Wednesday, August 18, 2010

உமாசங்கருக்குக் குரல் கொடுப்போம்!




அரசு அதிகாரி உமாசங்கர் மீது தமிழக அரசால் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியவை. திமுக அரசின் அட்டூழியங்கள் முந்தைய அதிமுக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என்று கூறும் வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக மோசமாக உள்ளது என்பதற்காக திமுக ஆட்சியின் அராஜகங்களை நியாயப்படுத்த முடியாது.
இந்த அரசு சில நல்ல திட்டங்களை மக்களுக்கு அளித்து வருகிறது என்பதாலோ, வேறு சரியான மாற்று சக்திகள் இல்லை என்பதாலோ, அவர்கள் செய்யும் அராஜகங்களைப் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா?

நியாயத்திற்குக் குரல் கொடுப்போம். இது நம் ஜனநாயகக் கடமை.

தமிழகத்தின் தலைவிதி இரு பெரும் குடும்பங்கள் கையில் (மன்னார்குடி குடும்பத்தார்களாலும், கலைஞர் குடும்பத்தினர்களாலும்) சீரழிந்து வருவது ஜனநாயக சக்திகளால் தடுக்கப்பட வேண்டும்.

உங்கள் கண்டங்களையும் ஒரு பதிவாக இட்டு நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள். கீழ்கண்ட பதிவுகளுக்கும் சென்று உங்கள் கண்டங்களைப் பதிவு செய்யுங்கள்.

1. Complaint filed by C.Umashankar IAS., against the State of Tamil Nadu: (தருமி ஐயா)

2. http://umashankarias.wordpress.com/

3. Campaign to save democracy and Justice for Umashankar IAS

4. உமாசங்கருக்காக ஒரு விண்ணப்பம்: வால்பையன்

5. உமாசங்கர் IAS பணிநீக்கம் ஏன்? அரசு விளக்கம் - ஏற்றுக்கொள்ள முடியாது: ப்ரியமுடன் வசந்த்

6. உமாசங்கரை பழிவாங்கிய அரசு எ(இய)ந்திரத்திற்கு...: பட்டாபட்டி

7. உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்: மங்குனி அமைச்சர்

8. உமாசங்கர் -விண்ணப்பம் + கண்டனம் - பட்டிக்காட்டான் (பட்டணத்தில்)

Monday, August 16, 2010

பட்டாபட்டி



பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ஒரு தமிழ்படத்தில் நடித்து வருகிறார். மதுரையில் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதை. படம் பட்டாபட்டி 50- 50 என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கிரிக்கெட் ஆடத்தெரிந்தவர்களையே துணை நடிகர்களாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருகிறது. சடகோபன் ஏற்கனவே ஒரு படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.கு.: நமது தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் இப்படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கு.மு.க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டுகிறோம்!

Sunday, June 27, 2010

சமைப்பதற்குப் பாதுகாப்பான (நல்ல) எண்ணை எது?

சமீப காலமாகச் சந்தையில் பல புதிய சமையல் எண்ணைகள் வர ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான எண்ணைகளில் இதயதிற்குப் பாதுகாப்பானது என்ற வாசகம் இடம்பெறத் தவறுவதில்லை. இதயதிற்கு பாதுகாப்பான சமையல் எண்ணை என்று சூரியகாந்தி எண்ணைக்கு ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைக்குப் பெரும்பாலான நடுத்தர வீடுகளில் சூரியகாந்தி எண்ணைதான் உபயோகப்படுத்துகிறார்கள். இந்தச் சமையல் எண்ணைகளின் உண்மை நிலை என்று பார்ப்போமா?

கொழுப்புகளில் இரண்டு வகை உண்டு, திடக்கொழுப்பு மற்றும் திரவக் கொழுப்பு. திடக்கொழுப்பு என்பது கெட்டியாக இருக்கும் உருக்கினால்தான் திரவமாகும். உதாரணம், வெண்ணை, மிருகக் கொழுப்புகள். திரவக்கொழுப்பு சதாரணமாக திரவமாக்வே இருக்கும், உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.

பொதுவாகப் பார்க்கும்போது திரவக்கொழுப்பே நமக்குப் பாதுகாப்பானது. திரவக்கொழுப்புகள் புஃபா (PUFA என்று விளம்பரங்களில் பார்திருப்பீர்கள்) எனப்படும் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. விளம்பரங்களில் மேலோட்டமாக PUFA உள்ளது என்று சொல்லிவிடுகிறார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கவனிக்கவேண்டிய முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. PUFA விலும் இரண்டும் வகை உள்ளது, w-6 (ஒமேகா-6) மற்றும் w-3 (ஒமேகா-3). இதில் ஒமேகா-3 தான் உடலுக்கு நல்லது. ஆனால் தாவர எண்ணைகளில் இரண்டும் கலந்தேதான் இருக்கின்றன. எனவே சமையல் எண்ணைகளை மதிப்பிடுவதற்கு இரண்டு கொழுப்பு அமிலங்களும் (ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3) என்ன விகிதத்தில் உள்ளன என்பதைக் கணக்கிடுகிறார்கள். ஒமேகா-3 அதிகமாக இருந்தால் அது நல்லது. ஏனென்றால் ஒமேகா-6 உடலில் புகுந்த பின்பு சும்மா இருப்பதில்லை, அது சுயமாகக் கெட்ட விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லாமல், ஒமேகா-3 வின் நல்ல விளைவுகளையும் எதிர்க்கிறது. (நல்லதுக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க!)

இனி சமையல் எண்ணைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூரியகாந்தி எண்ணை:
திரவக்கொழுப்பு அதிகம் உள்ளது, அதனால் இதைப் பயன்படுத்துவதால் கெட்ட கொலஸ்ட்ரால் உயராது. எனவே இதய நோயாளிகளும் பயன்படுத்தலாம். ஆனால் இதில் ஒமேகா-3 அறவே இல்லை. வெறும் ஒமேகா-6 மட்டுமே உள்ளது. நீண்டகால உபயோகத்திற்கு இது பொறுத்தமானதா என்பது சந்தேகதிற்குரியது. ஒமேகா- 6 வின் கெட்ட விளைவுகளில் சில சூரியகாந்தி எண்ணையை நீண்ட நாள் பயன்படுத்தியவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

சோள எண்ணை (கார்ன் ஆயில்):
இது ஓரளவு சூரியகாந்தி எண்ணையைப் போன்றதே. இந்த எண்ணையில் ஒமேகா-3 உள்ளது, ஆனால் வெறும் 2% தான். மீதம் முழுவதும் ஒமேகா-6 தான். அதனால், ஒமேகா-6 வினால் ஏற்படும் கெட்ட விளைவுகளை இது தடுக்காது. எனவே சூரியகாந்தி எண்ணையைப் போன்றே நீண்டநாள் பயன்பாட்டிற்கு இதுவும் பொருத்தமானதல்ல.

கடலை எண்ணை:
முன்பு வெகு பிரபலமாக இருந்த எண்ணை. இது திரவ கொழுப்புகள் அதிகம் இருந்தாலும், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகவே ஆராய்ச்சிப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணையின் கொழுப்பு அமிலங்களைப் பார்க்கும் போது பாதுகாப்பானதாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் பரிசோதனை முடிவுகள் குழப்பும்படியாக உள்ளன. அதனால் எப்போவாவது பயன்படுத்துவதில் தப்பில்லை.

அரிசி உமி எண்ணை (ரைஸ் பிரான் ஆயில்):
இந்த எண்ணை ஜப்பான், சீனாவில் அதிகம் பயன்படுத்தபடுகின்றது. இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. அருமையான எண்ணை, அதிக நலன்களைக் கொண்டது. இதில் உள்ள ஒரைசெனோல் (Oryzanol) இதய நோயைத்தடுக்கும் சக்தி வாய்ந்தது (நீங்கள் விளம்பரங்களில் பார்ப்பது உண்மையே). மேலும் இந்த எண்ணை உணவுப் பொருட்களால் உறிஞ்சப்படுவது குறைவு. 5% ஒமேகா-3 உள்ளது.

நல்லெண்ணை:
இது நிஜமாகவே நல்ல எண்ணைதான். இந்த எண்ணையில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக் கூடிய தன்மை உள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் 1 சதவீததிற்கும் குறைவாகவே ஒமேகா-3 உள்ளது.


முடிவாக என்ன எண்ணைதான் பயன்படுத்துவது என்கிறீர்களா? மேலே படிங்க. பொதுவாக இந்தியச் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணைகளில் ஒமேகா- 3 மிகக்குறைவாகவே உள்ளது. ஆலிவ் எண்ணை மட்டுமே தேவையான அளவு ஒமேகா- 3 கொண்டுள்ளது, மிகச் சிறந்த சமையல் எண்ணையும் இதுவே. ஆனால் பொறிப்பதற்குப் பயன்படுத்த முடியாது (பொறிக்கும்போது வரும் கடும் வெப்பம் இந்த எண்ணையை சேதம் அடையச் செய்கிறது, அப்போது வெளியாகும் பொருள்கள் ஆரோக்கியமானவை அல்ல. இப்போது பொறிப்பதற்கேற்ற ஆலிவ் எண்ணையும் வருகின்றது). விலை அதிகம், கிடைப்பதும் கடினம் (இந்தியாவில்) போன்ற காரணங்களால் தினசரி பயன்பாட்டிற்கு இந்த எண்ணையை பயன்படுத்துவது சாத்தியமல்ல.

அடுத்த சிறந்த எண்ணை அரிசி உமி எண்ணையே (ரைஸ் பிரான் ஆயில்). இந்த எண்ணையே இந்தியப் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கிறது. சுமார் 450 டிகிரி வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சூடாக்கலாம் (சமையல் எண்ணைகளிலேயே இதற்குத்தான் அதிகம் வெப்பம் தாங்கும் சக்தி). அதனால் இந்த எண்ணையை தினந்தோறும் பயன்படுத்தலாம். ஆனாலும் இடைஇடையே சூரியகாந்தி எண்ணை, சோள எண்ணை, நல்லெண்ணை என்று மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதே நல்லது.
ஒருவேளை நீங்கள் வேறு எந்த எண்ணையைப் பயன்படுத்தினாலும், ஒரேவகை எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்.

தேங்காய் எண்ணை, பாம் ஆயில், வனஸ்பதி போன்றவை தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் (பெரும்பாலான பிஸ்கட்டுகளில் வனஸ்பதி உள்ளது, எனவே பிஸ்கட்டுகள் வாங்கும்போது கூட கவனம் தேவை, hydrogenated vegetable oils, shortened vegetable oils, margarine என்று பல பெயர்களில் போட்டிருப்பார்கள் எல்லாம் வனஸ்பதி வகையைச் சேர்ந்தவையே). வெளிநாடுகளில் இருப்பவர்கள் எண்ணை வாங்கும் போது பொறிப்பதற்கேற்றதா என்று பார்த்து வாங்கவேண்டும் (பாட்டிலின் மேலேயே குறிப்பிட்டு இருப்பார்கள்).


பி.கு.: செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்!

(சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான் இந்தப்பதிவு, மற்றபடி சமையலுக்கு நமக்கும் ரொம்ப....ரொம்ப..தூ...ரமுங்கோ!)

Saturday, June 26, 2010

செம்மொழி: இனி என்ன செய்யவேண்டும்?

செம்மொழி மாநாட்டுல வேற நல்ல விஷயம் எதுவும் நடந்திருக்கோ இல்லையோ, வெளிநாட்டு தமிழறிஞர்கள் பேசுவதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது (டீவியிலதான்). அதில் அஸ்கோ பர்ப்போலா என்னும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் கூறியுள்ள கருத்துக்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றியது. சிந்துச் சமவெளி மக்களின் எழுத்துக்கள் புரிந்து கொள்ளமுடியாத ஒன்றாகவே இதுவரை இருந்து வந்தது. அதனால், அவர்களது மொழி, வாழ்க்கை, வழிபாட்டு முறைகள் சரியாக விளக்கப்படாமல் இருந்தது. ஒரு சாரார், சிந்துச் சமவெளியில் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்று சில ஆதாரங்களைக் காட்டினர். வேறு சிலர் சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும், திராவிடத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் ஆர்யர், திராவிடர் என்று இரு இனங்கள் கிடையாது, எல்லாமே ஒரே இனம்தான் என்று வாதாடுகிறார்கள். அவர்கள் கருத்துப்படி, ஆர்யர்கள் என்று யாரும் வெளியில் இருந்து வரவில்லை என்பதே (இப்போது புரிந்திருக்குமே இதன் விசமத்தனம்?).

இந்நிலையில் பின்லாந்துப் பேராசிரியர் பர்ப்போலா, செம்மொழி மாநாட்டில் சிந்துச் சமவெளியில் இருந்தது தமிழர்களே என்றும், அவர்கள் பேசியே மொழி தமிழே என்றும் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இவை உண்மையிலேயே சரியான ஆதாரங்களாக இருக்கும் பட்சத்தில் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டியிருக்கும். பேராசிரியர் பர்ப்போலா என்ன கூறியிருக்கின்றார் என்று முழுமையாகத் தெரிந்து கொள்ள்வதற்கு முன்பே எதிர் வாதம் தொடங்கிவிட்டது. ரிடிஃப் (Rediff) இணையதளத்தில் அதற்குள்ளாகவே டாக்டர் எஸ். கல்யாணராமன் என்பவரிடம் இருந்து பேட்டி எடுத்து போட்டிருக்கிறார்கள். அவரும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு விசம் கக்கி இருக்கிறார். ரிடிஃப், இதற்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள் யாரையும் பேட்டி எடுத்து வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. (ரிடிஃபை தொடர்ந்து படித்தவர்கள், அவர்களின் தென்னிந்தியர்களுக்கு எதிரான விசமப் பிரசாரத்தை நன்கு அறிந்திருப்பார்கள்).

இவர்களை விட்டுத்தள்ளுவோம், என்றைக்குமே திருந்தப் போவதில்லை!. என்னுடைய ஆதங்கமெல்லாம், பேராசிரியர் பர்ப்போலாவின் விளக்கங்கள், செம்மொழி மாநாட்டின் ஆரவாரங்களிலும் பாராட்டுரைகளிலும் மறக்கப்பட்டு விடக்கூடாது என்பதே! இதைவைத்துக் கொண்டு மேற்கொண்டு என்னென்ன செய்யலாம் என்று எனக்குத் தோன்றியவற்றை இங்கே எழுதியிருக்கிறேன். இவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல முடிந்தவர்கள் தயவு செய்து உடனே செய்யுங்கள்.

1. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் ஒன்று நிறுவப்படவேண்டும். அங்கே தொல்லியல் ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, மற்றும் மொழியியல் ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக சோதனைச் சாலைகளும் ஆராய்ச்சியாளர்களும் வேண்டும். மரபணு பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கும் வதிகள் ஏற்படுத்தவேண்டும்.

2. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள்கள் அனைத்தும் மறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். கார்பன் டேட்டிங் எனப்படும் காலத்தைக் கணக்கிடும் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தி எந்தக் காலத்தை சேர்ந்தவை என்று அனைத்து வரலாற்றுச் சம்பவங்களும் தெளிவு காணவேண்டும். கார்பன் டேட்டிங் முறையில் கணக்கிடப்படும் கால அளவு துல்லியமாது. வள்ளுவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்பதற்கே இன்னும் நம்மிடம் குழப்பங்கள் நிலவுகின்றன.

3. கன்யாகுமரிக்குத் தெற்கே கடலின் அடியில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யப் படவேண்டும். லெமூரியாக் கண்டம் என்று ஒன்று இருந்ததாகவும் அங்கே தமிழர்கள் வாழ்ந்து வந்தாகவும் பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. முதல் மூன்று தமிழ்ச்சங்கள் அங்குதான் நடந்தன என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் இதுகுறைத்து முறையான அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகள் எதுவும் நடந்தாகத்தெரியவில்லை.

4. தமிழ்நாட்டின் மற்ற கடற்கரையோரங்களிலும் கடலிலும் அகழ்வாராய்ச்சி தேவை. பூம்புகார், கடல்கோளினால் அழிந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கடல்கோள் என்றால் சுனாமியாக இருக்கலாம் என்று நாம் சமீபத்தில்தான் புரிந்து கொண்டோம் (லெமூரியாக் கண்டமும் அதுபோன்ற ஒரு நிகழ்வினால் தான் அழிந்திருக்கவேண்டும்). அதனால், இதுபோன்ற வேறுநிகழ்வுகளினால் பண்டைய தமிழக நகரங்கள் எதுவும் மூழ்கியுள்ளனவா என்று ஆராய வேண்டும்.

5. சிந்துச் சமவெளி நாகரிக, மக்கள், மொழி, வழிபாட்டுமுறைகள் குறித்து மறு ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்.

6. ஆப்பிரிக்கப் பழங்குடி மற்றும் ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுடைய மரபணு, தமிழகத்தைச் சேர்ந்தவருடைய மரபணுவுடன் அப்படியே ஒத்துப் போவதாக சிலவருடங்கள் முன்பு ஆய்வுகள் வெளியாகின (இது குறித்து ஆனந்தவிகடனில் கூட கட்டுரை வெளியாகி இருந்தது). இது தமிழர்கள் மிகப் பழமையான இனத்தை சேர்ந்தவர்கள் என்பதையே சொல்கிறது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

இந்த ஆராய்ச்சிகள் நவீனத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதும், நடுநிலையோடு இருப்பதும் மிக அவசியம். ஆராய்ச்சி முடிவுகள் எப்படி இருந்தாலும் அவை சர்வதேச அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட வேண்டும். ஒருவேளை இதுபோன்ற முயற்சிகள் ஏற்கனவே நடந்துகொண்டிருந்தால், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

தமிழர்களாகிய நாம் உணர்ச்சிவயப்படுதலை கொஞ்சம் மட்டுப்படுத்திக்கொண்டு அறிவுப்பூர்வமாய் சிந்தித்து இயங்குவோம். அறிவியல் உண்மைகளை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம். வெறும் பேச்சுக்களைக் குறைத்து செயலில் இறங்குவோம். செம்மொழி மாநாடு அதற்காவது ஒரு சிறு பொறியாக அமையட்டும்!

Wednesday, June 23, 2010

சந்தியா..சந்தியா....!




சந்தியா..சந்தியா....பாடல் மிதந்து வருகின்றது. காற்றில் வந்த மழைவாசம் பாடலோடு இணைந்து மூச்சில் கலந்து கொண்டிருந்தது. பாடலைக்கேட்கக் கேட்க நினைவுகள் மயங்குகின்றன. அவள் இப்போது எங்கே இருப்பாள்? தெரியவில்லை. எதுவும் தெரியக்கூடாது என்றுதானே முகவரியோ, தொலைபேசி எண்ணோ வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது, தவிப்பு அடங்க மறுக்கின்றதே!


அவளைக் கடைசியாகப் பார்த்த அன்று காதலர் தினம்! காதலர்தினம்தான் காதலர்கள் பிரிவதற்கும் பயன்பட்டிருக்கிறது. அன்றுதான் அவள் மனம் திறந்தாள், அதற்கு அவசியமே இருக்கவில்லையென்றாலும்! ஒருவேளை பின்னர் அதுவே பெரிய தவிப்பாகிவிடும் என்றுதான் சொன்னாளா? நான் எதுவுமே பேசவில்லை, அவளும் கேட்கவில்லை. ஒருவேளை நானும் சொல்லியிருக்கலாமோ? எனக்கு ஏன் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை? அவளை பார்த்த நாளில் இருந்து அவளோடு ஒற்றை வார்த்தையாவது பேசிவிடவேண்டும் துடித்த எத்தனையோ பொழுதுகளும், அவள் பெயரை உச்சரித்தே வாழ்ந்த நாட்களும் என்னோடு இன்னும் சண்டை போடுகின்றன. அவள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த டைரி என்னைத் தினமும் ஏளனம் செய்கிறது, நான் என்ன செய்வேன்? அவள் கீழே வீசிச்சென்ற கசங்கிய காகிதம் தினமும் என்னோடு பேசுகிறது.


அவள் பேசிய வார்த்தைகள்தான் காலத்துடன் சண்டைபோட்டு என்னை அவ்வப்போது மீட்டு வந்தன. ஆனால் அவளுடைய வார்த்தைகளை காலம் என் டைரிக்குள் போட்டுப் பூட்டிவிட்டது. நான் என்ன செய்வேன்? அவள் நின்ற இடம், பேசிய இடம் என்று ஒவ்வொரு இடமாகத் தேடித் தேடிப் போகிறேன். அங்கே உள்ள காற்றை சுவாசிக்கிறேன். இங்கேதானே என் தேவதை சுவாசித்திருப்பாள். அவள் பதிவு செய்து கொடுத்த பாடல் கேசட் பெட்டியில் உறங்கிகொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு முறை எடுத்துப் பார்க்கும்போதும் மனம் நடுங்குகிறது. இங்குதானே அவள் தொட்டிருப்பாள், கேசட்டைத் தடவிப்பார்க்கின்றேன்.
அவள் எனக்காக எழுதிய வாழ்த்து அட்டை படபடக்கிறது. படிக்க தெம்பில்லை. கீழே சட்டை, அது அவளோடு முதல் முதலாகப் பேசியபோது அணிந்திருந்தது, அப்படியே இருக்கிறது துவைக்காமல், பொக்கிசமாக! எடுத்து அணைத்துக்கொள்கிறேன். அவள் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. சட்டையை கீழே வைக்கிறேன், சட்டைதான் என்னைப்பார்த்து சிரிக்கிறது. வேகமாக டைரியை எடுக்கிறேன். அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே, இடையே இடையே அவள் கையெழுத்துக்களும், டைரியைத் திறக்கமுடியவில்லை.டைரியை வைத்துவிட்டு எப்போதும் போல நினைத்துக் கொள்கிறேன், என்றாவது ஒருநாள் அவள் வருவாள், வந்து அவளே படித்துக்காட்டுவாள்.

அதுவரைக்கும் நான் என்ன செய்வேன்? காலத்தை யாராவது நிறுத்திவையுங்களேன்!

!!!

Tuesday, June 22, 2010

ஏ டன்டனக்கா ஹே!

ஏ டன்டனக்கா ஹே!
ஏ டனக்கு நக்கா ஹே!
ஏ பகுத் அச்சா ஹே!



ஏ அச்சா..அச்சா...பகுத் அச்சா...
ஏ மச்சான் மச்சான் ஒன்ணுமில்லடா மிச்சம்!



டேய் ஷாருக்கு உன்கிட்டே இல்லடா சரக்கு!
டேய் சல்மானு நீ இனிமே வெறும்மானு!
டேய் அக்சை உனக்கு கிடையாது மீசை!
டேய் ஹிர்த்திக்கு ரோஷன் உனக்கு வேணும்டா கொஞ்சம் ரோசம்!



வந்துட்டேண்டா டீஆரு, இனி
உங்களுக்கெல்லாம் டெர்ரரு!
நான் இனிமே பாலிவுட்டு ஸ்டாரு


ஏ டண்டனக்கா ஏ டனக்கு நக்கா...!


பி.கு.: இந்திப்படத்தில் நடிக்கிறார் டி. ராஜேந்தர்- சினிமா செய்திக்குறிப்பு




Sunday, June 20, 2010

ஐசு....ஐசு....! இது நியாயமா மணி சார்?




ஐஸ்வர்யா ராய் உலக அழகிதான் ஒத்துக்கிறேன், உண்மையிலேயே இந்தமாதிரி ஒரு அழகான பெண்ண பாக்க முடியாதுதான்... அதுக்காக?
ராவணண் விமர்சனம் பாத்தா ஒருத்தர் பாக்கியில்ல, எல்லாரும் சொல்லிவெச்ச மாதிரி ஜொல்ளியிருக்காங்க, சில விமர்சனங்கள்ல மணி சாருக்கே அடிவிழுந்திருக்கு, ஆனா பாருய்யா இந்தப் புள்ள தப்பிச்சிருச்சு! ஐசு அப்பிடி நடிக்குது, இப்ப்டி நடிக்குதுன்னு ஆளாளுக்கு எடுத்து விட்டுருக்காங்க!எனக்கும் அந்தப் புள்ளைய புடிக்கத்தான் செய்யும் ஆனா ஒரு சம்பவத்துக்கு அப்பறம் ஐசை சினிமவுல பாக்க புடிக்கவே மாட்டேங்குது!

அது என்ன சம்பவம் அது இதுன்னு பயந்துடாதீங்க! அது படத்துல வர்ர சீனுதான். ஜீன்ஸ் படத்துல அன்பே அன்பே பாட்டு எல்லாரும் பாத்திருப்பீங்க, நம்ம வைரமுத்து அண்ணனும் ஏகத்துக்கு ஜொள்ளியிருப்பாரு, அது பரவாயில்லங்க நம்ம எல்லாரும் அப்பப்ப பண்ணிக்கறதுதான் (கீழே உள்ள பாட்டு வரிகள்ல, முக்கியமா இரண்டாவது வரிய உண்மையிலயே ஐஸ்ச நெனச்சா வைரமுத்து எழுதியிருப்பாருன்னு நெனக்கிறீங்க?), ஆனா அந்தப்புள்ள இந்தப் பாட்டுல அய்யோ சகிக்க முடியல. என்னான்னு கொஞ்சம் வெளக்கமா பாப்போமா?

"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன், அடடா பிரம்மன் கஞ்சனடி"
இந்த வரி வரும்போது ஐசு சும்ம இடுப்ப ஆட்டிக்கிட்டு இருக்கும், ஒன்ணும் பிரச்சனையில்ல, அடுத்த வரில தான் மேட்டரே!

"சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன், ஆஹா அவனே வள்ளலடி"

இதுக்கு ஐசு சும்மா வெக்கப்பட்டு ஒரு சிரி சிரிச்சுட்டு மூஞ்சிய மூடிக்கிட்டு ஓடனும், ஆனா படத்துல ஒருமாதிரி கேவலமா பன்ணியிருக்கும் பாருங்க, அதப் பாத்த அன்னியோட ஐசு படம் பாக்குறத அடியோட விட்டுட்டேன்!

என்னய்யா ரியாக்சன் அது? சும்மா குருப் டான்சர்கள்ல நாலாவது வரிசைல மூனாவது புள்ளையக் கூப்புட்டாக் கூட அதவிட சூப்பரா நளினமா அசத்தியிருப்பா! ஐசு கிட்ட இருந்து அப்பிடி ஒரு மட்டமான ஆக்சன நாங்க எதிர்பாக்கவே இல்ல. என்ன பண்ண்றது, ஆண்டவன் ஒண்ண கொடுத்தா இன்னொன்ன எடுத்துடறான்! அதுல இருந்து இப்போ வரைக்கும் ஐசுக்கும் நடிப்பு வரும்னு நாங்க நம்புறதே இல்லீங்கோ.

ஐசு அழகுதான் ஆனா நடிகையா ரசிக்க முடியல. நாங்கள்லாம் இன்னமும் ஐசை ஒரு மாடலாத்தான் பாக்குறோம். அதுக்குத்தான் அவங்க லாயக்கு!

சினிமாவுல நளினமா அழகா நடிக்க எத்தனையோ சிட்டு சிட்டா புள்ளைங்க இருக்கும்போது மணி இப்பிடி பண்ணுவது நியாயமா? இப்பிடியே பண்ணிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் மணி சார்?

???