Wednesday, January 9, 2013

பவர்ஸ்டார் படத்தின் கதை வெளியானது?




பார் புகழும் பவர்ஸ்டார் நடித்து ரிலீஸ் ஆக தயாராக இருக்கும் படம் ”கண்ணா லட்டு தின்னா ஆசையா?” இந்தப் படத்தில் பவர்ஸ்டார் காமெடி ஹீரோ வேடத்தில் கலக்கி வருகிறார். படப்பிடிப்பு பற்றிய செய்திகள், படங்கள் அவ்வப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பதும், நகைச்சுவைக்காக உலகளவில் பேசப்படும் படங்களில் ஒன்றாக இது அமையும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. 



இப்படத்தின் கதையை யாரும் அறிந்துவிடாதவாறு படுரகசியமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தின் கதை வெளியானது படக்குழுவுனரை மட்டுமல்லாது பவர்ஸ்டார் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கதையை யார் வெளியிட்டது என்பதை உயர்மட்டக் குழு ஒன்று விசாரிக்க வேண்டும் என்று பவர்ஸ்டார் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




நம் பவர்ஸ்டார் படத்தின் கதை ’இன்று போய் நாளை வா’ என்ற படத்தில் 1981-ம் ஆண்டு வெளியாகி இருப்பதாக சினிமா செய்திகள் தெரிவிக்கின்றன. பவர்ஸ்டார் நடிக்கும் க.ல.தி. ஆ வை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அதன் கதையை திருடி இன்னொரு படத்தை எடுத்ததும் இல்லாமல் அதனை 1981-லேயே ரிலீசும் செய்திருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்வது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம் அல்ல என்று சினிமா வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 



இந்தப் பரபரப்பினால் க.ல.தி.ஆ. படத்திற்கான எதிர்பார்ப்பு படுபயங்கரமாக அதிகரித்துள்ள நிலையில்  கமல் துணிச்சலாக விஸ்வரூபம் படத்தை பவர்ஸ்டார் படத்துடன் ரிலீஸ் செய்ய நினைத்து தற்போது பின்வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நன்றி: கூகிள் இமேஜஸ்...!

Monday, January 7, 2013

கடல் படத்தின் கதை....?




மணியண்ணன் கடல் படத்த வழக்கம் போல படுசீக்ரட்டா (?) எடுத்திட்டிருக்காராம். அதுக்காக சும்மா விட்ர முடியுங்களா.....? உக்காந்து தோண்டி துருவி கதைய கிண்டி எடுத்துட்டோம்ல.......




கதைப்படி ஹீரோ ஒரு மீனவர். பார்ட் டைம் ரவுடியாவும் இருக்கார். ஓப்பனிங் சீன்... விடிஞ்சும் விடியாமயும் இருட்டா இருக்கு, கடல்ல ஹீரோ கட்டுமரத்துல அன்னிக்கு கெடச்ச மீனை வெச்சிட்டு வந்துட்டு இருக்கார். அங்கங்க சக மீனவர்களும் வந்துட்டு இருக்காங்க. ஹீரோவுடைய நண்பனும் அருகில் தன் கட்டுமரத்தில வந்துட்டு இருக்கான். அப்போ அவனை ரெண்டு பேர் தாக்குறாங்க. ஹீரோ உதவிக்கு போறார். ஹீரோ ஏற்கனவே ரவுடின்றதால (?) எல்லாரையும் அடிச்சி துவம்சம் பண்றார். கடல் தண்ணிலயே ஃபைட்டு தண்ணி சிதற சிதற நடக்குது. ஒருவழியா நண்பனை காப்பாத்தி கரைக்கு கூட்டிட்டு வர்ரார். கரைல மெயின் வில்லன்...... நேரா நின்னுட்டு இருக்கான். ஹீரோவ பாத்து கேட்கிறான்.

வில்லன்: வந்துடு.. என்கூட வந்துடு

ஹீரோ: ஏன்?

வில்லன்: உனக்கு தெரியல..

ஹீரோ: அதான் ஏன்?

வில்லன்: எனக்கும் தெரியல....

ஹீரோ: வரலேன்னா....?

வில்லன்: அடிப்பேன்....

ஹீரோ: யாரை.....?

வில்லன்: அவனை...

ஹீரோ பதில் சொல்லாமல் திரும்பி போறார். ஒருநாள் கடற்கரையில் சண்டை நடக்கிறது. ஹீரோ யாரையோ போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் குடைபிடித்தபடி அந்த வழியாக வந்தவர் சண்டையை பார்த்து திகைத்துப் போய் நிற்கிறார். சண்டையின் நடுவே ஹீரோ, ஹீரோயினை பார்க்கிறார். கண்ணும் கண்ணும் நோக்குகின்றன. நோக்கு வர்மம் வேலை செய்கிறது. சண்டை நிற்கிறது. ஹீரோ திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கும் போதே ஹீரோயின் தலையை குனிந்தபடி சென்று விடுகிறார். ஹீரோவும் பின்னாடியே சென்று ஹீரோயின் அந்த ஊரில் உள்ள ஸ்கூலில் வந்திருக்கும் புது டீச்சர் என்பதை கண்டுபிடிக்கிறார். 

மாலை நேரம், இருட்டியும் இருட்டாமலும் இருக்கிறது. டீச்சரை பார்த்ததில் இருந்து அவர் ஞாபகமாவே இருக்கும் ஹீரோ எப்படியாவது டீச்சரை பார்த்துவிட வேண்டும் என்று இருட்டு சந்தில் இருக்கும் டீச்சர் வீட்டுப் பக்கமாக செல்கிறார். வீட்டுக்குள் இருந்து குடைபிடித்தபடி டீச்சர் வெளியே வருகிறார். வெளியில் நின்று கொண்டிருக்கும் ஹீரோவைப் பார்த்த டீச்சர் ஹீரோவை அருகில் அழைக்கிறார். 

டீச்சர்: எனக்கு வேணும்...

ஹீரோ: என்ன வேணும்..?

டீச்சர்: மீன்...

ஹீரோ: என்ன மீன்?

டீச்சர்: வஞ்சிரம்...

ஹீரோ: எடுத்துக்கோ... எல்லாம் உனக்குத்தான் எடுத்துக்கோ.....

டீச்சர்: எதை?

ஹீரோ: நான் புடிக்கிற மீன் எல்லாமே உனக்குத்தான்.... அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது?

டீச்சர் கண்கலங்கி நிற்க பாடல் ஆரம்பமாகிறது. பாடல் முடிந்ததும் பார்த்தால் கடற்கரை மணலில் மறுபடியும் சண்டை. உக்கிரமாக நடக்கிறது. ஹீரோ சுற்றிச் சுற்றி எல்லோரையும் போட்டு அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்.  ஹீரோயின் குடைபிடித்தபடி கடற்கரை மணலில் அலைகள் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அலைகள் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறன. சண்டையை பார்க்கிறார். மௌனமாக நிற்கிறார். க்ளோசப் ஷாட். டீச்சர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. உதடுகள் விம்முகின்றன. ஹீரோ இதைக் கவனித்து விட்டு மறுபடியும் ஃப்ரீஸ் ஆகி நிற்கிறார். டீச்சர் அருகில் வருகிறார்.

டீச்சர்: நிறுத்தனும்... எல்லாத்தையும் நிறுத்தனும்....

ஹீரோ: மொதல்ல அவங்கள நிறுத்த சொல்லுங்க....

டீச்சர்: நீங்கதான் மொதல்ல நிறுத்தனும்....

ஹீரோ: ஏன்?

டீச்சர்: ஏன்னா நீங்கதான் அடிக்கிறீங்க, அவங்க அடிவாங்குறாங்க....

ஹீரோ: முடியாது....

டீச்சர்: ஏன்?

ஹீரோ: எனக்கு என்னோட பங்கு வேணும்...

டீச்சர்: எதுல...?

ஹீரோ: அவங்க பண்ண சுண்டக்கஞ்சில....

டீச்சர்: அது வேணாம்....

ஹீரோ: ஏன்?

டீச்சர்: நான் காய்ச்சி தாரேன்.....

இதைக் கேட்டு ஹீரோ சிரிக்கிறார். ஹீரோயினும் சிரிக்கிறார். மாறி மாறி சிரிக்கிறார்கள். மறுபடியும் பாடல் தொடங்குகிறது........ பாடல் முடிந்த உடன் பார்த்தால் ஹீரோவும் ஹீரோயினும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். பின்னால் ஏற்கனவே அடிவாங்கி ஓடியவன் கத்தியோடு ஓடி வந்து ஹீரோவை குத்தி விடுகிறான். ஹீரோ மயங்கிச் சரிகிறார். டீச்சரின் கதறலோடு ஷாட் முடிகிறது.

ஹீரோயின் வீடு. டீச்சருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்து அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டீச்சர் உள்ளே அறையில் சோகம் அப்பிய முகத்துடன் மௌனமாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது திடீரென சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் வருகிறது. டீச்சர் அதிர்ந்து போய் நிற்கிறார்...... டீச்சரின் குடும்பத்தினரும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். 

ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தார்களா இல்லையா என்று வெண் திரையில் கண்டு மகிழ்க......



நன்றி: கூகிள் இமேஜஸ்

Saturday, January 5, 2013

தமிழ்சினிமாவின் டாப் நடிகர்கள்-2012

2012-ம் ஆண்டுக்கான பலவிதமான தரவரிசைகளில் முக்கியமானது சினிமா நடிகர்களின் வரிசை. அந்த வகையில் தமிழ்சினிமாவின் டாப் நடிகர் யார் என்று என்னுடைய பார்வையில் (?) இப்போது பார்க்க போகிறோம். முதலில் பரிசீலனையில் இருப்பவர்களைப் பற்றி பார்த்துவிடுவோம். 



முகமூடி நடிகர்
இவர் முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார். படத்தின் தலைப்பைப் போலவே படத்திலும் இவர் முகமூடி போட்டிருந்ததால் ஆள் யார் என்றே தெரியவில்லை. இருப்பினும் அருமையான நடிப்பை வாரி வழங்கி இருப்பதால் இவரைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டியிருக்கிறது. முகத்தை மூடி இருந்தாலும் சிக்ஸ் பேக் போன்ற கட்டுடல், கைகளோடு படத்தில் காட்டி இருப்பது பிரம்மாண்டம். சண்டைக்காட்சிகள் ரசனையின் உட்சகட்டம்.



மாற்றான் சூர்யா
2011-ல் 7-ம் அறிவு என்ற மெய்சிலிர்க்க வைக்கும் விஞ்சாணக் காவியத்தை கொடுத்த சூர்யா, மீண்டும் அதே போல் மாற்றான் என்ற அற்புதத்தை வழங்கி அனைவரையும் புல்லரிக்க செய்தார். ஒட்டிக் கொண்டு பிறந்த இரட்டையர்கள் வேடத்தில் ஜாலியாக தோளில் கையை போட்டுக் கொண்டே (?) நடித்து, காதல் செய்து, நடனம் ஆடி.. கண் கலங்க வைத்தார்.  படத்தில் ஒரே ஒரு ஹீரோயின் மட்டுமே இருந்தது ஒரு பெரிய குறை. இரண்டு ஹீரோயின்கள் இருந்திருந்தால் ஒரே நேரத்தில் விமலன், அகிலன் இருவரும் காதல் செய்து உலக சாதனை படைத்திருப்பார்கள் என்பது நிபுணர்களின் கருத்து. 




தாண்டவம் விக்ரம்
தொடர்ந்து டுமாங்கோலி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கொள்கை முடிவெடுத்து அதன்படி நடித்து வரும் நடிகர் விக்ரம், இந்த வருடமும் நம்மை ஏமாற்றவில்லை. தாண்டவம் என்ற உலகப்படத்தில் வயதான வேடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து எல்லோரையும் பரவசப்படுத்தினார். அவருடைய பழைய படங்களான சாமி, தூள் போன்ற படங்களை பார்த்தவர்கள் அனைவரும் தாண்டவம் பார்த்து சிலிர்த்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். விக்ரமின் டுமாங்கோலி சாதனையில் இது இன்னும் ஒரு மைல்கல்.



முரட்டுக்காளை சுந்தர் சீ
டாகுடர் கேப்டன் அவர்கள் தீவிர அரசியலில் குதித்தவுடன் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடத்தை யார் நிரப்புவார்களோ என்று கவலைப்பட்ட தமிழ் சினிமா ஆர்வலர்களின் காயத்திற்கு அருமருந்தாக வந்து அமர்ந்தவர் நமது சுந்தர் சீ. கேப்டனின் இடத்தை மட்டுமல்ல, சூப்பர் ஸ்டாரின் இடைத்தையும் என்னால் நிரப்ப முடியும் என்று உலகுக்கே எடுத்துக்காட்டும் விதமாக முரட்டுக்காளை என்ற காவியத்தில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். அவரது வசனங்கள், உச்சரிப்பு, சண்டைக்காட்சிகள் அனைத்துமே வருங்கால தமிழ்சினிமாவை அவரது தோளில் குண்டுக்கட்டாக அப்படியே தூக்கிவைத்துவிடக் கூடிய தீவிரத்துடன் இருக்கின்றன. வெல்டன் சுந்தர் சீ. 





மேதை ராமராஜன்
2012-ன் தொடக்கத்தில் வெளியான மேதை படம் ராமராஜனுக்கு பெரும்புகழ் தேடித்தந்தது. பதிவர்கள், ட்வீட்டர்கள், ஃபேஸ்புக்காளர்கள் அனைவரும் மேதை படத்தை சந்தோசத்துடன் ஆரவாரமாக வரவேற்றனர். ஒரே குத்தில் 10 பேரை ராமராஜன் வீழ்த்திய மயிர்க்கூச்செரியும் காட்சி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இது இளம் நடிகர்களான சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார், சொம்பு ஆகியோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மேதையில் நடித்து மாமேதையான ராமராஜன் 2012-ன் முக்கிய நடிகர்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துள்ளார்.


இத்தனை நடிகர்கள் முதலிடத்திற்கு போட்டா போட்டி (?) போட்டாலும், மிக எளிதாகவும் சுலபமாகவும் அதை தட்டிச் செல்பவர், 2012-ல் எந்தப் படத்திலும் நடிக்காமலே வருடம் முழுதும் அவரைப் பற்றியே அனைவரையும் பேச வைத்த பெருமை மிக்க நடிகரான.....
.
.
.

.

.


.



.




பவர்ஸ்டாரே.......!



பவர்ஸ்டாரின் எழில்மிகு தோற்றம்....!



வாட் எ பர்ஃபாமன்ஸ்... வாட் எ பர்ஃபாமன்ஸ்......!


நன்றி: கூகிள் இமேஜஸ்

Friday, January 4, 2013

கொந்தளித்த பவர்ஸ்டார் ரசிகர்கள்....



தகதகவென்று மின்னும் பவர்ஸ்டார்...


பவர்ஸ்டாருக்கு போட்டியாக ஒரு புதுநடிகர் வந்துவிட்டார் என்றும் அவர்தான் இனி 2013-ன் புதிய பவர்ஸ்டார் என்றும் நான் தெரிவித்திருந்த கருத்தைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்களாக மெயிலிலும், மெசேஜிலும் பவர்ஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பவர்ஸ்டாருக்குப் போட்டியாக இனி ஒருவர் உலகில் பிறக்கவே வாய்ப்பில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில் எப்படி இந்த மாதிரி கருத்து தெரிவிக்கலாம் என்பதே அவர்களின் உள்ளக்குமுறல். அடிப்படையில் நானும் ஒரு பவர்ஸ்டார் ரசிகன் என்பதால் அவர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. 







ரசிகர்களின் மனக்குமுறலுக்கு மருந்திடும் வகையிலும், உண்மை, நீதி, நேர்மை, நியாயத்தை நிலைநாட்டிடும் வகையிலும் புதியநடிகர் ராஜகுமாரனை அடுத்த பவர்ஸ்டார் என்று அழைத்ததை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். மேலும் பவர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் அவரை வரவேற்க வேண்டும் என்பதையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்பதை அனைத்துலக பவர்ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த பதிவின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். 




மேக்கப்பே வேண்டாம் என்று கூறி, மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக சும்மா வெறும் மஞ்சளும், கருப்பு லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக்கொண்டு இவர் நடித்துள்ள விஷயத்தைக் கேள்விப்பட்டு கோடம்பாக்கமே வியப்பில் திகைத்துப் போய் கிடக்கிறதாம். 

நமக்கு ஏற்கனவே பெரிய டாகுடர், சின்ன டாகுடர், சொம்பு, கரடி, சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார், வீரத்தளபதி என்று பல ஆஸ்த்தான நாயகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்துள்ள இந்த புரட்சி நடிகரை எப்படிப் பெயர் வைத்து அழைக்கலாம் என்று கருத்து கூறுங்கள் நண்பர்களே... உங்களுக்கு ஐந்து சாய்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

அ) இளைய பவர்ஸ்டார்
ஆ) கறுப்பு பவர்ஸ்டார்
இ) மஞ்சள் பவர்ஸ்டார்
ஈ) பவர்கட் பவர்ஸ்டார்
உ) லிப்ஸ்டிக் பவர் ஸ்டார்

நன்றி: கூகிள் இமேஜஸ்

Wednesday, January 2, 2013

பவர்ஸ்டாரையே அதிர வைத்த புது நடிகர்...

பவர்ஸ்டார் என்றாலே இன்று தெரியாத ஆளே உலகில் இருக்க முடியாது, அந்தளவிற்கு தன் அழகாலும், நடிப்பாலும், நடனத்தாலும் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நம்ம பவர்ஸ்டார் சீனிவாசன். அப்படிப்பட்ட அவரே அசந்து போய் அதிர்ந்து கிடைக்கிறாராம் ஒரு புதுமுக நடிகரைப் பார்த்துவிட்டு.... 

புதுமுக நடிகரைப் பார்த்து பவர்ஸ்டார் அதிர்ச்சியடைந்த செய்தி தமிழ் சினிமா உலகையே கலவரமடைய செய்துள்ளது. நாலு படங்கள் நடித்து முடிக்கும் முன்பே இப்படி ஒரு சோதனையா என்று பவர்ஸ்டார் புலம்பியதாக தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து உலகெங்கும் உள்ள பவர்ஸ்டார் ரசிகர்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பவர்ஸ்டார் ரசிகர்கள் யாரும் வீண் பதற்றம் அடையாமல் நம் பவர்ஸ்டாரையே அசத்திய அந்த புதுமுக நடிகரை பெருந்தன்மையோடு வாழ்த்தி வரவேற்குமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்....


அஜீத்துக்கு அப்புறம் கோட்டு சூட்டு இவ்ளோ நல்லாருக்கறது இவருக்குத்தான்.....


துப்பாக்கி-2 (அட ரெண்டு துப்பாக்கின்னு சொன்னேன்யா....)


முரட்டுக் கோட்டை இரும்பு சிங்கம்?


ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லாருக்குல்ல? 


புன்னகை எம்ஜிஆர்...?

இவர் யார் என்று முதலில் சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு........  ஒரு கமெண்ட் முழுக்க முழுக்க இனாம் இனாம் இனாம்.............!

நன்றி: http://www.screen4screen.com