Friday, October 28, 2016

பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்

பைரவா... யார்ரா அவன்...?


அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உப்புமா என்று எழுதி வைத்தால் அதன் கீழே பைரவா என்று யாரோ கிறுக்கி விட்டு ஓடிவிடுகிறார்கள். ஒவ்வொரு ஹோட்டலிலும் இது நடக்கிறது ஹோட்டல் ஓனர்கள் கொதிப்படைந்து அதை கண்டுபிடிக்க அடியாள்களை வைக்கின்றனர். ஆனாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் ஊரே கூடி நின்று அதை பற்றி பேசுகின்றனர். அப்போது ஹோட்டல்கள் கூட்ட தலைவன் அது யார் என்று யாராவது தானா வந்து ஒத்துக்கொள்ளாவிட்டால் ஊரில் உள்ள எல்லா ஹோட்டல்களையும் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுகின்றான். ஊர் தலைவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். அப்போது அண்ணா வந்து அது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறார். அது ஏன் அப்படி எழுதினார் என்று எல்லாரும் கேக்கும் போது அவரது நண்பனின் தம்பி ரவா உப்புமா கேட்டு கெஞ்சியதாகவும், அது கிடைக்காமல் அதற்கு பதிலாக ரவா தோசை வாங்கி கொடுத்ததாகவும், அதனால் அவன் அந்த ரவா உப்புமா ஏக்கத்திலேயே செத்துப்போய் விட்டதாகவும் அதிலிருந்து எல்லா ஹோட்டல்களிலும் ரவா உப்புமா மட்டுமே செய்ய வேண்டும் என்றே அப்படி எழுதி போட்டதாக கண்ணீர்மல்க சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் நெகிழ்கின்றனர். இனி ஹோட்டல்களில் ரவா உப்புமா மட்டுமே சமைப்போம் என்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் சபதம் எடுக்கின்றனர். அன்றில் இருந்து அண்ணாவை பைரவா என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் அமைதியாக ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு லாரி ஓனர், அண்ணாவின் ஃப்ளாஷ்பேக்கில் மிகவும் நெகிழ்ந்து போய் அண்ணாவை தனது லாரி கிளீனராக நியமனம் செய்து தனது லாரியை கண்ணீர் மல்க ஒப்படைக்கிறார் . அண்ணாவும் சந்தோசமாக வரலாம் வா வரலாம் வா என்றூ பாடிக்கொண்டே வேலை செய்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் ஆட்டோக்காரன் பாடலை ஆட்டோ ஸ்டேண்டுகளில் ஆயுத பூஜையன்று போடுவதைப் போல இனி இந்தியா முழுதும் லாரி ஸ்டேண்டுகளில் இந்த பாட்டுதான் ஒலிக்கப்போகிறது.

க்ளீனராக இருக்கும் அண்ணா படிப்படியாக முன்னேறி லாரி ஓட்டுனராக பதவியேற்கிறார். லாரி ஸ்டேண்டு முழுதும் அண்ணாவை தலைவராக கொண்டாடுகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் சென்னைக்கு சரக்கு கொண்டு செல்லவேண்டிய வேலை வருகிறது. கொண்டு செல்லும் வழியில் ஒரு ரவுடி கேங் சரக்கைக் கைப்பற்ற முயல்கிறது, ஆக்ரோசமாக சண்டை போட்டு சரக்கை மீட்டுக் கொண்டு சென்னை விரைகிறார். சென்னை சென்றதும்தான் தெரிகிறது லாரியில் இருக்கும் சரக்கு ஒரு சர்வதேச போதை கும்பல் கைக்கு செல்ல இருக்கிறது என்று. அண்ணா சரக்கை அவர்களிடம் ஒப்படைக்காமல் லாரியோடு தலைமறைவாகிறார். போதை கும்பல் தலைவனிடம் தெரிஞ்ச எதிரியவிட தெரியாத எதிரிக்குத்தான் அல்லு அதிகம் இருக்கனும் என்று சவால் விடுகிறார்.



இதற்கிடையில் எதிர் கேங் அண்ணாவிடம் சரக்கு இருப்பதை அறிந்து பேரம் பேச வருகிறது. அண்ணா அவர்களை சண்டை போட்டு விரட்டி விடுகிறார். கோபமடையும் அந்த கும்பல் அண்ணாவை போலீசிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறது. அதை அறிந்த அண்ணா  கன்னத்தில் மறு வைத்து, தாடையில் தாடி வைத்து, தலையில் விக் வைத்து மாறுவேடத்தில் தண்ணீர் லாரி ஓட்ட ஆரம்பிக்கிறார். வழியில் கீர்த்தி சுரேஷுக்கு லிஃப்ட் கொடுத்து, அண்ணா லாரி ஓட்டும் அழகை பார்த்து கீர்த்திக்கு காதல் வந்து என்று தனியே ஒரு ரொமாண்ட்டிக் ட்ராக்கும் அழகாக வந்து போகிறது. போலீசையும், ரவுடி கேங்கையும், போதை கும்பலையும் சமாளித்து இறுதியில் கீர்த்தியை எப்படி கைப்பிடிக்கிறார் என்பதையில் வெள்ளித்திரையில் காண்க......




Friday, October 14, 2016

ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....




ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பார்ப்போம்... 

இதுவர வந்த நிச்சயமான பொண்ண காதலிச்சு மனச மாத்துற படங்கள்ல அந்த மாப்பிள்ளைய கெட்டவனாக காட்டி, அது நியாயம்னு அழகா எடுத்து சொல்லி இருப்பாங்க... அதே மாதிரி ரெமோவுலயும் அந்த மாப்ள ஏற்கனவே ஓரு பொண்ண கழட்டிவிட்டுட்டு வர்ரதாதான் சொல்றாங்க... அதுவும் இல்லாம அவனை பாத்தா நமக்கே புடிக்கல... ஒரு புடவை விஷயத்துலயே அந்த பொண்ணு மனச நோகடிச்சிருக்கானே... அவனை கட்டிக்கிட்டா அந்த பொண்ணு நிம்மதியா வாழுமா...  க்ளைமேக்ஸ்ல கூட கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறான் அந்த மாப்ள. ஹீரோயினை காதலிச்சது மூலமா அவளுக்கு நல்லதுதான் பண்ணி இருக்கார் ஹீரோ. சோ படத்தை பத்தின நெகடிவ் விமர்சனங்கள் அர்த்தமற்றவை. 

படத்துல ஏகப்பட்ட லாஜீக் மீறல்கள் இருக்குன்னு எல்லாருமே சொன்னாங்க. படத்துல நடிக்க சான்ஸ் கேக்கிறதுக்காக பொம்பள வேஷம் போடுறாரு சிகா. மொதோநாளு ஒரு வெள்ளக்கார தொர வந்து பொம்பள மேக்கப் போட்டுவிட்டாப்புல..... ஆனா அடுத்த நாளும் பொம்பள வேஷத்துல ஹீரோயின பாக்க போறாரு.... அப்போ யாருய்யா போட்டுவிட்டது.... சினிமா ஷூட்டிங்ல டெய்லி மேக்கப் போட காசு குடுத்து ஆள் வெச்சிருக்கானுங்களே அவனுங்க எல்லாம் கேனையனுங்களா...... அதுவும் தனக்குத்தானே மேக்கப் எப்படி அந்தளவுக்கு போட முடியும்? இதாவது பரவால்ல..  பர்த்டே விஷ் பண்ணும் போதும், க்ளைமேக்ஸ் ஃபைட் சீன்லயும் 10 செகண்டுல பொம்பள வேஷத்துல இருந்து ஆம்பளையா மாறுறாரு... அது எப்படி சாத்தியம்..... சும்மா வெறும் தண்ணில மூஞ்சிய கழுவவே 30 செகண்டாவது ஆகுமே? 

அப்புறம் நர்ஸ்னா டாக்டர் பின்னாடி போறதுதான் வேலையா... ஊசி போடாம எத்தன நாள்யா சமாளிக்க முடியும்..... டெம்பரேச்சர் பாக்கனும், பல்ஸ் பாக்கனும், பிரெசர் செக் பண்ணனும், கட்டுப்போடனும்..... இதுல நர்சிங் சூபர்வைசருக்கே சந்தேகம் வருது.... கூடவே இருக்க டாக்டர் ஹீரோயினுக்கு சந்தேகம் வராதா...? அந்த நர்சிங் சூபர்வைசர் ரெமோ நர்ஸ்தானானு செக் வேற பண்ணுது, அதான் அப்பவே சொதப்புறான்ல, அதுக்கப்புறம் அத என்னன்னு பாக்கவே மாட்டாங்களா.... படத்துல லாஜிக் மீறல் இருக்கலாம்.... ஆனா படமே லாஜீக் மீறலா இருந்தா எப்படி...? 

இது காமெடிப்படம்னு பரவலா எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆனா படத்துல ஒரு காமெடி சீன் கூட இல்ல..... தியேட்டர்ல கூட யாரும் சிரிக்கிற சத்தம் கேக்கல..... பட் க்ளைமேக்ஸ்ல காவியா நோவியான்னு ஒரு சாங் வருது.... அது படத்துல பாத்தீங்கன்னா சிரிப்புக்கு 100% கேரண்டி. காமெடி சீன் இல்லாத குறைய இந்த பாட்டுதுதான் போக்குது, தேங்ஸ் அனிருத். 


அம்மாவ வர்ர சரண்யா..... பாவம்... சிகா பண்ற ப்ராடு வேலைய பாத்து திட்டுறவங்க, கீர்த்தி சுரேஷ் அழக(?) பாத்ததும் அப்படியே சேஞ்ச் ஆகிடுறாங்களாம்... என்ன பிராடுத்தனம் பண்ணாலும் பரவால்ல, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க....  தியேட்டர்ல படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறதுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்....  சதீஷ் காமெடியனா வர்ராராம்... பட் படத்துல காமெடி சீனே இல்லாம எதுக்கு காமெடியனை போட்டிருக்காங்கன்னு புரியல... அவராவது பரவால்ல. மொட்டை ராஜேந்திரனும் கூடவே வர்ரார். அது அவருக்கே ஏன்னு புரிஞ்சிருக்காது. சோ அதை கேள்வி கேட்பது நியாயம் இல்லை. 

கல்யாணம் நிச்சயமான பொண்ண மனசை கெடுத்து காதலிக்கிறத புல்டைம் ஜாபா வெச்சிருக்கார் சிகான்னு கலாச்சார காவலர்கள் பலரும் இணையத்துல குரல் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வெச்சிருக்கேன்... படத்துல ஹீரோயின் நிச்சயார்த்த மோதிரத்த கழட்டுற சீன்ல நச்னு வீணை மியூசிக் போட்டு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாத்தையும் தனியாளா தூக்கி நிறுத்தி இருக்கார் நம்ம அனிருத்...  நம் கலாச்சார காவலர்கள் என்னதான் படத்தை திட்டினாலும் அட்லீஸ்ட் அனிருத்தையாவது பாராட்டி இருக்கனும்... 

ஹீரோயினை பத்தி எதுவுமே சொல்லலியான்னு கேக்குறீங்க அதானே..... படத்துல வர்ர யதார்த்தமான ஒரே கேரக்டர் அதுதான். ஹீரோயின் கேரக்டர் டாக்டராவே இருந்தாலும் தமிழ் சினிமா இலக்கணத்தை மீறாம லூசுத்தனமாதான் காட்டி இருக்காங்க. அதுக்காக அவங்க கேரக்டரை டைரக்டர் பாத்து பாத்து செதுக்கி இருக்கார் போல. டாக்டருக்கு படிச்சிட்டு இப்படி கேனையா இருக்கேன்னு படத்துல ஒரு இடத்துல கூட நமக்கு தோனவே இல்ல... அதுவே இந்த கேரக்டரின் வெற்றி.... 

படத்துல இத்தனை லாஜிக்மீறல்கள், கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும் கிளைமேக்ஸ்ல ஹீரோ, வில்லன்கூட நேருக்கு நேர் கையால சண்டை போட்டு ஜெயிப்பதை பார்ப்பது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு..... கமர்சியல் சினிமாவுல கூட இப்படி வெகு யதார்த்தமான சீன் வைப்பது தமிழ்சினிமாவில் மட்டுமே சாத்தியம்....... 

மொத்தத்தில் ரெமோ ஒரு மாய யதார்த்த கலைப்படைப்பு...!



(படம் பார்த்துட்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களா போட்டத ஒருங்கிணைத்து பட்டி டிங்கரிங் பண்ணி விமர்சனமா மாத்தி இருக்கேன்.... ஹி....ஹி..... )