என் ஆபீஸ் சிஸ்டத்துல யூஸ் பண்றேன். இப்பல்லாம் ரொம்ப சுதந்திரமா உணர்கிறேன். எல்லா ப்ளாக்கையும் இஷ்டத்துக்க்ப் படிக்கிறேன், கமென்ட் அடிக்கிறேன். என் பாஸ் கூட பாத்துட்டு எனக்கும் ஒண்ணு வாங்கிக்கொடுங்கன்னு கேட்டிருக்கார்.


லேப்டாப் மாடல், இனி நீங்க என்ன பண்றீங்கன்னு எந்தக் கொம்பனாலும் கண்டுபுடிக்க முடியாது. பெஸ்ட் ஃபார் பர்சனல் யூஸ்...!

கஸ்டமர் ஃபீட்பேக்:
டெர்ரர் பாண்டியன்: எனக்கு இந்த டெக்னிக் ரொம்ப யூஸ் ஆகுது சார். பதிவு ஒன்னும் எழுதுறது இல்லேன்னாலும், டெய்லி நிறைய படிக்கிறேன் சார், சாரி, பார்க்கிறேன் சார்.  இப்பல்லாம் ஆபீஸ்ல யாரும் என் பக்கத்துல கூட வர்ரதில்ல சார். நேத்துக்கூட தேவலீலை படம் இதுலதான் பார்த்தேன், சூப்பர்.


கீபோர்டுக்கு மட்டும்,
ப்ளாக் அடிக்கடி ஹேக் செய்யப்படும் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றது. ஏனென்றால் நீங்கள் டைப் செய்யும் யூசர் நேம், பாஸ்வெர்ட் யாருக்கும் தெரியாது, ஏன் உங்களுக்கே தெரியாது.

கஸ்டமர் ஃபீட்பேக்: 
சிரிப்பு போலீஸ்: ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் சார் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இது அதுக்கு ரொம்ப யூஸ் ஆகுது சார்.   சாட்டிங் பண்றதுக்கு ரொம்ப நல்லாருக்கு சார்.  

பி.கு: போட்டோக்கள் ஃபார்வர்டட் மெயிலில் வந்தவை

!


Wednesday, December 29, 2010

பன்னீஸ் கிச்சன்: தோசை





என்ன நண்பர்களே, போனவாரம் பன்னீஸ் கிச்சன்ல ஒரு நல்ல சமையல் குறிப்பு ஒண்ணு பார்த்தோம். இந்த வாரமும் தோசையப் பத்தி  ஒரு அற்புதமான  சமையல் குறிப்போட வந்திருக்கேன். தென்னிந்தியாவின் தனிச்சிறப்பு உணவான தோசையில்தான் எத்தனை எத்தனை வகைகள்? ஸ்பெசல் தோசை, சாதா தோசை, ஸ்பெசல் சாதா தோசை, மசால் தோசை, செட் தோசை, ஊத்தப்பம் (இதுவும் ஒரு தோசைதானே?), ரவா தோசை......   அப்பப்பப்பா......தமிழன் சாப்பாட்டுக்கே பாதி வாழ்க்கைய செலவு பண்ணிடறான்னு நெனக்கிறேன். பேச்சிலர் சமையலில் இடம் பெறாத ஒரு உணவுகளில் தோசையும் ஒன்று. ஒண்ணு ஒண்ணா போட்டு எடுக்கறதுக்குள்ள  சாப்பிடுற ஆசையே போயிடும். இந்த ஒரு விஷயத்துல நெஜமாவே பாவம்தான் லேடீஸ்........!


திருச்சி, சிங்காரதோப்பில், தோசா கார்னர் என்று ஒரு உணவகம் இருக்கு, அங்கே தோசை மட்டும் தான் கிடைக்கும், இன்ட்ரஸ்டிங்கா இருக்குல்ல? அங்கே சில வருடங்களூக்கு முன்னாடி போயிருந்தேன். மொத்தம் 16 வகைத் தோசைகள் (எல்லாம் சைவ தோசைகள்தான்). எல்லாத்தையும் ஒரே நேரத்துல டேஸ்ட் பண்ண முடியலேன்னாலும், ஆளுக்கொரு டைப்பா சொல்லி முடிஞ்ச வரைக்கும் கவர் பண்ணோம். நல்லாருந்துச்சு. குறிப்பா காலிபிளவர் தோசை அல்டிமேட்..! திருச்சி போனா ட்ரை பண்ணிப் பாருங்க சார். (அப்பாடா திருச்சியப் பத்தி இன்னொரு மேட்டர் போட்டாச்சு!)






கொஞ்சம் வடக்கே திரும்பிப் பாத்தா, தோசைதான் வட இந்தியர்களுக்கும் ரொம்பப் பிடித்த தென்னிந்திய உணவு. ஸ்பூனில் சாம்பாரைக் குடித்துக் கொண்டே அட்டகாசமாக தோசையை உள்ளே தள்ளுவார்கள். அவர்கள் செய்யும் தோசையின் ருசி சற்று வித்தியாசமாக இருக்கும் (நாம சப்பாத்தி செய்யற மாதிரி!), இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும். டெல்லி, சாகேட்டில் ஒரு தமிழர் (காரைக்குடிப்பக்கம்னு நெனைக்கிறேன்), தள்ளுவண்டி வைத்து சாப்பாட்டுக்கடை நடத்துகிறார்,  கிட்டத்தட்ட 25-30 வருடமாக. அங்கும் தோசைதான் ஸ்பெசல், மாலை 5 மணிக்கு மேல்தான் தொடங்குவார், இரவு 12 மணிவரை, நல்ல வியாபாரம்.  சும்மா தள்ளுவண்டிதானே என்று நினைக்காதீர்கள், அவர் இன்று இரு கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர். எந்தப்படிப்பும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று அல்லல் படுபவர்கள் இதையெல்லாம் சற்று யோசித்துப் பார்க்கலாம். நியூயார்க்கில் கூட ஒரு தமிழர் தோசை ஸ்டால் வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றார் என்று இணையதளங்களில் படித்திருக்ககிறேன்.


சரி சரி, கதை போதும்,  நாம போயி தோசையச் சுடுவோம் வாங்க........

ஸ்டெப்: 1
நல்ல ஹோட்டலா செலக்ட் பண்ணிக்குங்க.

ஸ்டெப் 2:
உங்களுக்கு பிடித்த தோசைய பார்சல் ஆர்டர் பண்ணி வாங்கிக்குங்க (காசு நீங்கதான் கொடுக்கனும்.... சார்)

ஸ்டெப் 3:
உடனே மெரினா பீச்சுக்கு கெளம்புங்க.

ஸ்டெப் 4:
பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.
டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!


  
பி.கு.: சொந்தமா தோசையும், துப்பாக்கியும் வெச்சிருக்கவங்களும், வீட்லேயே சுட்டுக்கலாம்.

எச்சரிக்கை: பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.......!

என்ன நண்பர்களே, தோசைய நல்லா சுட்டிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். எப்படி இருந்ததுன்னு உங்க கருத்துக்களையும் சொல்லுங்க. அடுத்த வாரமும் ஒரு அருமையான சமையல் குறிப்போட உங்களை சந்திருக்கிறேன்.............!

புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்!


Monday, December 27, 2010

ஏலத்திற்கு வந்த பிரபல பதிவர்களின் சொத்துக்கள்......



நம்ம பிரபல பதிவர்கள்லாம் ப்ளாக்குகள்ல சைடுல கீழ, மேலேன்னு ஏதாவது ஒரு மேட்டர சென்டிமென்ட்டா வெச்சி இருக்காங்க. அது எதுக்குன்னு எனக்கும் ரொம்ப நாளா வெளங்காம இருந்துச்சு.  அப்புறம் ஒருநா காரமடை ஜோசியர்தான் சொன்னாரு, அட மண்டு அது ப்ளாக்குக்கு கெட்ட சக்திகள்லாம் வரக்கூடாதுன்னு மந்திரிச்சது, வாஸ்துப் படி அவங்கவங்க ப்ளாக்குல வெச்சிருக்காங்கன்னு! எனக்கும் ஒன்னு அந்த மாதிரி பண்ணிக்கொடுங்கன்னு கேட்டதுக்கு, திட்டித் தொறத்தி விட்டுட்டார். என்ன பண்றது, போன தடவ ஐடியா கேட்டதுக்கே இன்னும் கடன் பாக்கி! 

நானும் வேற வழியே தெரியாம, நம்ம பிரபல பதிவருங்க வெச்சிருந்த மேட்டருங்கள எல்லாம் நைஸா லவட்டிக்கிட்டு வந்துட்டேன். இப்போ திடீர்னு பாருங்க, நிதி நெலம கொஞ்சம் சரியில்ல, அதுனால அது எல்லாத்தையும் ஏலத்துல விட்டு கொஞ்சம் நிதி தெரட்டிக்கிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். கீழ கடை பரப்பியிருக்கேன், பாத்து புடிச்சத செலக்ட் பண்ணிக்கிட்டு வழக்கம்போல நம்ம பேங்க் ஆப் ஆப்புரிக்காவுல பணத்த போட்டுடுங்க சார்.


1. மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருக்கும் விலை உயர்ந்த நோக்கியா கேமரா செல்போன்.

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே




எங்கள் வாடிக்கையாளர் ஒருவரின் கருத்து:
சௌந்தர்: கேமரா ரொம்ப சூப்பர் சார். போனவாரம் தான் வாங்கினேன். நல்ல வெயிட்டு. பிக்சர்ல 'இது மங்குனி அமைச்சர் ப்ளாக்கில் இருந்து திருடியதுன்னு' லெட்டர்ஸ் வருது சார். நல்லாருக்கு சார். அது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.

2. பட்டாபட்டி ப்ளாக்கில் இருக்கும் 1800-ங்கொய்யாலே ஹாட்லைன் சேட்டிலைட் ஃபோன்.

ஏலத்தொகை: 199 பைசா மட்டுமே



சிறப்பம்சங்கள்: அதிநவீன சேட்டிலைட் ஹாட்லைன் தொலைபேசி. இத்தாலி மற்றும் கொலம்பியாவிற்கு விஷேச இலவச அழைப்பு வசதி. மேலும் தற்போது தானைத்தலைவர் ராகுல் ஜீயின் தனி லைனுடன் பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது.  இதைப் பயன்படுத்தி பட்டாஜீ அவர்கள் போன வாரம் 2G யில் தனது பங்கைப் பெற்றுக்கொண்டதைப் போல, நீங்களும் பெற ஒரு அரிய வாய்ப்பு..... தவற விடாதீர்கள்... இன்றே கடைசி!

3. இம்சைஅரசன் பாபு வாயில் வைத்திருக்கும் அருவாள்.
இவர் எந்நேரமும் கவ்விக்கொண்டே திரியறதுனால, அந்த அருவாளை எடுக்க ரொம்பவே சிரமப்பட்டுட்டேங்க. அப்புறம் பாட்டி வடை சுட்ட கதையைப் வெச்சித்தான் எடுத்தோம். அதாங்க, நீங்க ரொம்ப நல்லாப் பாடுவீங்களே, எங்கே காக்கா மாதிரி ஒரு பாட்டுப் பாடுங்கன்னு சொன்னோம், அவ்வளவுதான்!
 இந்த அருவாளுக்கு ரெண்டு கத்தி எலவசங்கோவ்....  வாங்கிப் போட்டீங்கன்னா  கெடாவெட்டுக்கு யூஸ் ஆகும்ணா......!

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே




4. கோமாளி செல்வா
செல்வா அந்த வெள்ளக் காக்காவ வெச்சுத்தான் இத்தன  நாளும்  கரெக்டா  வடையத்  தூக்குறாருன்னு இப்போதான் தெரிஞ்சது, விட்ருவமா?  உடனே  தூக்கிட்டோம்ல? இப்போ நீங்க வேணா உங்க ப்ளாக்குல அத வெச்சு அழகு பாருங்களேன்......!
வடை எடு...கொண்டாடு.....!

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே



5. வெறும்பய:
இவர் ப்ளாக்குல இருந்து இதத் தூக்கிட்டு வாரதுக்குள்ள கைய சுட்டுடுச்சுங்க, ஒளிச்சு வேற வச்சிருந்தாரு. அது என்னான்னு நீங்களே பாத்துக்குங்க சார், பேரு சொன்னா அடிப்பாரு. இத உங்க ப்ளாக்குல வெச்சுக்கிட்டீங்கன்னா, கவிதையா எழுதித்தள்ளலாம். ரசிகைகளும் (!)  நிறைய கிடைப்பார்கள்.

ஏலத்தொகை: 99 பைசா மட்டுமே


6. டெர்ரர் பாண்டியன்:
இந்த ப்ளாக்குல ஒரு கருமாந்திரமும் கெடைக்கலிங்கோ, , சரி போனதுக்கு எதையாவது தூக்கித் தொலைவோமேன்னு இந்த ஒலக உருண்டையக் கெளப்பிக்கிட்டு வந்துட்டேங்கோ!

ஏலத்தொகை: 10 பைசா மட்டுமே




7. கோகுலத்தில் சூரியன் வெங்கட் ப்ளாக்குக்கு போனா ரெண்டு சங்கம்தான் கெடச்சுது. அப்பிடியே அள்ளிக்கிட்டு வந்துட்டோம். இந்த சங்கங்கள வாங்கி வெச்சுக்கிட்டீங்கன்னா, நீங்க ஒரு ப்ளாக்கு  வெச்சிருக்கறதே  மறந்திடுவீங்க  சார்.  பின்னே சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டான்னு நீங்க பல பஞ்சாயத்த சமாளிக்கறதுக்கே நேரம் பத்தாது, அப்புறம் ப்ளாக்க வெச்சு வேற என்னத்தப் பண்றது...?

ஏலத்தொகை: வாங்குனா அவங்களே சங்கத்துல இருந்து உங்களுக்கு ஏதாவது போட்டுக் கொடுப்பாங்க சார்!



8. நெ.1 பதிவர் சித்தப்பு சிபி.செந்தில்குமார் ப்ளாக்கில் கிடைத்தது ஒரு சூப்பர் மேட்டரு(DVD)ங்க, அத எலவசமாவே எல்லாருக்கும் வழங்குறேன். இது என்ன படம்னு கண்டுபுடிச்சீங்கன்னா ஒரு சிறப்புப் பரிசு, அதுவும் சித்தப்பு கையால உண்டு.


9. தேவாவின் ப்ளாக்குல இருந்து எதையோ சுட்டுக்கிட்டு வந்தேன், ஆனா அது என்னன்னுதான் இப்போ வரைக்கும் கண்டுபுடிக்கமுடியல. யாரு கண்டுபுடிக்கிறீங்களோ, அவங்க அது என்னன்னு எல்லாத்ததுக்கும் சொல்லிட்டு அப்படியே ஃப்ரியா எடுத்துக்கலாம்!.




10. சிரிப்பு போலீஸ்:
இந்தக் கடைல தூக்குற மாதிரி ஒரு எழவுமே சிக்கல,  இன்னும் கொஞ்சம் டீப்பா தேடிப்பார்த்தா எனிமா கொடுத்த மாதிரி புடிங்கிரும்னு, ஸ்ட்ரெயிட்டா கடையவே தூக்கிட்டு வந்துட்டேன்...! வேணுங்கறவங்க எடுத்துக்கலாம். எத வேணா எழுதலாம், என்ன வேணா பண்ணலாம். ஆனால் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் கண்டிப்பாகப் பொறுப்பேற்காது. இன்சூரன்ஸ் வைத்து இருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்!


ஏலத்தொகை: எப்படியாவது யாராவது எடுத்துத்தொலைங்க போதும்...!


User Name: dumeel007
Password: *********

எச்சரிக்கை: மேலே காணப்படும் பெயர்கள் யாவும் கற்பனையே (?).

பட உதவிக்கு நன்றி: கூகிள், shutterstock.com

!

Sunday, December 26, 2010

வலித்த இயற்கை........




ஆழிப்பேரலை வந்து
ஆறு வருடங்கள் இன்றோடு....!
உறவுகளை இழந்து தவிக்கும்
உறவுகளின் வலிக்கு,
ஆறா ரணத்தையும்
ஆற்றிடும் காலமே ஆறுதல்....!
ஆனால் நம் பூமிக்கு...?
இன்றாவது முடிவு
செய்வோம்....!
இயற்கையை அழிப்பதை
நிறுத்தி,
இயற்கை அழிப்பதை
நிறுத்துவோம்...!



Thursday, December 23, 2010

எனது ரசனையில்: பெண்குரல் பாடல்கள்........




இதை ஒரு தொடர்பதிவாக பலரும் எழுதிவருவது தெரிந்ததே. என்னையும் இந்தத் தொடர்பதிவிற்கு நண்பர்கள் பலரும் அழைத்திருந்தனர். பிடித்த பாடல்களை வெறும் பத்தில் அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை. மேலும் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்களை ஒன்றாக வகைப்படுத்துவதிலும் எனக்குச் சம்மதமில்லை. அதனால் பாடல்களை என்பது, தொண்ணூறு மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகளில் வந்தவை எனப் பிரித்திருக்கிறேன். பாடல்களைத் தரவரிசைப் படுத்தவில்லை. ரேண்டமாகவே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலுக்கும் சிறு குறிப்பு எழுத ஆசைதான் ஆனால், ஒரே பதிவிற்குள் அது சாத்திய்மில்லை என்பதால் விட்டுவிட்டேன்.


(இடமிருந்து வலமாக: எஸ்.ஜானகி, சுனந்தா, ஜென்ஸி)




(இடமிருந்து வலமாக:  உமாரமணன், எஸ்.பி.ஷைலஜா, சித்ரா)


80s:


1. புத்தம் புதுக் காலை…பொன்னிற வேளை…. எஸ். ஜானகி (அலைகள் ஓய்வதில்லை)

2. கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்… எஸ். ஜானகி (ரெட்டைவால் குருவி)

3. அழகிய கண்ணே…………எஸ். ஜானகி (உதிரிப் பூக்கள்)

4. ராசாவே உன்ன நம்பி…. எஸ்.ஜானகி (முதல் மரியாதை)

5. ஊரு சனம்… தூங்கிடுச்சு…. எஸ். ஜானகி (மெல்லத் திறந்தது கதவு)

6. ஒரு இனிய மனது…….. ஜென்ஸி (ஜானி)

7. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்…எஸ். ஜானகி (மங்கை ஒரு கங்கை)

8. சின்னச் சின்ன வண்ணக்குயில்…….. எஸ். ஜானகி (மௌனராகம்)

9. குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்… சித்ரா (மெல்லத் திறந்தது கதவு)

10. தெய்வீக ராகம்…. ஜென்ஸி (உல்லாசப் பறவைகள்)

11. ஆசைய காத்துல தூது விட்டு……..எஸ்.பி.ஷைலஜா (ஜானி)

12. ஆனந்த ராகம்……….உமாரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)

13. பன்னீரில் நனைந்த பூக்கள்………….. எஸ்.ஜானகி (உயிரே உனக்காக)

14. மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ…… எஸ்.ஜானகி (மந்திரப் புன்னகை)

15. என் வானிலே ஒரே வெண்ணிலா……..ஜென்ஸி (ஜானி)

16. சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ…… எஸ்.ஜானகி (ஜப்பானில் கல்யாணராமன்)

17. அழகு மலராட……………..எஸ். ஜானகி (வைதேகி காத்திருந்தாள்)

18. செண்பகமே செண்பகமே…. சுனந்தா (எங்க ஊரு பாட்டுக்காரன்)

19. ரோஜாப்பூ ஆடிவந்தது….. ஜானகி, கோரஸ் (அக்னி நட்சத்திரம்)



90s:

1. மாலையில் யாரோ மனதோடு பேச…. சுவர்ணலதா (சத்ரியன்)

2. கற்பூர பொம்மை ஒன்று….. பி. சுசீலா (கேளடி கண்மணி)

3. வந்ததே ஓ…ஓ..குங்குமம்…. சித்ரா (கிழக்கு வாசல்)

4. மன்னவா மன்னவா…..சுனந்தா (வால்டர் வெற்றிவேல்)

5. கொஞ்சம் நிலவு…… அனுபமா (திருடா திருடா)

6. ஊரடங்கும் சாமத்திலே…. சுஜாதா, உமா ரமணன் (புதுப்பட்டி பொன்னுத்தாயி)

7. ராசாவே உன்னை விட மாட்டேன்….. எஸ். ஜானகி (அரண்மனைக்கிளி)

8. வான்மதியே… வான்மதியே…. எஸ். ஜானகி (அரண்மனைக்கிளி)

9. நீதானே நாள்தோறும்… சுவர்ணலதா (பாட்டு வாத்தியார்)

10. அதிகாலைக் காற்றே நில்லு… எஸ். ஜானகி (தலைவாசல்)

11. கண்ணி ரெண்டில் ஏற்றி வைத்த நெய்விளக்கே…. பெண்குரல் கோரஸ் (அவதாரம்)

12. நிலா காய்கிறது……ஹரிணி (இந்திரா)

13. மார்கழிப் பூவே…….ஷோபா (மே மாதம்)

14. என்னுள்ளே என்னுள்ளே…….. ஸ்வர்ணலதா (வள்ளி)

15. அன்பென்ற மழையிலே….. அனுராதா ஸ்ரீராம் (மின்சாரக் கனவு)

 16. குயில்பாட்டு............ஸ்வர்ணலதா (என் ராசாவின் மனசிலே)


2000s

1. மயில் போல பொண்ணு ஒண்ணு… பவதாரிணி (பாரதி)

2. அடித் தோழி அடித்தோழியே…. கல்யாணி (தென்றல்)

3. ஒன்றா ரெண்டா ஆசைகள்…… பாம்பே ஜெயஸ்ரீ (காக்க காக்க)

4. இதுதானா……சித்ரா (சாமி)

5. திருமணமலர்கள்……… ஸ்வர்ணலதா….. (பூவெல்லாம் உன் வாசம்)

6. நினைத்து நினைத்து……. ஷ்ரெயாகோசல் (7G ரெயின்போ காலனி)

7. விடிகின்ற பொழுது…… மதுமிதா (ராம்)

8. அனல்மேலே பனித்துளி……. சுதா ரகுநாதன் (வாரணம் ஆயிரம்)

9. மருதாணி…….சாதனா சர்கம் (சக்கரக்கட்டி)


சமீப காலங்களில் அதிகமாக பாடல்கள் கேட்க முடியவில்லை, எனவேதான் அவை சற்றுக் குறைவாகவே உள்ளன.  மேலே உள்ள பாடல்கள் எதுவும் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளலாம். ஈமெயிலில் அனுப்பித்தருகிறேன்.

அனேகமாக அனைவரும் இந்தத் தொடர்பதிவை எழுதிவிட்டனர்.  இருந்தாலும் இரு பிரபல பதிவர்கள் இதை இன்னும் சட்டை செய்யாமலே இருக்கின்றனர். எனவே உங்கள் அனைவர் சார்பாகவும் அவர்கள் இருவரையும் இத்தொடர்பதிவிற்கு  அழைக்கிறேன்.


 !

Wednesday, December 22, 2010

சிம்ரனோமேனியா............




அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியாத நடிகைங்கள்ல சிம்ரனும் ஒருவர். தமிழ் சினிமாவுல நீண்டநாள் ஆதிக்கம் செய்து, கொஞ்சம் நடிக்கவும் செய்த நாயகி. ஸ்லிம்மாக இருந்தாலும் பரவசமூட்டும் கட்டழகு, சிக்கென்ற இடையழகு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவர். வீடியோ பாடல் கலக்சன் CD/DVDகளில், எப்போதும் ஆண் நடிகர்கள் பாடல்கள் தான் வெளியிடுவார்கள் (ரஜினி ஹிட்ஸ், கமல் ஹிட்ஸ் என்று), அதை மாற்றி முதல் முதலாக ஒரு நடிகை பெயரில் பாடல் கலக்சன்கள் வெளியிடப்பட்டது இவருக்குத்தான் என்று நினைக்கிறேன். சமீபத்தில் இவரது பாடல் காட்சி ஒன்றைக் காண நேர்ந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், நாம் சிம்ரனை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று...!  சும்மா சொல்லக்கூடாதுங்க, இன்னும் அவருக்கு மாற்றாக யாருமே வரலைன்னுதான் சொல்லனும். அவரது சில பல பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.




மனம் விரும்புதே (நேருக்கு நேர்):
இந்தப் பாடல்தான் சிம்ரனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்று கூறலாம். சிம்ரனின் தனிச்சிறப்பான இடுப்பை வெட்டி ஆடும் நடனத்திற்கு அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்தப்பாடலில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். இன்றைக்கும் சிம்ரன் ரசிகர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பாடல் இது. இந்தப் பாடலுக்காக படம் பார்த்தவர்கள் எத்தனையோ......


தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்த்தானா......!
எதிரும் புதிரும் படத்தில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சிம்ரன் ஆடியிருந்தார். டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரத்துடன் ஆடியிருப்பார், (அப்போது அவர்களூக்குள் ஏற்பட்ட நட்பு சில காலம் தொடர்ந்ததை அறிவீர்கள்). இப்பாடலில் சிம்ரன் படுஃப்ரஷ்ஷாக இருப்பார்.


எங்கெங்கெ எங்கெங்கெ... (நேருக்கு நேர்)
சிம்ரன் ஓடிக்கொண்டே இருக்கும்படியாக எடுக்கப்பட்ட பாடல் இது. பாடலின் துள்ளல் இசையும், சிம்ரனின் துள்ளும் அழகும் போட்டி போட்டுக்கொண்டு பார்ப்பவர் மனதை அள்ளும் ரம்மியமான பாடல்!


அடிக்கிற கை அணைக்குமா.... (நட்புக்காக)
ஒரு பெரிய ஹீரோ இருக்கும்போது கூட சிம்ரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாடல். நளின நடன அசைவுகள் நிறைந்த இந்தப்பாடலை சிம்ரனுக்காகவே எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.


தின்னாதே.... (பார்த்தேன் ரசித்தேன்)
இந்தப் படமே முழுக்க முழுக்க சிம்ரனின் ஆளுமைதான். அதுவும் இந்தப் பாடலில், சிம்ரன் வந்து ஒரு வெட்டு வெட்டியவுடன் தான் பாடலுக்கே உயிர் பிறக்கும். ரசனையான பாடல்...!


வெள்ளி மலரே.... (ஜோடி)
சிம்ரன் இப்பாடலில் வெகு அருமையான காஸ்ட்யூம்களில் வருவார். காணக் காணக் கண்கள் குளிரும். அருகில் நிற்கும் நடிகர் யார் என்று சட்டையே செய்யத் தோன்றாது. இந்தப்பாடல் முழுதும் (எப்போதும் தான்..!)அப்படி ஒரு வசீகரம் வழியும் சிம்ரனிடம்.


நிலவைக் கொண்டுவா.... (வாலி)
சிம்ரனுடைய  நளினமும், மெல்லிய வெட்கமும் கலந்த காதல் முகபாவனைகள் இப்பாடலில் நிறைந்திருக்கும். இரண்டாவது சரணத்தில் சிம்ரன்..."அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதுடா...." என்று பாடும் போது காட்டும் முகபாவனை இருக்கிறதே....... என்றென்றும் மறக்க முடியாக் காட்சி....!





 காதல் காதல்... (பூச்சூடவா)
இதுதான் சிம்ரனின் முதல் படம் என்று சொல்லப்படுகிறது (விஐபி அல்ல). சிம்ரன் இளமை பொங்க போடும் ஆட்டம், நம்மைத் திக்குமுக்காட வைக்கும். மழையில் நனையும் சிம்ரன், பார்ப்பவர் மனதைக் கரையோ கரி என்று கரைத்துவிடுவார் இப்பாடலில்.

வானில் காயுதே....... (வாலி)
காதல்/காம உணர்வுகளை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவது போல் அமைந்திருக்கும் இப்பாடலில் சிம்ரன், உண்மையில் ஒரு அழகுப்புலியாக சீறியிருப்பார். அதற்கேற்றார்போல வைக்கபட்டிருக்கும் நடன அசைவுகளும் சிம்ரனுக்கு வெகு ஜோராக இருக்கும்.

ஆல்தோட்டபூபதி நானடா....(யூத்)
டாகுடரு கெஞ்சி கூப்புட்டு நம்ம தங்கத்தலைவிய ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட வெச்சாரு. தலைவி ஆடுன ஆட்டத்துல டாகுடரு இருக்குற எடமே தெரியாமப் போச்சு (பாட்டுலதான்). இந்தப் பாட்டப் பார்க்கிறவங்க சிம்ரன மட்டும் தான் பார்ப்பாங்க, டாகுடரு பக்கத்துல நிக்கிறது கண்ணுக்கே தெரியாது.


உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
துள்ளும் ரிதத்துடன் மிக அருமையான முறையில் படமாக்கபட்டிருக்கும் பாடல். ஓரிரு முறைதான் இது வரை பார்க்க முடிந்தது. சிம்ரனுக்காககவே பார்க்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. யூ டியூபில் கிடைக்குதா என்று தெரியவில்ல. நல்ல தரமான வீடியோ லிங் வைத்திருப்பவர்கள் தொடர்புகொள்ளவும்.
 
அயராத பணிச்சுமை மற்றும் நேரக்குறைவு காரணமாக மற்ற பாடல்களைப் பற்றி விளக்கமாக (?)  எழுதமுடியவில்லை. எனவே கீழ்க்கண்ட பாடல்கள் பார்ட்-2 வில் தொடரப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அஞ்சாதே ஜீவா....(கண்ணெதிரே தோன்றினாள்)
  • உன்னோடுதான்....(கொண்டாட்டம்)
  • என்னவோ என்னவோ என் வசம்....(ப்ரியமானவளே)
  • கண்ணுக்குள்ளே காதலா (தமிழ்) 

  

 எச்சரிக்கை 1: இது ஒரு தொடர்பதிவல்ல. எனவே யாரும் இதைத் தொடர முயற்சிக்க வேண்டாம்.. ஜாக்கிரதை...... ! பின் விளைவுகளுக்குக்  கண்டிப்பாக  நிர்வாகம் பொறுப்பேற்காது!

எச்சரிக்கை 2: இதுல ஏன் 11 பாட்டுகளைப் பத்தி எழுதியிருக்கீங்கன்னு ஆரும் கேக்கப்படாது, ஏன்னா அது என் இஷ்டம்...! (அது ஏன்யா எல்லாரும் பத்துப் பத்துப் பாட்டா எழுதுறீங்க, 11 எழுதுனா நிக்காம கீழ விழுந்துடுமா?)

எச்சரிக்கை 3: கமென்ட் போடுபவர்கள் அனைவரும் தங்கத்தலைவி சிம்ரன் ரசிகர் மன்றத்தில் இலவசமாகச் சேர்க்கப்படுவார்கள்!

எச்சரிக்கை 4:  இனி யாராவது என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லுவீங்க?

!