Sunday, October 30, 2011

கதையின் கதை... (சவால் சிறுகதை 2011)

இது சவால் சிறுகதைப் போட்டி 2011-க்கான எனது இரண்டாவது சிறுகதை.



சந்திரன் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவன் கையில் நேற்று மாலையிலிருந்து இருந்து கொண்டிருந்தது. தலைகீழாக, சைடாக என்று எல்லாப்பக்கமும் திருப்பித் திருப்பி பார்த்து யோசித்து விட்டான். ஒன்றும் பிடிபடவில்லை. படத்தில் இரு துண்டு பேப்பர்கள் இருந்தன. ஒன்றில் எஸ்.பி. கோகுலுக்கு ஒருவர் S W H2 6F என்ற குறியீட்டை அனுப்பி இருக்கிறார், இன்னொன்றில் அது தவறான குறியீடு என்று இன்னொருவருக்கு சொல்லி இருக்கிறார். அதை பார்த்துக் கொண்டிருப்பவரின் கையில் இருக்கும் செல்போனில் விஷ்ணு இன்ஃபார்மரிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. அது ஒரு தொடுதிரை செல்போன் என்று தெரிந்தது, ஆனால் போன் என்ன பிராண்டு, மாடல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறமாக வெளியில் ஏதாவது ஒரு செல்போன் கடைக்குச் சென்று தேட வேண்டும் என எண்ணிக் கொண்டான். மேசை மீது ஒரு ஸ்டீல் ஸ்கேலும் வெள்ளைக்காகிதமும் இருக்கிறது. அவ்வளவுதான். இதைத்தான் அவன் நேற்று மாலையில் இருந்து யோசித்துக் கொண்டிருக்கிறான். 


செல்போனைக் கையில் வைத்திருப்பவர் ஒரு ஆண் என்று அவரது கையும் தலையும் உணர்த்தின. இடது கையில் வாட்ச் கட்டி இருக்கிறார். நீலக் கலர் ஸ்ட்ராப். வாட்ச் அந்தப் பக்கமாக இருப்பதால் என்ன பிராண்ட், டிஜிட்டல் வாட்சா, அப்போ நேரம் என்னவென்றும் எதுவும் தெரியவில்லை. வெளிச்சத்தை வைத்துப் பார்க்கும் போது அது இரவு நேரமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் கேமரா ப்ளாஷ் லைட்டுகள் எப்போதும் குழப்பிவிடும். வெள்ளைக் காகிதம் குறிப்புகள் எதுவும் எழுதுவதற்காக அந்த காகிதம் வைக்கப்பட்டிருக்கலாம். 

கனவில் கூட  அந்த S W H2 6F என்ற குறியீடுகள் வந்து ஆட்டம் போட்டன. அப்போதாவது ஏதாவது க்ளூ கிடைக்குமா என்று எழுந்து உக்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். விஷ்ணு என்பவன் ஒரு இன்ஃபார்மர். அது போட்டோவிலேயே இருக்கிறது. இன்ஃபார்மர் என்றால் அவனுக்குத் தெரிந்த வரை காவல் துறைக்கு ரகசியமாக தகவல் கொடுப்பவர்கள்தான். அந்த துண்டு காகிதத்தில் எஸ்.பி. கோகுல் என்று வேறு இருக்கிறது, எனவே இது நிச்சயமாக காவல் துறை சம்பந்தப்பட்டதுதான். அதுவேறு அவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஏதாவது பெரிய இடத்து வில்லங்கமான சமாச்சாரமாக இருக்குமோ என்று தோன்றியது. 

அவனுக்கு திடீரென விக்கியின் ஞாபகம் வந்தது. விக்கியும் சந்திரனும் பள்ளி செல்லும் காலத்தில் இருந்தே தோழர்கள். விக்கி நன்றாக பேசும் திறமை உடையவன் யாரையும் எளிதில் கவர்ந்து விடுவான். அவன் இருக்கும் இடம் எப்போதும் நண்பர்கள் சூழ கலகலப்பாக இருக்கும், இப்போது விக்கி பெரிய அரசியல்வாதி. சந்திரனுக்கு இந்த அரசியல், பரபரப்பு எதுவும் பிடிக்காது அதனால் அவனிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தான். ஆனால் இப்போது வேறு வழியில்லை, விக்கியைத்தான் உதவி கேட்க வேண்டும் போல. உடனே செல்போனை எடுத்து விக்கியை அழைத்தான். விபரத்தைச் சொன்னான். விக்கி உடனே அன்று மாலை வந்து பார்ப்பதாகச் சொல்லி போனை கட் செய்தான்.

மாலை வரை என்ன செய்வது? அதற்குள் தன்னால் முடிந்தவரை தகவல் சேகரிக்கலாம் என்று முடிவு செய்தான். முதலில் ஒரு செல்போன் ஷோரூமிற்குச் சென்று அது என்னவகை செல்போன் என்று கண்டுபிடிக்க வேண்டும். அருகில் இருந்த கடைக்குச் சென்றான். போட்டோவை அங்கே அவர்களிடம் காண்பிக்க தயக்கமாக இருந்தது. கடையில் இருந்த ஒவ்வொரு போன் மாடலாகத் தேடினான். ஒன்றும் சிக்கவில்லை. நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது. வேறு என்ன செய்யலாம்? 

அந்த குறீயீடுகளை வைத்து கூகிளில் தேடலாமா? ஆகா நல்ல யோசனை உடனே செயல்படுத்த வேண்டியதுதான் என்று அவசரமாக வீட்டுக்கு வந்தான். அங்கே மின்சாரம் இல்லை. எப்போது வரும் என்றும் தெரியாது. வீணாப்போன லேப்டாப் பேட்டரி முடிந்து போய் பலமாதங்களாகிறது. எரிச்சலுடன் வெளியில் வந்தான். டீக்கடைக்கு சென்றான். ஒரு டீ சொல்லிவிட்டு தினத்தந்தியை எடுத்துக் கொண்டு பெஞ்சில் உக்கார்ந்தான். என்ன செய்யலாம். ராகினி வேறு மிக அவசரம் இன்றே கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாள்.  இந்த விக்கி வேறு மாலைதான் வருவேன் என்றூ சொல்லிவிட்டான். அதற்குள் ராகினிக்கு எதுவும் ஆகிவிடுமோ....? அந்த நினைப்பே பயங்கரமாக இருந்தது. ராகினி கொஞ்சம் துடிப்பான பெண், ஏதாவது சமுதாயம், பிரச்சனை என்று பேசிக் கொண்டிருப்பவள். இப்போது நினைத்தவுடன் அவளுக்கு போன் செய்யவும் முடியாது. ஏற்கனவே அவர்கள் வீட்டில் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நானாக மேசேஜ் கொடுக்கும் வரை எனக்கு போன் பண்ணவே கூடாது என்று வேறு கண்டிப்பாகச் சொல்லி இருந்தாள் ராகினி. 

ஆனால் சந்திரனால் அமைதியாக இருக்க முடியவில்லை. டீயைக் கேன்சல் செய்து வசவுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வேகமாக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான். காதல் என்ன ஆனாலும் பரவாயில்லை அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று முடிவு செய்து அவளை அழைத்தான். இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தாள். இரு அப்புறம் கூப்பிடுகிறேன் என்று கிசுகிசு குரலில் கூறிவிட்டு கட் பண்ணிவிட்டாள். எரிச்சலாக வந்தது. நீண்ட பெருமூச்சுவிட்டபடி அயர்ந்து போய் பெட்டில் சாய்ந்தான். இரவு சரியான தூக்கம் இல்லாததால் அப்படியே கண்ணயர்ந்தான். 

எவ்வளவு நேரம் அப்படியே தூங்கினானோ திடீரென போன் அடித்தது. பதறித் துடித்து எழுந்து எடுத்தால் விக்கி லைனில் இருந்தான். அந்த எஸ்பி பெயர், ஏரியா கேட்டான். ஏரியா தெரியாது என்று சந்திரன் சொன்னதும் கொஞ்சம் எரிச்சல் பட்டான் விக்கி. யார், என்னவென்று கண்டுபிடிக்க கொஞ்சம் தாமதமாகும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டான். பாவம் சந்திரன் எஸ்.பி கோகுல் எந்த ஏரியா என்று அவனுக்கு தெரிந்தால்தானே சொல்லுவான். இப்போது எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டது போ இருந்தது. இனி அவனால் செய்ய இன்றுமில்லை. சற்று அமைதியாக அம்ர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் மின்சாரம் வந்தது. உடனே பாய்ந்து சென்று லேப்டாப்பை உயிர்ப்பித்தான். படபடவென கூகிளில்  S W H2 6F என்று அடித்தான். அதற்குள் மறுபடியும் செல்போன் கதறியது. எடுத்தால் ராகினி. ராகினி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். அந்த போட்டோவை வைத்து ஏதாவது விஷயம் கண்டு புடிச்சியா என்று கேட்டாள். இதுவரை ஒன்றும் தேறவில்லை என்றான் சந்திரன். செல்லமாகத் திட்டினாள் ராகினி. அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இப்போது அவன் இல்லை. எரிச்சலோடு, அந்த போட்டோவில் என்னதான் பிரச்சனை, ஏன் பெரிய இடத்து பிரச்சனைகளில் தலையிடுகிறாய்? உனக்கு ஒன்றுமில்லையே என்று படபடவென கேட்டான். ராகினி உடனே அந்த போட்டோவை வைத்து உடான்ஸ் திரட்டியும் பதிவர் பரிசல்காரனும் இணைந்து சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள், நானும் ஒரு கதை எழுதலாம் என்று இருக்கிறேன் அதற்குத்தான் உன்னிடம் க்ளூ கேட்டேன் என்றாள். சந்திரனுக்கு சுர்ரென கோபம் வந்தது. இதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே என்றான். முதலில் சொல்லி இருந்தால் வித்தியாசமான சிந்தனைகள் வராது என்றுதான் சொல்லவில்லை என்றாள் ராகினி. 

சந்திரன் கடுப்படைந்து கண்டபடி. திட்ட ஆரம்பித்தான். அதற்கிடையில் பீப் பீப் என்று இன்னொரு கால் வந்தது. பார்த்தால் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான். ராகினியை ஹோல்டில் வைத்து விட்டு விக்கியின் அழைப்பை எடுத்தான். 

”ஹலோ சந்திரா, எஸ்.பி. கோகுலை கண்டுபிடிச்சிட்டேன், நம்ம பக்கத்து ஏரியாதான், இப்போ அவர் ஸ்டேசன்லதான் இருக்கேன், சீக்கிரம் கிளம்பி வா...”

சந்திரனுக்கு தலை சுற்றியது... நா வறண்டது பேச வாய் வரவில்லை...

”ஹலோ...”

”ஹலொ...”

சந்திரன் மயங்கி விழுந்து கொண்டிருந்தான்.

Saturday, October 29, 2011

உளவுத்துறை... (சவால் சிறுகதை-2011)


சவால் சிறுகதைப் போட்டி 2011-க்கான சிறுகதை இது, எனவே கவனமாக படிக்கவும். 





போலீஸ் இன்ஃபார்மர் விஷ்ணு எஸ்.பி. கோகுலுக்கு அனுப்பிய மெசேஜும், இன்னொருவருக்கு அனுப்பிய மெசேஜும் டேபிளில் இருந்தது. ஐஜி ரத்னவேல் இரண்டு தகவல்களையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்லில் விஷ்ணுவிடம் இருந்து அழைப்பு வந்தது, யோசித்துவிட்டு அழைப்பை நிராகரித்தார். சிறிது காலமாகவே விஷ்ணுவின் நடவடிக்கைகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது. அவனுடைய செல்பேசியை ட்ராக் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அதில் இருந்து கிடைத்தவைதான் இந்தத் தகவல்கள். எஸ்பி கோகுலும் விஷ்ணுவும் தூரத்து சொந்தம். அதன் அடிப்படையிலேயே விஷ்ணுவை போலீஸ் இன்ஃபார்மராக வைத்திருந்தார்கள். கோகுலிடம் தவறான குறியீட்டை கொடுத்திருக்கிறேன் என்று விஷ்ணு கூறிய ஆள் யார் என்றுதான் தெரியவில்லை. அந்த செல் நம்பர் தவறான அட்ரஸ் கொடுத்து வாங்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த செல் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வேறு கூறி இருக்கிறார்கள். எனவே ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. இனி வேறு வழியில்லை. விஷ்ணுவைத்தான் விசாரிக்க வேண்டும். அந்த நினைப்பே ரத்னவேலுவிற்கு மிகுந்த பதட்டமாக இருந்தது. ஏனென்றால் விஷ்ணுவை வைத்து ஏராளமான ரகசியத் திட்டங்கள் நடத்தி இருந்தார்கள், மேலும் ஒரு முக்கியமான மேலிடத்தின் நேரடி ஆணையில் வந்த ஒரு உளவு வேலையையும் விஷ்ணுதான் செய்துகொண்டிருந்தான். இப்படி ஒரு சூழ்நிலையில் விஷ்ணுவிடம் ஏதோ தவறு இருப்பதாக தோன்றியது அவருக்கு கவலை அளிப்பதாக இருந்து. சாமர்த்தியமாக கையாண்டு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

சிபிசிஐடியில் எஸ்பியாக இருக்கும் கனகராஜ் ரத்னவேலுவிற்கு மிக நெருக்கமானவர். அவரை அழைத்து முழுவிபரத்தையும் சொல்லி ரகசியமாக விசாரிக்கச் சொன்னார். முக்கியமாக இது எஸ்.பி. கோகுலுக்கு தெரியக் கூடாது என்றும் சொல்லிவிட்டார். பின்னர் அதற்கடுத்த வாரம் விஷ்ணுவை அவர் வழக்கமாகச் சந்திக்கும் சவேரா ஹோட்டலின் தனி அறைக்கு வரச் சொல்லி சந்தித்துப் பேச முடிவு செய்தார். அங்குதான் அவர்கள் மிக முக்கியமான சந்திப்புகளுக்குச் செல்வார்கள். ஐஜி மறக்காமல் தன்  பிஸ்டலை எடுத்து வைத்துக் கொண்டார். 

தனக்கு மிகவும் நம்பகமான சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் இருவரை அந்த ஹோட்டலுக்கு முன்பே அனுப்பிவைத்தார். முக்கியமான ரகசிய சந்திப்புகளின் போது பாதுகாப்புக்காக அவர்கள் இவ்வாறு செல்வது வழக்கம். அவர்கள் அங்கே ஹோட்டலின் லாபியிலும் ரெஸ்ட்டாரண்ட்டிலுமாக இருந்து நோட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். காவல்துறைக்கு விசுவாசமாக இருந்து தடம் புரண்டவர்களை ரகசியமாக சந்திப்பது ஆபத்தானது என்று ஐஜி நன்கு அறிவார். அதனாலேயே இது போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டார்.

அவர் ஹோட்டலைச் சென்றடைந்த போது இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இன்னும் விஷ்ணு வந்திருக்கவில்லை. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்களுக்கு சமிக்ஞைகள் கொடுத்துவிட்டு தனி அறைக்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பிடித்தமான பாகார்டி வித் செவன் அப் வந்தது. விஷ்ணுவிற்கும் அதுவே பிடித்தமானது என்பதால் இருவருக்குமாக சேர்த்தே ஆர்டர் செய்திருந்தார். அப்போது லாபியில் இருந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர், விஷ்ணு உள்ளே வந்து கொண்டிருப்பதாகவும் கூடவே எஸ்.பி கோகுலும் இருப்பதாக தெரிவித்தார். 

ஐஜி ரத்னவேலுவிற்கு சட்டென கோபம் வந்தது. ரகசிய சந்திப்பு என்று விஷ்ணுவிடம் சொல்லி இருக்க அவன் எதுக்கு எஸ்.பியை கூட்டி வருகிறான். என்னதான் சொந்தக்காரன் என்றாலும் இப்படியா? அவன் தான் அப்படி என்றால் எஸ்.பிக்கு யோசனை வேண்டாம்? உயரதிகாரி ஒரு ரகசிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கும் போது இப்படியா செய்வது என்று எண்ணியவராக கையில் இருந்த கிளாசை காலி செய்தார். கதவு தட்டும் சத்தம் கேட்டது. பார்த்தால் விஷ்ணு மட்டும் நின்று கொண்டிருந்தான்.

உள்ளே வரச்சொல்லிவிட்டு கோகுல் எங்கே என்று கேட்டார் ரத்னவேல். விஷ்ணுவின் கண்களில் நேனோ நொடியில் அதிர்ச்சி மின்னிச் சென்றதைக் கவனித்து விட்டார் ஐஜி. என்னிடம் நீங்கள் கோகுலை வரச்சொல்லவில்லையே என்றான் விஷ்ணு. ஐஜி குரலை உயர்த்தினார். இப்போ கோகுல் உன்கூட ஹோட்டலுக்கு வந்தாரே எங்கே போனார் என்றார் அதிகாரமாக. இதைக் கேட்டதும் தாம் வேவு பார்க்கப்படுகிறோம் என்று விஷ்ணுவிற்கு விளங்கியது. போலீஸ் இன்ஃபார்மர்களுக்கு இது புதிதில்லை என்றாலும், சாதாரண நேரங்களில் இப்படிச் செய்யமாட்டார்கள். எனவே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டான்.

கோகுலும் நானும் இங்கே பாருக்கு அடிக்கடி வருவோம். அவர் இப்பொ பார்லதான் இருக்கார். இந்த மீட்டிங் முடிந்தவுடன் நானும் போய் சேர்ந்து கொள்வேன், நான் ஏதோ ஒரு ரகசிய மீட்டிங்கிற்கு வர்ரேன்னு அவருக்குத் தெரியும், ஆனா உங்களை மீட் பண்றேன்னு அவருக்கு தெரியாது சார் என்றான் விஷ்ணு.

ஐஜி ரத்னவேல் அவன் கண்களையே பார்த்தவண்ணம் இருந்தார். விஷ்ணு சொல்வதை நம்புகிறாரா இல்லையா என்று கணிக்க முடியாதபடி இருந்தார். விஷ்ணுவிடம் நேரடியாக S W H2 6F என்றால் என்ன, அதை ஏன் கோகுலுக்கு அனுப்பினாய் என்று கேட்டார். அதைக் கேட்டதும் விஷ்ணு திடுக்கிட்டான். இவருக்கு எப்படித் தெரிந்தது, அது அவனுக்கும் கோகுலுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமல்லவா? இதைப் போய் கேட்கிறாரே என்று விஷ்ணு வார்த்தை வராமல் விக்கித்துப் போய் ஐஜியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ரத்னவேல் எழுந்தார் திடீரென துப்பாக்கியை எடுத்து விஷ்ணுவின் நெற்றியில் வைத்தார். ஒழுங்காக உண்மையைச் சொல்லிவிடு… சங்கேத வார்த்தையை வைத்து நீயும் கோகுலும் என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று மிரட்டினார். அதற்கிடையில் கதைவை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. ஐஜி துப்பாக்கியை உள்ளே வைத்துவிட்டு விஷ்ணுவை கதைவைத் திறக்கச் சொன்னார். அங்கே எஸ்.பி. கோகுல் நின்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஏன் இங்கே வந்தீர்கள் என்று கோகுலை ஐஜி அதட்டினார். அதற்கு கோகுல், ஐஜி தங்களை ரகசியமாக கண்காணிப்பது தெரியுமென்றும், இந்தச் சந்திப்பில் விஷ்ணுவிற்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்று வெளியே காத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். உடனே ஐஜி ரத்னவேல் பாய்ந்து விஷ்ணுவின் சட்டைக்குள் இருந்த பட்டன் மைக்கை அகற்றினார். அந்நேரம் பார்த்து ஐஜியின் செல்போன் அடித்தது, யாரென்று பார்த்தவர் விஷ்ணுவையும், எஸ்பி கோகுலையும் உடனே அறையைவிட்டு வெளியேறச் சொன்னார். செல்போனில் அழைத்தவர் சிஐடி எஸ்பி கனகராஜ்.

கனகராஜ் அதற்குள் விஷ்ணு, கோகுல் சம்பந்தமான அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து விட்டிருந்தார். எல்லாவற்றையும் கேட்ட ஐஜி திகைத்துப் போனார், மீதம் இருந்த பாகார்டியை அப்படியே ராவாக வாய்க்குள் சரித்துவிட்டு கீழே மயங்கிச் சாய்ந்தார்.

அது என்ன உண்மை என்று கேட்கிறீர்களா? எஸ்பி கோகுல் ஒரு கம்ப்யூட்டர் கேம் பிரியர். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமாகி வெறியராகி விட்டிருந்தார், வேலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லை, குடும்பத்தையும் கவனிக்காமல் கம்ப்யூட்டர் கேமே கதி என்று மணிக்கணக்கில் கிடந்தார். புதிய கேம் டிவிடி ஒன்றை விஷ்ணுவிடம் ரொம்ப நாள் நச்சரித்து வாங்கி இருந்தார். கோகுலின் தந்தை இதைக் கேள்விப்பட்டு விஷ்ணுவை அழைத்து கடிந்தார். அதன்பின் கோகுல் கேம் இன்ஸ்டாலேசன் செய்ய ரிஜிஸ்ட்ரேசன் கோடு கேட்டவுடன் தவறான கோடை (S W H2 6F) அனுப்பிவிட்டு அதை கோகுலின் தந்தைக்கும் சொல்லி இருந்தார். அந்த இரு மெசேஜ்களையும் தான் ஐஜி ரத்னவேல் ட்ராக் செய்து விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்போது சொல்லுங்கள் அவருக்கு மயக்கம் வருமா வராதா?




எப்பூடி..... நாங்களும் கதை விடுவோம்ல.....?


!

இது விமர்சனம் அல்ல....





ஒரு கிராமத்துல வெட்டியா ஒரு ஹீரோ இருப்பாரு, அவருக்கு ஒரு தங்கச்சி  இவங்க ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு லூட்டி அடிப்பாங்க. ஹீரோ சோத்துக்கு என்ன பண்றார்னு ஆரும் கேட்கப்படாது, அது தமிழ் சினிமா ஹீரோக்களுக்குன்னே உள்ள தனிச்சிறப்பு. அப்புறம் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமான உடனே சென்னைக்கு வருவாரு(?)... அப்புறம் என்ன அநியாயத்தக் கண்டு பொங்க வேண்டியதுதான்......! என்ன இது எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா? இது நம்ம டாகுடர் கடந்த 10 வருசமா நடிச்சிட்டு இருக்கற பெரும்பாலான படங்களோட ஒன்லைன் ஸ்டோரி. டாகுடர் மட்டுமில்ல ஒட்டு மொத்த தமிழ் சினிமாத்துறையும் நம்பி(?) இறங்கும் கதைக் களம் (!). 

அந்த மாதிரி ஒரு ஒன்லைன் வெச்சுக்கிட்டு, ஒரு ஓப்பனிங் சாங், ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு டூயட் சாங், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கிளாமர் (அதுவும் பாட்டுல மட்டும்தேன்...), 4-5 ஃபைட்டு....  அவ்வளவுதாங்க படம்...  இதுல பெரிய காமெடி இந்த எழவெடுத்த கதைய ரீமேக் ரைட்ஸ் வேற வாங்கி படம் எடுக்குறாங்க. ஏன் சார் இந்தக் கதையத்தானே இவ்ளோ வருசமா இங்க பலபேரு எடுத்துட்டு இருக்கீங்க, அப்புறம் எதுக்கு சார் தெலுங்கு ரீமேக்னு சொல்லி அவிங்களுக்கு வேற சும்மா காசு கொடுக்கறீங்க?


இதுல ஒவ்வொரு வாட்டியும் இதுவரைக்கும் யாருமே எடுக்காத கதை, நடிக்காத கதைன்னு பில்டப்பு வேற... என்ன பண்றது இதையும் நம்பி ஏமாற நாட்ல நிறையப் பேரு இருக்காங்களே...?  இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு..... நமக்கு எல்லாமே மாசுதான்.. (நன்றி: நா. மணிவண்ணன்) அவரு அவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு, இவரு இவர் ரசிகர்களுக்காக படம் எடுப்பாரு.....  ங்கொய்யால அப்புறம் எதுக்குய்யா தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்றீங்க? மொத்தமா உங்க எல்லா ரசிகர்களையும் கூட்டிட்டு போயி அவங்களுக்கு மட்டும் படத்த போட்டுக்காட்ட வேண்டியதுதானே? சமீபத்துல தல நடிகர் ரசிகர் மன்றங்களையெல்லாம் கலைச்சி ஒரு நல்ல முன்மாதிரியை தொடங்கி வெச்சார். ஆனா எவனும் கண்டுக்கல, வழக்கம் போல கட்டவுட்டுக்கு பால் ஊத்தி தமிழனின் பெருமைய நிலைநாட்டிட்டாங்க. என்ன கொடும சார் இது?


சரி அத விடுங்க, இவங்க பண்ற அலம்பலை பார்த்து நேத்து வந்த நடிகர்லாம் ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, கேமராவ பார்த்து தத்துவம் பேசுறதுன்னு கொல்றானுங்களே அதுக்காகவாவது இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும்யா...! கையில கொஞ்சம் காசு (அதுவும் அப்பன் சம்பாரிச்சதா இருக்கும்) இருந்தா உடனே ஹீரோ. அப்புறம் அவருக்கும் ஒரு ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக்கு, வெளிநாட்ல டூயட் சாங் வைக்கனும். படம் ஓடுதோ இல்லியோ 50 நாள், 100 நாள்னு அவனுங்களே போஸ்டர் ஒட்டி ஊரை நாறடிப்பானுங்க... இதையெல்லாம் சகிச்சுட்டு வாழறதுக்கே ஒரு தனி விருது கொடுக்கனும்யா...!

உள்ளூர்ல சகிச்சுக்கிறதாவது பரவால்ல, வெளியூர்கள்ல இவனுகளால நம்மாளுக எப்படியெல்லாம் கேவலப்பட வேண்டியதா இருக்கு தெரியுமா? கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி மாளலை. இங்க ஒருத்தன் சொல்றான், உங்க ஊர்ல வரவர ஹீரோக்கள் பவர் கூடிட்டே போகுதுப்பான்னு, ஏன்னு கேட்டா, உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே அத வெச்சி சொன்னேன்கிறான்.... என்னத்த சொல்ல?

சினிமாவுல அர்ஜூன், விஜயகாந்த், சரத்குமார் வளர்த்து வந்த தேசபக்தி வியாபாரம் கொஞ்சம் தணிஞ்சு, இப்போ தமிழுணர்வு வியாபாரம் தொடங்கிடுச்சு. இப்ப கொஞ்ச காலமா எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழுணர்வு பொங்கி வழியுது. நமக்குக் கிடைத்த சினிமாக்காரர்கள்தான் திறமைசாலிகளாச்சே, விடுவாங்களா.... அதையும் காசாக்கிடுவாங்கள்ல.... இதோ முதல் போனி ஆரம்பிச்சிட்டாங்க, இன்னும் இத வெச்சி எத்தனை வரப்போகுதோ?  

அப்புறம் நம்ம பதிவர்கள் மேட்டருக்கு வருவோம், இன்னிக்கு ஒரு ப்ளாக் வெச்சிக்கிட்டு சினிமா விமர்சனம் போடலேன்னா சங்கத்துல இருந்து தள்ளி வெச்சிடுவாங்க போல. இதுல யாரு முதல்ல விமர்சனம் போடுறதுன்னு போட்டி வேற கன்னாபின்னான்னு எகிறிப் போச்சு. கடந்த 4-5 நாளா வெறும் சினிமா விமர்சனமா படிச்சிட்டு இருக்கேன்.  ஆனா வந்த படங்கள்ல எது உண்மையிலேயே நல்லாருக்குன்னு புரியல. ஒருத்தர் படம் சூப்பர்னு சொல்றார், ஒருத்தர் படம் படுமொக்கைன்னு சொல்றார். ஒண்ணும் புரியலீங்கோ. 

இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர்.  இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)

சரி எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்துடுச்சு. இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கெடா வெட்டி பொங்க வெச்சுடுவாங்க.... அதுனால நான்அப்படியே  அப்பீட் ஆகிக்கிறேன்...! 




படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்!

!

Monday, October 24, 2011

சைடுவாங்கிய சிந்தனை உண்டா உங்களிடம்...?


  
  பெரும்பாலான புதிர்கேள்விகள் நேரடியாக அல்லது மறைமுகமாக விடைகளைக் கொண்டிருக்கும். ஆனால் சிலவகையான புதிர்களுக்கு லேட்டரல் திங்கிங் எனப்படும் சைடுவாங்கிய சிந்தனை தேவைப்படுகிறது. இத்தகைய புதிர்களுக்கு இதுதான் விடை என்று கிடையாது. சரியாக எது பொருந்தினாலும் அது விடையே. எனக்கு மெயிலில் வந்த அதுபோன்ற சில புதிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவரவருக்குத் தோன்றும் விடைகளை முயற்சி செய்யலாம். 



  1. ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழே சென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்து பின்னர் படியேறிச் செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்


2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்


 3. சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்


4. ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே விருந்தும் மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் தாமதமாக மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்


5. ஒரு பெண்ணின் இருமகன்கள்  ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி?  


6. ஒருவர் ஹோட்டலுக்குள் சென்று தண்ணீர் கேட்கிறார். அங்கே சர்வர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். அதைப்பார்த்த அவர் திகைத்துவிட்டு பின்னர் நன்றி சொல்லிவிட்டுச் செல்கிறார். இது எப்படி நடக்க முடியும்?




விடைகள் பின்னர் இதே பதிவில் பப்ளிஷ் செய்யப்படும். (ஒருவேளை எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக சொல்லிவிட்டால் கமெண்ட்டில் சரி என்று சொல்லப்படும்)


ஜஸ்ட் ரிலாக்ஸ்:
புதிர்களை எல்லாம் அப்புறம் உக்காந்து யோசிக்கலாம், மொதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்குங்க...... ஹி...ஹி....


இன்னொரு ரீமிக்ஸ்





இவரப் போயி நோகடிக்கிறீங்களே அதுவும் கரண்ட்டு பற்றாக்குறை இருக்கும் போது, இது நியாயமா?





இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல் சீனு.... (இது ஏற்கனவே போட்டதுதான்)








ன்றி: யுடியூப் மற்றும் வீடியோ ரீமிக்ஸ் அண்ட் அப்லோட் செய்த நண்பர்கள், 365greetings.com


!

Thursday, October 6, 2011

என்னா மீட்டிங்கு.......




இந்த மீட்டிங்கு இருக்கு பாருங்க மீட்டிங்கு..........அதாங்க நம்ம ஆப்பீசுகள்ல போடுவாய்ங்களே மீட்டிங்கு அதைத்தான் சொல்றேன்......ஆபீஸ்ல சில நாதாரிங்க சும்மாவே கலக்டர் மாதிரி பில்டப் கொடுத்திட்டிருப்பானுங்க, மீட்டிங் வேற வந்துட்டாபோதும் அவ்ளோதான் கெவர்னர் ரேஞ்சுக்கு ஆகிடுவானுங்க......  சம்பந்தமே இல்லாம கைய கால ஆட்டி பேசுறது, வானத்த வளைக்கிறேன், பூமிய சுத்த வெக்கிறேன்னு சலம்புறது. அவனுக மட்டும் இல்லேன்னா கம்பேனிய இன்னேரம் காக்கா தூக்கிட்டு போயிருக்கும்னு அலப்பறை பண்றதுன்னு நல்லா எண்டர்டெயின் பண்ணுவானுங்க. பாசும் எதையுமே கண்டுக்காம காப்பிய சப்பி சப்பி குடிச்சிக்கிட்டு ஜாலியா ஐபேடை நோண்டிக்கிட்டு இருப்பாரு. 

சில நேரங்கள்ல பேச ஒரு எழவுமே இருக்காது ஆனா மீட்டிங் போட்ருவானுங்க.... எப்படியோ மீட்டிங்கு நடந்து முடியும். மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்குன்னு 15 பக்கத்துக்கு என்னத்தையோ அடிச்சிக்கிட்டும் வருவானுங்க. நாம இடைல போனா போவுதுன்னு ரெண்டே ரெண்டு வார்த்த பேசி இருப்போம், கரெக்ட்டா அதை மட்டும் விட்டுட்டு மினிட்ஸ் ரெடி பண்ணி இருப்பானுங்க. அப்புறம் அதை கரெக்ட் பண்றதுக்குள்ள அடுத்த மீட்டிங்கே வந்துடும்....




அப்புறம் பாருங்க, மீட்டிங்ல பார்த்து திடீர்னு சில பேருக்கு கொம்பு மொளச்சிக்கும். அதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கூட உக்காந்து ஓசி டீ அடிச்சிட்டு அண்ணே ஆபீஸ்லயே நீங்கதாண்ணே ரொம்ப நல்லவரு வல்லவருன்னு பிட்ட போட்டுக்கிட்டு இருப்பானுங்க. நாமலும் ஆஹா நமக்கும் ஒரு அல்லக்கை சிக்கிட்டான்டான்னு குளுந்து போய் மீட்டிங்குக்கு வருவோம். ங்கொக்காமக்கா மீட்டிங் தொடங்குனதும் அவனுக ஃபர்ஸ்ட் குறியே நாமளாத்தான் இருக்கும், இவருனாலதாங்க அந்த பஸ் ஓடலை, இந்த ரயில் ஓடலைன்னு பக்காவா மனப்பாடம் பண்ணி வெச்சி பிரிச்சி மேஞ்சி நம்மளை கப்பலேத்திருவாய்ங்க. அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள காலைல குடிச்ச கஞ்சியெல்லாம் காலியாகிடும்.......

சரி அத விடுங்க, ஆபீஸ்ல பாவம் போல இருப்பானுங்க சில பேரு, அவனுங்களும் மீட்டிங்குன்னு வந்துட்டா மட்டும் சலங்க கட்டி ஆடுவானுங்க...  எங்கேருந்துதான் கெளம்புவானுங்களோ? ஒரு ஆட்டம் ஆடித்தான் நிப்பானுங்க. எல்லாம் முடிஞ்சதும் வழக்கம் போல மாட்டை தொழுவத்துல கட்டுன மாதிரி போய் உக்காந்துடுவானுங்க, இனி அடுத்த மீட்டிங் வரைக்கும் நம்மாளு கெணத்துல விழுந்த கல்லுதான்.......

இன்னும் சில பேரு இருப்பானுங்க, யாருன்னே யாருக்கும் தெரியாது. சும்மா வந்து உக்கார்ந்து எதையோ முறைச்சி பார்த்துட்டே இருப்பானுங்க, மேலேயும் கீழேயும் பாத்துட்டு என்னமோ பரிட்சை எழுதுற மாதிரி விறுவிறுப்பா எழுதுவானுங்க. காப்பி வந்ததும் காப்பி சாப்புடுவானுங்க, மீட்டிங் முடிஞ்சதும் அப்படியே எந்திரிச்சி போய்டுவானுங்க. எதுக்கு மீட்டிங் வந்தானுங்க, என்ன பண்றானுங்க எல்லாம் படு சீக்ரெட்டா இருக்கும்...... அது யாருன்னு கேட்கவே எல்லாரும் பயப்படுவானுங்க..

இப்படி எல்லாரும் என்னத்தையாவது பேசி முடிச்ச உடனே பாஸ் வாய தொறப்பாரு. ஏற்கனவே அவரு அவர் பாசோட பேசி எடுத்த எல்லா முடிவையும் வரிசையா சொல்லுவாரு, சொல்லிட்டு பெருமையா(?)   ஒரு பார்வை வேற பார்ப்பாரு... ங்கொக்காமக்கா அதான் முடிவு பண்ணிட்டீங்கள்ல அப்புறம் என்ன கருமத்துக்குய்யா மீட்டிங்க கூட்டி ரணகளம் பண்றீங்க? பாஸ் சொன்னதைக் கேட்டது ஆடுனவன்லாம் பொட்டிப்பாம்பா அடங்கிருவானுங்க. எஸ்சார், அப்படியே பண்ணிடலாம் சார், முடிச்சிடலாம் சார்னு கோசம் போடுவானுங்க.  தலைவரும் உடனே கேனத்தனமா ஒரு இளிப்பு இளிச்சிக்கிட்டே ஓகே, எனக்கு இன்னொரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு, அப்புறம் பேசுவோம் அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சி வைங்கன்னு ஆர்டர் போட்டுட்டு நைசா எஸ்கேப் ஆகிடுவாரு.... நம்ம திரும்ப நம்ம சீட்டுக்கு வந்து என்ன செய்ய சொன்னாருன்னு அவர் வர்ர வரைக்கும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான்.




முடியலடா சாமி, வாரா வாரம் மீட்டிங் போட்டுக் கொல்றாய்ங்க......... இந்தக் கருமத்தக் கண்டுப்புடிச்சவன் எவன்டா........ அவனுக்கு நான் எமன்டா.......

ஆபீஸ்ல நெஜமாவே மீட்டிங் தொல்ல தாங்க முடியலீங்கோ...... கொஞ்சம் நேரம் லைட்டா ப்ளாக் படிக்க கூட விடமாட்டேங்கிறானுங்கங்கோ....... நான் எஸ்கேப் ஆகிக்கிறேங்கோ....

நன்றி: கூகிள் இமேஜஸ், மற்றும் பட உரிமையாளர்கள்